அரசியல்,முதன்மை செய்திகள் மீண்டும் தி.மு.க வில் டி.ஆர்…

மீண்டும் தி.மு.க வில் டி.ஆர்…

மீண்டும் தி.மு.க வில் டி.ஆர்… post thumbnail image
கருணாநிதியின் அழைப்பை ஏற்று திமுக-வில் லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் இணைந்தார். லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் கட்சித் தலைவரும், நடிகர் மற்றும் இயக்குனரான டி.ராஜேந்தர் தமது கட்சியை கலைத்துவிட்டு, இன்று மீண்டும் தி.மு.க.வில் சேர்ந்தார்.. டி.ராஜேந்தர் தி.மு.க.வில் இணைந்தது குறித்து கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

திமுகவின் முக்கியப் புள்ளியாக கொள்கைப் பரப்பு செயலாளராக திகழ்ந்தவர் டி.ராஜேந்தர். எம்ஜிஆரையே கடுமையாகவிமர்சித்தவர். பின்னர் கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு கொண்டார். 1989ம் ஆண்டு நடந்த சட்டசபைத்தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதையடுத்து கட்சியிலிருந்து விலகி தாயக மறுமலர்ச்சிக் கழகம் என்றகட்சியைத் தொடங்கினார்.

பின்னர் திமுகவில் பிளவு ஏற்பட்டு வைகோ வெளியேறியதால் இதை நிரப்ப மீண்டும் திமுகவில் இணையுமாறு டி.ஆருக்கு திமுக தூது விட்டது.இதைத் தொடர்ந்து மீண்டும் திமுகவில் இணைந்தார் டி.ஆர். பின்னர் சென்னை பூங்கா நகர் தொகுதியை திமுக அவருக்கு ஒதுக்கியது. அந்தத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார் டி.ஆர். ஆனால் மறுபடியும் கட்சித்தலைமையுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

2001ம் ஆண்டு நடந்த தேர்தலில் அவருக்கு சீட்கொடுக்கப்படவில்லை. இதனால் திமுகவிலிருந்து ஒதுங்கியிருந்தார். நான் கட்சியில் இருக்கிறேனா, இல்லையா என்று பத்திரிக்கைகள் மூலம் அடிக்கடி கருணாநிதிக்கு கேள்விக் கணைகளை தொடுத்தபடி இருந்தார்.

கடந்த 2004ம் ஆண்டு அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். கடந்த 9 ஆண்டுகாலமாக லட்சிய திமுக தலைவராக செயல்பட்டு வந்தார். மீண்டும் தாய் கழகமான திமுகவில் இணைந்துள்ளார்.

திமுகவில் டி.ராஜேந்தர் இணைந்தது குறித்து அக்கட்சியின் தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், டி.ராஜேந்தர் திமுகழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து கழகத்தின் வளர்ச்சிக்காக பிரச்சார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு பின்னர் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் கழகத்தில் இருந்து விலகவேண்டிய நிலை ஏற்பட்டது. அதுகுறித்து நானும் அப்போது அறிக்கை வெளியிட்டிருந்தேன். ராஜேந்திரனும் விளக்கம் அளித்திருந்தார்.

இப்போது திமுகவின் பிரச்சார பகுதியை மேலும் வலுமைப்படுத்தும் எண்ணத்தோடு என் அன்பு அழைப்பினை ஏற்று என் விருப்பப்படி மீண்டும் திமுகவில் அவர் இணைந்துள்ளதை வரவேற்கிறேன். கழக உடன்பிறப்புகளும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று கருணாநிதி கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி