செய்திகள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 36 வீரர்கள் காயம்…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 36 வீரர்கள் காயம்…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 36  வீரர்கள் காயம்… post thumbnail image
அவனியாபுரம்:-மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வருடந்தோறும் தைப்பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு மிக விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது.

காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டில் பங்கேற்க திருச்சி, புதுக்கோட்டை, சோழவந்தான், மன்னாடி மங்கலம், ஆவியூர், சோளாங்குருணி, அவனியாபுரம், மதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன.கால்நடை மருத்துவர்கள் மற்றும் பிராணிகள் நல வாரியத்தால் காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு 460 காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்கு தகுதியானது என சான்றளிக்கப்பட்டது. இதேபோல் 335 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க பதிவு செய்திருந்தனர். ஆனால் இவர்களில் 106 பேர் மட்டுமே தகுதியுடன் இருப்பதாக அனுமதிக்கப்பட்டனர்.

காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. முதலில் கிராம மாடுகள், கோவில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். சில காளைகள் வீரர்களின் கையில் சிக்காமல் திமிறிக் கொண்டு ஓடியது. முரட்டுக் காளைகள் வீரர்களின் வயிற்றை பதம் பார்த்தன. ஆனாலும் சில காளையர்கள் நேருக்கு நேர் நின்று காளைகளை அடக்கினர். இதில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு பீரோ, கட்டில், சைக்கிள், வெள்ளி காசுகள், மின் விசிறி உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல் வீரர்களின் கையில் சிக்காமல் விளையாட்டு காட்டிய மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ளைகள் முட்டி தள்ளியதில் 36 மாடுபிடி வீரர்கள் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவனியாபுரத்தை சேர்ந்த முருகன் (வயது 36), மதுபாலன் (25), சீமான் (24), நடுமுதலைக் குளத்தை சேர்ந்த பூமாணிக்கம், உசிலம்பட்டி பிரசாத், மதுரையை சேர்ந்த புண்ணியமூர்த்தி ஆகிய 6 பேர் ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னதாக ஜல்லிக்கட்டு விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் கிரண்குராலா, வருவாய்த் துறை அதிகாரி சிற்றரசு, கோட்டாட்சியர் ஆறுமுக நயினார், திருப்பரங்குன்றம் தாசில்தார் கங்காதரன், அவனியாபுரம் கிராம நிர்வாக அதிகாரி செந்தில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காண்பதற்காக வெளி மாவட்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். ஆனால் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு போதிய வசதிகள் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் போலீசார் கெடுபிடியின் காரணமாக அவர்களால் ஜல்லிக்கட்டை முழுமையாக காண முடியவில்லை. பொதுமக்களை விட போலீசார் அதிகமாக இருந்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி