அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் தமிழகத்தில் ரத்ததானம் செய்து உலக சாதனை!…

தமிழகத்தில் ரத்ததானம் செய்து உலக சாதனை!…

தமிழகத்தில் ரத்ததானம் செய்து உலக சாதனை!… post thumbnail image
சென்னை:-முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில் 14-ந் தேதியன்று சென்னை, விழுப்புரம், வேலூர், சேலம், கோயம்புத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் மாபெரும் ரத்ததான முகாம்கள் நடைபெற்றன.

இதில் உலக கின்னஸ் சாதனையாக 53 ஆயிரத்து 129 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். இதற்கு முன்பு, 2010-ம் ஆண்டு இந்தியாவின் அரியானா மாநிலத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமில் 43 ஆயிரத்து 732 பேர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்ததே கின்னஸ் உலக சாதனையாக இருந்து வந்தது.தற்போது, 53 ஆயிரத்து 129 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்ததால் அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த கின்னஸ் உலக சாதனையை அங்கீகரிக்கும் வகையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில், கின்னஸ் அமைப்பு பிரதிநிதி லுசியா சந்தித்து, கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கினார். அப்போது உரையாற்றிய லுசியா கூறியதாவது:-

இந்த சாதனைச் சான்றிதழை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் வழங்குவதில் பெருமையும் சந்தோஷமும் அடைகிறேன். இந்த ரத்ததான முகாமில் 53 ஆயிரத்து 129 பேர் பங்கேற்றது, ஒரு சாதனை நிகழ்வாக அமைந்துள்ளது.இத்தனை பெரிய நிகழ்ச்சியை திறமையாக ஒருங்கிணைத்து நடத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை பாராட்டுகிறேன். தமிழகத்தின் அனைத்துப் பாகத்தில் இருந்தும் ரத்ததானம் செய்ய மக்கள் வராதிருந்தால், இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்காது.
இந்த முகாம் மூலம் 18 ஆயிரத்து 439.28 லிட்டர் ரத்தம் பெறப்பட்டுள்ளது. அநேக மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கும். ரத்த தானம் செய்வதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது அவசியம்.இவ்வாறு அவர் பேசினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி