செய்திகள்,திரையுலகம் அம்மா அம்மம்மா (2014) திரை விமர்சனம்…

அம்மா அம்மம்மா (2014) திரை விமர்சனம்…

அம்மா அம்மம்மா (2014) திரை விமர்சனம்… post thumbnail image
திருமணம் ஆகி 15 வருடங்களாக குழந்தைகள் இல்லாத தம்பதிகளாக சம்பத்,சரண்யா. இவர்கள் குழந்தை வரம் வேண்டி கோவில் கோவிலாக சுற்றி வருகிறார்கள்.ஒருநாள் கோவிலில் வைத்து ஆனந்த்,தேவதர்ஷினி தம்பதியினரை சந்திக்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே இருவர் குடும்பத்திற்கும் நட்பு ஏற்படுகிறது. தேவதர்ஷினிக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

இந்நிலையில், இரண்டாவது குழந்தை பிரசவத்தின்போது தேவதர்ஷினி இறந்துவிடுகிறார். தாய் இல்லாத அந்த குழந்தையை வைத்து மிகவும் கஷ்டப்படுகிறார் ஆனந்த்.அப்போது சம்பத்-சரண்யா தம்பதியர் ஆனந்திடம் சென்று இரண்டாவது குழந்தையை நாங்கள் வளர்க்கிறோம் என்று மிகவும் பணிவோடு கேட்கிறார்கள். ஆனந்தும் இதற்கு சம்மதித்து அவர்களிடம் குழந்தையை கொடுக்கிறார்.ஆனால் தனது அம்மாவே மீண்டும் குழந்தையாக வந்து பிறந்திருப்பதாக நினைக்கும் ஆனந்தின் மகன் அந்த குழந்தையை வீட்டுக்கு அழைத்து வரும்படி தனது தந்தையிடம் அடம்பிடிக்கிறான். ஆனால், ஆனந்த் அந்த குழந்தையை கூட்டிக் கொண்டு வராமல் தனது மகனை ஏமாற்றி வருகிறார்.

ஆனந்திடம் வாங்கிச் சென்ற அந்த குழந்தையை சரண்யா மிகுந்த பாசத்துடன் வளர்த்து வருகிறார். அவளுடைய அரவணைப்பில், அவளையே தாயாக நினைத்து வளர்கிறது அந்த குழந்தை.இதையடுத்து, ஆனந்தின் மகன், தனது தாயுடைய தங்கையின் உதவியோடு, தனது தங்கையை சரண்யாவிடமிருந்து மீட்டு, தன் வீட்டிற்கு அழைத்துவர முயற்சி செய்கிறான். இறுதியில்? சரண்யா தனது உயிராக நினைத்து வளர்த்துவரும் அந்த குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.குழந்தை இல்லாத தம்பதிகளாக வரும் சம்பத்-சரண்யா பொன்வண்ணன் இருவரும் தங்களுக்கு குழந்தையில்லையே என்ற தவிப்பை தங்களது அனுபவ நடிப்பால் அழகாக வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

குறிப்பாக, சரண்யா குழந்தை இல்லையே என்ற தவிப்பாகட்டும், குழந்தையை அன்போடு வளர்ப்பதாகட்டும் பாசத்தை வெளிப்படுத்துவதில் திறமையாக நடித்திருக்கிறார். படத்தில் கொஞ்சம் இளமையாகவும் இருக்கிறார். சம்பத்துக்கு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு குறைவே. சரண்யாவிடம் வளரும் குழந்தையாக நடித்துள்ள சிறுமியும், தேவதர்ஷியின் மகனான சிறுவனும் அழகாக நடித்திருக்கிறார்கள்.இன்னொரு நாயகியாக வரும் தேவதர்ஷினி சிறிது நேரமே வந்தாலும் நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார். அவருடைய கணவராக வரும் ஆனந்தும் தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.மோகமுள், பாரதி, பெரியார் ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ள பாலு மணிவண்ணன் படத்தை இயக்கியிருக்கிறார். தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தாய் பாசத்தை மையப்படுத்தி இப்படத்தை எடுத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம். படத்தின் திரைக்கதையில் மட்டும் சற்று தொய்வை ஏற்படுத்தியிருக்கிறார்.எம்.பி.ரகுவின் இசையில் பின்னணி இசை படத்திற்கு பலம் கூட்டியிருக்கிறது. பாடல்களும் பரவாயில்லை. கே.வி.ரமணி ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சிகளும் அழகாக இருக்கின்றனர்.

மொத்தத்தில் ‘அம்மா அம்மம்மா’ தாயின் பாசப்போராட்டம்……

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி