அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ஆந்திரா மாநிலத்துக்கு விஜயவாடா அருகில் புதிய தலைநகரம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!…

ஆந்திரா மாநிலத்துக்கு விஜயவாடா அருகில் புதிய தலைநகரம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!…

ஆந்திரா மாநிலத்துக்கு விஜயவாடா அருகில் புதிய தலைநகரம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!… post thumbnail image
ஐதராபாத்:-ஆந்திரா மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதும், அந்த புதிய மாநிலத்தின் தலைநகராக ஐதராபாத் அறிவிக்கப்பட்டது.இதையடுத்து ஆந்திரா மாநிலத்துக்கு புதிய தலைநகரை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த புதிய தலைநகரை சிங்கப்பூருக்கு இணையாக நவீன வசதிகளுடன் உருவாக்கும் முயற்சிகளில் ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.முன்னதாக ஆந்திராவின் புதிய தலைநகரை எங்கு அமைப்பது பற்றி ஆய்வு செய்ய சிவராமகிருஷ்ணன் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி ஆந்திரா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு நடத்தி அரசுக்கு பரிந்துரை அறிக்கை வழங்கியது.

அந்த கமிட்டி தெரிவித்த பரிந்துரையில், ஆந்திராவுக்கு 3 இடங்களில் தலைநகரம் அமைக்கலாம் என்று கூறி இருந்தது. நவீன தொழில்நுட்ப உதவியுடன் 3 இடங்களிலும் தலைநகரை செயல்படுத்த முடியும் என்று அந்த கமிட்டி கூறி இருந்தது.ஆனால் முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு இதை ஏற்கவில்லை. அரசு பணிகள் துரிதமாக நடைபெற வேண்டுமானால் அனைத்து துறைகளும் ஒரே இடத்தில்தான் அமைய வேண்டும் என்று அவர் திட்டவட்டமாக கூறிவிட்டார்.இதையடுத்து புதிய தலைநகரை எங்கு அமைப்பது என்பது பற்றி கடந்த திங்கட்கிழமை சந்திரபாபு நாயுடு அமைச்சர்களுடனும், அரசு உயர் அதிகாரிகளுடனும் சுமார் 5 மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினார். முடிவில் விஜயவாடா அருகில் புதிய தலைநகரை அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.விஜயவாடா–  குண்டூர் இடையே புதிய தலைநகரம் உருவாக்கப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்– மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று ஆந்திர சட்டசபையில் வெளியிட்டார்.

விஜயவாடா நகரை சுற்றி புதிதாக 3 நகரங்கள் மிகவும் நவீன வசதிகளுடன் அமைக்கப்படும். அந்த 3 நகரங்களும் ஒருங்கிணைக்கப்படும். இது தவிர விஜயவாடா அருகில் சிறு, சிறு நகரங்களும் ஏற்படுத்தப்படும்.இதற்காக விஜயவாடா புறநகர் பகுதியில் உள்ள நிலத்தை கையகப்படுத்த குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுவினர் விவசாயிகளுடன் பேச்சு நடத்தி புதிய நகரங்களை உருவாக்க தேவையான நிலம் பெறுவார்கள்.விஜயவாடா பகுதியில் புதிய தலைநகரம் ஏற்படுத்துவது பற்றி முறைப்படி மத்திய அரசுக்கு ஆந்திர மாநில அரசு தகவல் அனுப்பும். மத்திய அரசு ஒப்புதல் கிடைத்ததும் விஜயவாடாவை நவீனப்படுத்தும் பணி தொடங்கும்.புதிய தலைநகருக்கு உதவும் வகையில் அமைக்கப்படும் சிறு நகரங்கள் விஜயவாடா– குண்டூர் இடையே அமையும் என்று கூறப்படுகிறது. இதனால் விஜயவாடா – குண்டூர் சுற்றுப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி