செய்திகள்,முதன்மை செய்திகள் மாணவியை திருமணம் செய்த ஆசிரியர் கைது…

மாணவியை திருமணம் செய்த ஆசிரியர் கைது…

மாணவியை திருமணம் செய்த ஆசிரியர் கைது… post thumbnail image
தர்மபுரி:-தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் சின்னம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் பாட ஆசிரியராக பணிபுரிந்தவர் ஆறுமுகம் (வயது 37). இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவருடைய மனைவி வேறு ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை பார்க்கிறார். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆறுமுகம், தான் பணிபுரியும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த 15 வயது மாணவியை மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு புகார் சென்றது. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு பள்ளி தலைமை ஆசிரியருக்கு கல்வித்துறை உத்தரவிட்டது.அதன்பேரில் தலைமை ஆசிரியர் பழனிச்சாமி மாணவியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி, அறிக்கையை கல்வித் துறைக்கு அனுப்பினார். இதைத்தொடர்ந்து ஆசிரியர் ஆறுமுகம் புதுப்பட்டி பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஆசிரியர் ஆறுமுகம் குறைந்தவயது (மைனர்) பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக போலீசுக்கு புகார் சென்றது. அதுகுறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட காவல்துறை உத்தரவிட்டது.விசாரணையில், மாணவியின் தந்தை இறந்துவிட்டதை அறிந்த ஆசிரியர் ஆறுமுகம், குடும்பத்தாரிடம் ஆசை வார்த்தைகள் கூறி, மாணவியை கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி அன்று 2-வது திருமணம் செய்தது தெரியவந்தது.திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பே அந்த மாணவி பள்ளிக்கு செல்வதை நிறுத்தினார். திருமணத்துக்குப் பிறகு பள்ளிக்கு சென்று மாற்றுசான்றிதழை வாங்கிக் கொண்டார். குறைந்த வயது பெண்ணை திருமணம் செய்ததாக ஆசிரியர் ஆறுமுகம் மீது, பெரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து ஆறுமுகத்தை நேற்று போலீசார் கைது செய்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி