செய்திகள் ரூ.10 ஆயிரம் கோடி நிபந்தனை ஜாமினில் சகாரா அதிபர் விடுவிப்பு!…

ரூ.10 ஆயிரம் கோடி நிபந்தனை ஜாமினில் சகாரா அதிபர் விடுவிப்பு!…

ரூ.10 ஆயிரம் கோடி நிபந்தனை ஜாமினில் சகாரா அதிபர் விடுவிப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-பிரபல தொழில் அதிபர் சுப்ரதா ராய், சகாரா குழும நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது பிற தொழில்களின் வளர்ச்சிக்காக சிறு முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் கோடி வரை இவர் திரட்டி இருந்தார். உரிய காலத்துக்கு பிறகும் முதலீட்டாளர்களுக்கு சுப்ரதா பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.இதனால், முதலீட்டாளர்கள் தங்களது ரூ.20 ஆயிரம் கோடியை திருப்பி தரக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஆஜராவதை சுப்ரதா ராய் தவிர்த்து வந்தார். இதையடுத்து, அவரை கைது செய்ய ஜாமினில் வெளிவர முடியாதபடி வாரண்டை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்தது.

இந்நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி லக்னோவில் உள்ள தனது சஹாரா சஹர் அலுவலகத்துக்கு வந்த சுப்ரதா ராயை லக்னோ போலீசார் கைது செய்து சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
விசாரணை காவலில் வைக்கப்பட்டிருந்த அவரை சிறையில் அடைக்கும்படி, மார்ச் 4-ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அவரை ஜாமினில் விடுவிக்க தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கிடையில், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு புதிய செயல் திட்டத்தை சகாரா குழுமம் நேற்று தாக்கல் செய்தது.
அதன்படி, இன்னும் 3 நாட்களில் 2 ஆயிரத்து ஐநூறு கோடியையும், வரும் ஜூன், செப்டம்பர், டிசம்பர் மாத இறுதிக்குள் மூன்று தவணைகளாக தலா 3 ஆயிரத்து 500 கோடியையும், அடுத்த (2015) ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் மீதி தொகையான 7 ஆயிரம் கோடியையும் வழங்கி, முதலீட்டாளர்களின் கடனை அடைத்து விடுவதாக உறுதி அளிக்கப்பட்டது.

நேற்றைய இந்த வாக்குறுதியில் முன்னர் தருவதாக ஒப்புக் கொண்ட தொகையை விட கூடுதலாக 3 ஆயிரம் கோடி ரூபாயை வழங்க சகாரா முன் வந்தது குறிப்பிடத்தக்கது.இதனையேற்று, சகாரா அதிபர் சுப்ரதா ராயை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்று அவரது வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டார்.இதனையடுத்து, ரொக்கமாக 5 ஆயிரம் கோடி ரூபாய், வங்கி உத்தரவாதமாக 5 ஆயிரம் கோடி ரூபாய் என மொத்தம் 10 ஆயிரம் கோடி ரூபாயை இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியமான ‘செபி’யிடம் ஒப்படைத்த பின்னர், சுப்ரதா ராய் விடுதலையாகி செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டது.
இந்த தொகையை செலுத்த வேண்டும் என்றால் மத்திய அரசு முடக்கி வைத்துள்ள சகாரா நிறுவன வங்கி கணக்குகளில் உள்ள தொகையை விடுவிக்க வேண்டும் என்று சுப்ரதா ராயின் வக்கீல் கேட்டுக் கொண்டார்.

இதனை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட், எந்தெந்த வங்கியில் உள்ள கணக்குகளை விடுவிக்க வேண்டும்? என்ற பட்டியலை சமர்ப்பிக்கும்படி தெரிவித்து, இவ்வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது.நாளை அந்த பட்டியல் கிடைத்த பின்னர், அதில் குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கில் உள்ள தொகையை விடுவிக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பிக்கும்.
அந்த கணக்குகளில் உள்ள தொகையில் இருந்து 10 ஆயிரம் கோடி ரூபாயை செபியிடம் ஒப்படைத்த பின்னர், திகார் சிறையில் இருந்து சுப்ரதா ராய் வெளியே வருவார் என தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி