செய்திகள்,முதன்மை செய்திகள் பாம்பன் பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்…

பாம்பன் பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்…

பாம்பன் பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்… post thumbnail image
மதுரை:-பாம்பன் ரெயில் பாலத்தை குண்டு வைத்து தகர்க்க உள்ளதாக வந்த கடிதத்தால் அந்த பாலத்துக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர்.இதுகுறித்து மதுரை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு இலங்கேசுவரன் கூறியதாவது:-

சென்னையில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் ஐ.ஜி. கட்டுப்பாட்டு அறைக்கு வந்த கடிதத்தில், பாம்பன் பாலம் குண்டு வைத்து தகர்க்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.அதனை தொடர்ந்து அந்த பகுதியில் ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். இதற்காக பாம்பன் பாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர்.மதுரையில் இருந்து ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசாரும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.மதுரை கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் சுகுமாரன் கூறியதாவது:-

சென்னையில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை கட்டுப்பாட்டு அறைக்கு ராம்நாட் நியூஸ் என்ற பெயரில் ஒரு கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தில், தீவிரவாத இயக்கத்தலைவன் வி.மருதுபாண்டியன் பாம்பன் ரெயில் பாலத்தை மார்ச் 14-ந்தேதி தகர்க்கப்போகிறான் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.இவர் மதுரையில் உள்ள தனியார் ரப்பர் தொழிற்சாலையில் வேலைபார்த்து வருகிறார் என்றும் அந்த கடிததத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த கடிதத்தின் உண்மைத் தன்மை குறித்தும், அதில் குறிப்பிட்டுள்ள நபர் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி