செய்திகள்,திரையுலகம் ஞான கிறுக்கன் (2014) திரை விமர்சனம்…

ஞான கிறுக்கன் (2014) திரை விமர்சனம்…

ஞான கிறுக்கன் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
திருவாரூர் மாவட்டத்தில் ஏழ்மையான குடும்பத்தில் கணவன்-மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள் டேனியல் பாலாஜி-செந்தில் குமாரி தம்பதியர். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் செந்தில் குமாரிக்கு கோவில் திருவிழாவிற்கு செல்லும்போது அங்கேயே குழந்தை பிறந்து விடுகிறது.இந்த குழந்தை பிறந்தவுடனேயே டேனியல் பாலாஜி பித்து பிடித்தவர்போல் நடந்து கொள்கிறார். தனது கணவர் இதுபோல் ஆன சூழ்நிலையில், செந்தில் குமாரி தனிமையாக கஷ்டப்பட்டு தனது மகனான ஜெகாவை வளர்த்து பெரியவனாக்குகிறாள்.

பெரியவனாகி பள்ளிக்கு செல்லும் ஜெகா, பள்ளித் தேர்வில் தோல்வியடைகிறான். இது அம்மாவுக்கு தெரிந்தால் தன்னை அடிப்பார் என்று நினைத்து, அந்த ஊரை விட்டே ஓடிவிடுகிறான்.
திருச்சிக்கு செல்லும் ஜெகா, அங்கு ஒரு ஓட்டலில் வேலைக்கு சேருகிறான். சில வருடங்கள் கழித்து வேலை பார்த்து சம்பாதித்த பணத்தை எடுத்துக் கொண்டு 6 நாள் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு செல்கிறான்.
தாயை சந்தித்து, தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் அவரிடம் கொடுத்து அவரை சந்தோஷப்படுத்துகிறான். இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த தனது மாமாவின் மகளான அர்ச்சனா கவியை காதலிக்கிறார் ஜெகா. அவளும் ஜெகாவை மனதார காதலிக்கிறாள்.6 நாள் விடுமுறை கழிந்த நிலையில், மீண்டும் திருச்சிக்கு செல்லும்போது, தனது மோதிரத்தை நினைவுப் பரிசாக காதலிக்கு கொடுத்துவிட்டு செல்ல பார்க்கிறார் ஜெகா. இது, ஜெகாவின் அம்மாவுக்கு தெரிந்து விடுகிறது. அர்ச்சனா கவியின் வீட்டுக்கு சென்று அவளையும், அவள் குடும்பத்தையும் தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்துகிறாள் செந்தில் குமாரி. இதனால் இவர்களது காதல் முறிந்து போகிறது.

மனவேதனையடைந்த நாயகன் திருச்சிக்கு மீண்டும் வேலைக்கு வருகிறார். அங்கு அவரின் முதலாளிகளில் ஒருவர் அவரை வேலையில் இருந்து நீக்குகிறார். வேலை இல்லாத சூழ்நிலையில், வேலை தேடி சென்னைக்கு செல்கிறார் ஜெகா.அங்கு இரவு தங்க வழியில்லாமல் நகரத்தையே சுற்றி வருகிறார். அப்போது, ஒரு பெண்ணை மர்ம கும்பல் ஒன்று துரத்தி வருகிறது. அவர்களிடமிருந்து அந்த பெண்ணை காப்பாற்றுகிறார் ஜெகா.அவளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் தன்னுடனயே அழைத்துக் கொண்டு செல்கிறார் ஜெகா. இவர்களுக்கு தம்பி ராமையா அடைக்கலம் கொடுக்கிறார். தம்பி ராமையாவிடம் அந்த பெண்ணை தனது தங்கை என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார் ஜெகா.ஆனால், ஒரு சில நாட்களிலேயே அந்த பெண் கர்ப்பமடைந்திருப்பது தம்பி ராமையாவிற்கு தெரிய வருகிறது. இதனால், ஜெகா மீது நம்பிக்கையில்லாமல் அவரை வார்த்தைகளால் காயப்படுத்துகிறார். இதைப்பற்றி எதுவுமே தெரியாத ஜெகா, இதற்கெல்லாம் யார் காரணம் என்று தெரியாமலே விழிக்கிறார்.இறுதியில் ஜெகா, அந்த பெண்ணின் கர்ப்பத்துக்கு காரணமானவனை கண்டுபிடித்தானா? தம்பிராமையாவுக்கு தான் நேர்மையானவன் என்பதை நிரூபித்தானா? என்பதே மீதிக்கதை.

ஞானக்கிறுக்கன் என்ற படத்தின் தலைப்பையும், போஸ்டரையும் பார்த்தவுடனேயே டேனியல் பாலாஜிக்குத்தான் இப்படத்தில் முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்த்து சென்றால், அதற்கு எதிர்மாறாக இருக்கிறது. படத்தில் டேனியல் பாலாஜி ஒரு சில காட்சிகளே வருகிறார். மற்றபடி ஜெகாதான் படம் முழுக்க வருகிறார். டேனியல் பாலாஜி சில காட்சிகளே வந்தாலும் கைதட்டல் பெறுகிறார். இதுமாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு டேனியல் பாலாஜிக்கு சொல்லித்தர தேவையில்லை.
நாயகன் ஜெகாவுக்கு படம் முழுக்க பயணம் செய்கிற அளவுக்கு அழுத்தமான கதாபாத்திரம். அழகாக பண்ணியிருக்கிறார். காதலியுடன் நெருக்கமாக ஆடிப்பாடும் காட்சிகளிலும் அழுத்தம் பதித்திருக்கிறார்.
நாயகி அர்ச்சனா கவி திரையில் அழகாக பளிச்சிடுகிறார். நாயகனுக்கு அம்மாவாக வரும் செந்தில் குமாரி நடிப்பில் உச்சம் தொடுகிறார். ஒரு கிராமத்து பெண் வேடத்துக்கு அழகாக பொருந்தியிருக்கிறார். தம்பி ராமையா தனக்கே உரித்தான நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

ஞான கிறுக்கன் என்ற தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமில்லாததுபோல் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் இளையதேவன். இருப்பினும் படத்தின் கதையை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கொடுத்து சொல்லியிருந்தால் கொஞ்சம் ரசித்திருக்கலாம். ஏதோ டாக்குமென்டரி பிலிம் பார்த்தது போன்ற உணர்வை கொடுத்திருக்கிறார்.படத்திற்கு மிகப்பெரிய பலமே தாஜ்நூரின் இசைதான். இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கின்றன. பின்னணி இசையும் தூள். செல்வகுமாரின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளை அழகாக படமாக்கியிருக்கிறது. படத்தில் பெரும்பாலான காட்சிகளை இவரது கேமரா அழகாக படமாக்கியிருக்கிறது.

மொத்தத்தில் ‘ஞானகிறுக்கன்’ கிறுக்கன்………….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி