செய்திகள்,பரபரப்பு செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் இந்தியாவில் 30 நிமிடத்துக்கு ஒரு பெண் கற்பழிப்பு!…சர்வே தகவல்…

இந்தியாவில் 30 நிமிடத்துக்கு ஒரு பெண் கற்பழிப்பு!…சர்வே தகவல்…

இந்தியாவில் 30 நிமிடத்துக்கு ஒரு பெண் கற்பழிப்பு!…சர்வே தகவல்… post thumbnail image
புதுடெல்லி:-காமன்வெல்த் மனித உரிமைகள் ஆற்றல் நிறுவனம் இந்தியாவில் கடந்த 2001 முதல் 2013–ம் ஆண்டு வரை பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் குறித்து சர்வே நடத்தியது. குறிப்பாக பெண்கள் கற்பழிப்பு விகிதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தியது.அதில் தினமும் 30 நிமிடத்துக்கு ஒரு பெண் காமுகர்களால் கற்பழிக்கப்படுவது தெரிய வந்துள்ளது. கடந்த 13 வருடங்களில் நாட்டில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 844 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளன.

அவற்றில் டெல்லியில் மட்டும் 8,060 கற்பழிப்புகள் நடந்துள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு நாடு முழுவதும் 56 கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதற்கிடையே 2001–ம் ஆண்டில் மட்டும் 16,075 கற்பழிப்பு வழக்குகளும், 2013–ம் ஆண்டில் 33,707 வழக்குகளும் பதிவாகி உள்ளன. இது 52.30 சதவீதம் அதிகமாகும்.மராட்டியத்தில் கற்பழிப்பு வழக்குகள் 135 சதவீதம் கூடுதலாக பதிவாகி உள்ளது. அங்கு 2001–ம் ஆண்டில் 1,302 வழக்குகளும், 2013–ம் ஆண்டில் 3,063 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கர்நாடகம், ராஜஸ்தான், உத்ரகாண்ட், குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த 2001–ம் ஆண்டில் 2 மடங்கு கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன.

2013–ம் ஆண்டில் பாலியல் வன் கொடுமை (கற்பழிப்பு) சட்டம் திருத்தப்பட்டது. அதை தொடர்ந்து மேற்கண்ட மாநிலங்களில் இது குறித்த வழக்குகள் அதிக அளவில் போலீசாரால் பதிவு செய்யப்பட்டன. சட்ட திருத்தத்துக்கு பிறகு மே.வங்காளத்தில் கற்பழிப்பு குற்றங்கள் குறைந்துள்ளன. 2012–ம் ஆண்டில் 2046 ஆக இருந்த கற்பழிப்பு சம்பவம் 2013–ம் ஆண்டில் 1685 ஆக குறைந்து இருந்தது.13 ஆண்டு காலத்தில் மத்திய பிரதேசத்தில் மிக அதிகமாக 40,422 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் இங்கு நாள் ஒன்றுக்கு 8 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளது. இது மே.வங்காளத்தை விட 44 சதவீதமாகும். அதே நேரத்தில் மே. வங்காளத்தில் 22,472 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது சராசரியாக நாள் ஒன்றுக்கு 5 கற்பழிப்பு சம்பவம் நடந்து இருப்பதை சுட்டிக் காட்டுகிறது.

உத்தரபிரதேசத்தில் 22,108 கற்பழிப்பு வழக்குகளும், மராட்டியத்தில் 21,049 வழக்குகளும், ராஜஸ்தானில் 19,083 வழக்குகளும் பதிவாகியுள்ளன. மத்திய பிரதேசம், மே.வங்காளம், உத்தரபிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்கள் கற்பழிப்பு சம்பவத்தில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.
டெல்லியில் 8,060 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தமிழ்நாடு (7,875 வழக்குகள்), கர்நாடகா (6,204), குஜராத் (4,981) ஆகிய மாநிலங்களை விட அதிக அளவாகும்.2012–ம் ஆண்டில் 1 லட்சத்து ஆயிரத்து 41 வழக்குகளும், 2013–ம் ஆண்டில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 785 வழக்குகளும் விசாரணைக்கு வந்தன. அதில் 2013–ம் ஆண்டில் 14,717 வழக்குகளும், 2013–ம் ஆண்டில் 18,833 வழக்குகளும் விசாரணை முடிக்கப்பட்டன.
2012–ம் ஆண்டில் 3,563 பேருக்கு கற்பழிப்பு வழக்கில் தண்டனை கிடைத்தது. அதே நேரத்தில் 2013–ம் ஆண்டில், 5,101 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது என்றும் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி