செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் மீண்டும் படமாகும் ரத்தக்கண்ணீர்…

மீண்டும் படமாகும் ரத்தக்கண்ணீர்…

மீண்டும் படமாகும் ரத்தக்கண்ணீர்… post thumbnail image
எம்.ஆர்.ராதா நடித்து 1954–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘ரத்தக்கண்ணீர்’. எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.என்.ராஜம், ஸ்ரீரஞ்சனி, சந்திரபாபு, போன்றோரும் நடித்து இருந்தனர். மேற்கத்திய கலாசார நாகரீக மோகத்தில் திரியும் இளைஞன் பெற்ற தாயையும் மனைவியையும் இழிவு படுத்தி ஒதுக்குவதும் பிறகு தொழு நோய்க்கு ஆளாகி உருக்குலைந்து போவதுமே கதை.

இப்படத்தில் இடம் பெற்ற குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி ஏது என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் கலக்கியது. இப்படம் தற்போது மீண்டும் ரீமேக் செய்யப்படுகிறது.

இது குறித்து எம்.ஆர்.ராதாவின் பேரனும் எம்.ஆர்.ஆர்.வாசுவின் இளைய மகனுமான எம்.ஆர்.ஆர்.வாசுசதீஷ் அளித்த பேட்டி வருமாறு:–

எம்.ஆர்.ராதாவின் காவிய நாடகமான ரத்தக் கண்ணீர் 1940–ல் இருந்து மேடை நாடகமாக நடத்தப்பட்டது. புரட்சிகரமான சமூக கருத்துடன் வந்த இந்த நாடகம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

பிறகு 1954–ல் ரத்தக்கண்ணீர் என் தலைப்பில்லேயே எம்.ஆர்.ராதா நடித்து திரைப்படமாகவும் வெளி வந்து வெற்றிகொடி நாட்டியது. அதே கால கட்டத்தில் எம்.ஆர்.ராதா ரத்தக்கண்ணீர் நாடகத்தை மீண்டும் பல நாடுகளில் நடத்தி வெற்றி கண்டார். அதன்பிறகு என் தந்தை எம்.ஆர்.ஆர்.வாசு மற்றும் ராதாரவியும் இந்த நாடகத்தில் நடித்தனர். தற்போது மூன்றாவது தலைமுறையாக நானும் ரத்தக்கண்ணீர் நாடகத்தை வெற்றிகரமாக அறங்கேற்றம் செய்ய உள்ளேன். அடுத்த மாதம் சென்னையில் இந்த நாடகம் நடத்தப்படும். பிறகு வெளிநாடுகளிலும் நடத்துவோம். தொடர்ந்து ரத்தக்கண்ணீரை மீண்டும் படமாக்குவதற்கான வேலைகளையும் துவங்க உள்ளேன். எம்.ஆர்.ராதா வேடத்தில் நானே நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். பிற நடிகர், நடிகைகள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரத்தக் கண்ணீர் இந்த கால கட்டத்துக்கும் பொருத்தமானதாக உள்ளது. எனவே இப்படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி