திரையுலகம் எந்திரன் பார்த்தீங்களா…

எந்திரன் பார்த்தீங்களா…

robotoy

‘எந்திரன்’ திரைப்படம் வந்ததிலிருந்து தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு ‘ரோபோ’ பற்றிய தேடல் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. மனிதனுக்கு இணையாக இயந்திர மனிதனை உருவாக்க முடியுமா? என பாமர மக்கள் வியப்பில் ஆழ்வதொன்றும் ஆச்சரியமில்லையே. ஆனால் இயந்திர மனிதனை உருவாக்கும் நிறுவனங்களுக்கு இதுவொன்றும் புதிதல்ல. மனிதனுக்கு இணையாக இயந்திர மனிதனை உருவாக்கும் முயற்சிகளை அவர்கள் ஒருபோதும் கைவிடப்போவதில்லை. அந்த ஆராய்ச்சியில் ஒருசில நிறுவனங்கள் வெற்றிகண்ட போதிலும் இன்னமும் பரிட்சார்த்தமாகவே அவை இருக்கின்றன.

அந்தவகையில் அதி தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட ஜப்பான் நாட்டின் மேலதிக தொழில்நுட்ப விஞ்ஞானமும் தொழில்நுட்பத்துக்குமான தேசிய நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இயந்திர பெண்தான் எச்.ஆர்.பி.-4சி (HRP-4C). ஏற்கனவே இந்த இயந்திரப் பெண்ணை குறித்த நிறுவனம் அறிமுகப்படுத்தியபோதிலும், நேற்றைய தினம் சனிக்கிழமை ஜப்பானில் நடைபெற்ற தொழில்நுட்ப கண்காட்சியில் இந்த இயந்திர பெண் பாடலைப் பாடியதுடன் நடனமும் ஆடி பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

ஜப்பான் நாட்டின் மேலதிக தொழில்நுட்ப விஞ்ஞானமும் தொழில்நுட்பத்துக்குமான தேசிய நிறுவனம், மிகவும் பிரபல்யமானதாகும். இந்நிறுவனத்தில் சுமார் 3200 பேர் பணியாற்றுகிறார்கள். இந்நிறுவனத்தின் கண்டுபிடிப்பில் உருவாகியிருக்கும் HRP-4C இயந்திர பெண்ணை இலகுவில் எவராலும் இயக்க முடியும். இந்த இயந்திர பெண்ணை இயக்குவதற்கு தொழில்நுட்ப அறிவு அவசியமில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும்.

நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தொழில்நுட்ப கண்காட்சியில் இந்த இயந்திர பெண் சக நடன தாரகைகளுடன் பாடலிசைத்து ஆடி அசத்தியிருக்கிறது. இதனை ஆடவைக்க சாதாரண நடன அசைவுகளை தெரிவுசெய்து பதிவிட்டால் போதுமானதாகும். அதன்பின்னர் உங்கள் கட்டளைக்கிணங்க அந்த இயந்திர பெண் செயற்படுவாள்.

இந்த இயந்திர பெண்ணின் வடிவமைப்பாளர்கள் குறிப்பிடுகையில்… ‘இந்த இயந்திர பெண்ணுக்கு எங்களுடைய நிறுவனத்தின் பிரத்தியே மென்பொருள்களை உட்புகுத்தியிருக்கிறோம். அதன் உதவியுடன் பாடவும் ஆடவும் முடியும். எதிர்காலத்தில் பெஷன் ஷோவிலும் இந்த இயந்திர பெண்ணினை ஈடுபடுத்தவிருக்கிறோம். இயந்திர பெண்ணின் அழகிய ‘கற்வோர்க்’இனை கூடிய சீக்கிரம் நீங்கள் காண்பீர்கள். அதுமட்டுமல்லாமல் மனித உணர்வுகளை முகத்தினில் காட்டும் தொழில்நுட்பத்தினையும் உருவாக்கி வருகிறோம். இனிமேல் இந்த இயந்திர பெண் பாடும்போது முகபாவனையையும் சேர்த்து வெளிப்பிடுத்துவாள்…’ என நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

மனிதனுக்கு இணையாக இயந்திர மனிதர்களை உருவாக்குவதன் மூலம் நன்மை நடந்தால் சரிதான். ‘எந்திரன்’ திரைப்படம்போல் விபரீதமாக ஆகாமல் விட்டால் நன்மையே.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி