செய்திகள்,திரையுலகம் 300 பருத்தி வீரர்கள் – பாகம் 2 (2014) திரை விமர்சனம்…

300 பருத்தி வீரர்கள் – பாகம் 2 (2014) திரை விமர்சனம்…

300 பருத்தி வீரர்கள் – பாகம் 2 (2014) திரை விமர்சனம்… post thumbnail image
பெர்சியாவின் அரசனான கிங் டாரியஸுக்கு எப்படியாவது கிரேக்கத்தை தன்வசம் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை. அதற்காக கிரேக்கத்தின் எல்லையில் ஒரு கப்பல் தளத்தை தனது மகன் ஜெர்க்சீஸ் உடன் இணைந்து நிறுவுகிறான். இதை அறியும், கிரேக்க வீரனான தெமிஸ்டோகல்ஸ் இரவோடு இரவாக சென்று தனது படையுடன் அந்த கப்பல் தளத்தை அடித்து நொறுக்கி விடுகிறான். இறுதியில், ஜெர்க்சீஸும், கிங் டாரியஸும் படகில் தப்பித்து செல்லும்போது தெமிஸ்டோகல்ஸின் அம்புக்கு டாரியஸ் பலியாகிறார். தன்னுடைய அப்பா மரணத்துக்கு காரணமான கிரேக்கத்தை பழிவாங்க ஜெர்க்சீஸ் முடிவெடுக்கிறான்.

பெர்சியாவின் கப்பல் படை தளபதியாக வரும் அர்தமெசியா கிரேக்க நாட்டை சேர்ந்தவள். கிரேக்கர்களால் சிறுவயதிலேயே வேசியாக்கப்பட்ட இவள் அவர்களால் அடித்து துன்புறுத்தப்பட்டு நடுரோட்டில் தூக்கியெறியப்படுகிறாள். பெர்சியா படைவீரன் ஒருவன் அவளை காப்பாற்றி பெர்சியாவுக்கு அழைத்துச் சென்று எல்லா கலைகளிலும் சிறந்த வீராங்கனையாக மாற்றி, பெர்சியாவின் படைப்பிரிவிலும் சேர்த்து விடுகிறான். பெர்சியாவுக்காக நிறைய அரசர்களின் தலைகளை கொன்றுக் குவித்த இவளுக்கு கிரேக்கர்கள் என்றாலே சுத்தமாக பிடிக்காது. இதனால், கிரேக்கத்துக்கு எதிராக கடல் வழியாகவும், தரை மார்க்கவும் போரை தொடுக்கும் ஜெர்க்சீஸின் கப்பல் படைக்கு இவள் தளபதியாக பொறுப்பேற்கிறாள்.ஆனால், இந்த போரில் பங்கெடுக்க கிரேக்கர்களில் சிலர் தயங்குகின்றனர். ஆனால், தன்னம்பிக்கை கொண்ட தெமிஸ்டோகல்ஸ் மட்டும் இந்த போரை எப்படியாவது சந்தித்தே ஆகவேண்டும் என்று முடிவெடுக்கிறான். அதன்படி, தன்னுடைய நம்பிக்கைக்கு பாத்திரமான வீரர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு போரில் கலந்துகொள்ள செல்கிறான். கடல்வழி மார்க்கமாக தாக்குதலை தொடங்க ஆயத்தமாகும் தெமிஸ்டோகல்ஸ் வசம் சுமார் 100 படகுகளே உள்ளன. ஆனால், ஜெர்க்சீஸ் வசமோ ஆயிரத்துக்கும் மேல் படகுகள் உள்ளன.
இந்த போரில் தெமிஸ்டோகல்ஸ் பெர்சியாவின் தாக்குதலை சமாளித்தாரா? கிரேக்கர்களை பழிவாங்க வேண்டும் என்ற ஜெர்க்சீஸ் மற்றும் அர்தமெசியாவின் ஆசை நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.

தெமிஸ்டோகல்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுல்லிவான் சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷத்துடன் நடித்துள்ளார். இவரது உடலமைப்பு பிரமிக்க வைக்கிறது. படைவீரன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கப்பல் படை தளபதியாக வரும் ஈவா கிரீன் தனது நடிப்பு திறனை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு அரசனின் தலையை வெட்டி, அந்த தலையின் உதட்டுக்கு இவர் முத்தம் கொடுப்பது ஹைலைட். தன்னைத்தானே கடவுள் என்று கூறிக்கொள்ளும் ஜெர்க்சீஸ் கதாபாத்திரத்தில் நடித்த ரொட்ரிகோ சாண்டோரோ தன் கதாபாத்திரத்தை மிகவும் நன்றாக செய்துள்ளார். திமிர்த்தனமான நடையில் அழுத்தம் காட்டுகிறார்.இயக்குனர் நோம் முரோ இந்த படத்தின் முந்தைய பாகத்தைவிட இதில் நிறைய இரத்தத்தை தெளித்துள்ளார். முந்தைய பாகத்தில் தரைவழியாக போர் நடத்தி விறுவிறுப்பை ஏற்படுத்தியிருந்தார்கள். இரண்டாம் பாகத்தில் கடல் வழியான தாக்குதலை மிகவும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி வெற்றியடைந்திருக்கிறார் இயக்குனர். சுல்லிவான் குதிரையுடன் கடலில் குதித்து மற்றொரு கப்பலில் ஏறிச் செல்லும் காட்சி இதுவரை எந்த சினிமாவிலும் பார்க்காதது.
சைமனின் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டம் காட்டுகிறது. போர்க்காட்சிகளை தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார். டாம் கால்கேன்பார்க்கின் பின்னணி இசை படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது.

மொத்தத்தில் ‘300 பருத்தி வீரர்கள்’ சண்டை பிரியர்களுக்கு சிறப்பான விருந்து….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி