திரையுலகம் காதலிக்க எங்கே நேரம் கிடைக்கும் – ஸ்ரேயா

காதலிக்க எங்கே நேரம் கிடைக்கும் – ஸ்ரேயா

shreya in black dress

குட்டி’க்குப் பிறகு ஸ்ரேயா நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள படம் சிக்கு புக்கு’படத்துக்குப் படம் நடிப்பிலாகட்டும், அழகிலாகட்டும் மெருகேறிக் கொண்டே இருக்கும் ஸ்ரேயாவை செல்ஃபோனில் தொடர்பு கொண்டபோது அம்மணி, ‘மிட்நைட் சில்ட்ரன்ஸ்’ என்ற ஆங்கிலப் படத்தின் படப்பிடிப்புக்காக லண்டனில் இருப்பதாகவும், அங்குள்ள படப்பிடிப்பை முடித்து சென்னைக்கு வர இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும் என்று சொன்னதும் அவரிடம், “உங்களது அடுத்த மூவ் என்ன என்பதை வாசகர்களுக்காக கூறுங்களேன்?” என்றதும் ஆங்கிலம் கலந்த தமிழில் பேச ஆரம்பித்தார்.

நான் நடித்து தமிழில் வெளிவரவுள்ள படம் ‘சிக்கு புக்கு’. இதில் ஆர்யாவுடன் நடித்துள்ளேன். இந்தப் படத்தை இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் மணிகண்டன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து ஜீவாவுடன் ‘ரௌத்திரம்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறேன். இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. நான் ஏற்கனவே, ‘தி அதர் எண்ட் ஆஃப் த லைன்’, ‘குக்கிங் வித் ஸ்டெல்லா’ என இரண்டு ஆங்கிலப் படங்களில் நடித்திருப்பது உங்களுக்கெல்லாம் தெரியுமே? அந்தப் படங்களைத் தொடர்ந்து இப்போது ‘மிட்நைட் சில்ட்ரன்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறேன். அதன் படப்பிடிப்புக்காகத்தான் லண்டனில் இருக்கிறேன். ஹாலிவுட் படங்களில் நடிப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. ஹாலிவுட் கலைஞரின் நேரம் தவறாமையைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். படப்பிடிப்புக்காக சம்பந்தப்பட்டவர்களை ஒருங்கிணைப்பது, படத்தை எடுப்பது, படப்பிடிப்பு முடிந்ததும் தங்குமிடத்துக்கு திரும்புவது என எல்லாம் தெளிவானத் திட்டமிடலோடு இருக்கும். நாம் படப்பிடிப்புக்காகச் சென்ற உடனே நம் கையில் ஒரு புரோக்ராம் ஷெட்யூலை கொடுத்து விடுவார்கள். அதில் நாம் எத்தனை மணிக்கு லொகேஷனில் இருக்க வேண்டும். நாம் தோன்றும் காட்சியில் எத்தனை ஷாட். அது எந்தெந்த கோணத்தில் எடுக்கப்படும் போன்ற முழுமையான தகவல்கள் இருக்கும். இப்படி அவர்கள் கொடுக்கும் ஷெட்யூல் அட்டவணை நமது நேரத்தை நிறைய மிச்சப்படுத்தும். அதில் எந்தவொரு குழப்பமும் இருக்காது. இது எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. இந்த ஆங்கில படத்தைத் தொடர்ந்து இன்னொரு ஆங்கிலப் படத்தில் நடிக்கவும் பேசி வருகிறேன்.

அதுபோன்று மீண்டும் ஒரு மலையாளப் படத்தில் நடிக்கப் போகிறேன். ஏற்கனவே, நான் மம்முட்டி, பிருதிவிராஜ் ஆகியோருடன் ‘போக்கிரி ராஜா’ என்ற மலையாளப் படத்தில் நடித்திருந்தேன். அந்தப் படம் அங்கு நல்ல வெற்றியைப் பெறவே அடுத்து ‘கேஸனோவா’ என்ற படத்தில் மோகன்லாலுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தப் படம் அமிதாப்பச்சன் ஹிந்தியில் நடித்த ‘முகபித்தின்’ என்ற படத்தின் ரீ-மேக். இதன் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளது.

தெலுங்கில் ரவிதேஜாவுடன் ஜோடியாக நடித்த ‘டான் சீனு’ படம் எழுபத்தைந்து நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், பல தெலுங்குப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. அதில் பவன் கல்யாணுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். இது காமெடி கலந்த ஆக்ஷன் கதை. ‘டான் சீனு’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் கோபிசந்த் இயக்கும் மற்றொரு படத்தில் நடிக்கவும் கேட்டிருக்கிறார்கள்.

தெலுங்கில் இருபத்தைந்து, தமிழில் பன்னிரெண்டு, ஹிந்தியில் ஏழு, ஆங்கிலத்தில் மூன்று, மலையாளம், கன்னடம் தலா ஒரு படம் என இதுவரை நாற்பத்தி ஒன்பது படங்களில் நடித்து விட்டேன். தமிழில் ‘சிக்கு புக்கு’, ‘ரௌத்திரம்’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து இன்னும் இரண்டு படங்களில், பிரபல கதாநாயகர்களுடன் நடிப்பதற்காகப் படத்தின் கதை மற்றும் கால்ஷீட் குறித்துப் பேசி வருகிறேன். முடிவானதும் அதைப்பற்றியும் சொல்கிறேன்” என்றவரிடம், “தெலுங்குப் படத் தயாரிப்பாளர் டி.ராமநாயுடுவின் பேரன் ராணாவின் காதல் வலையில் நீங்கள் சிக்கியிருப்பதாகவும், திருமணத்திற்கு தயாராகிவிட்டதாகவும் தெலுங்குத் திரையுலகில் செய்திகள் வருகிறதே? அது பற்றி என்ன சொல்கிறீர்கள்?” என்றதும் கொஞ்சம் போல்டாக,”பார்த்தீங்களா? என்னடா இதுபோன்ற கேள்விகள் வரவில்லையே? என்று நினைத்தேன். கடைசியில் நீங்களும் கேட்டு விட்டீர்கள்! நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறேன். அப்படி இருக்கும் போது காதலிக்க எங்கே நேரம் கிடைக்கும்? ராணா நடித்த ஒரு படத்தைக்கூட நான் பார்த்ததில்லை. அவரை நேரிலும் பார்த்ததில்லை. அப்படியிருக்கும்போது எனக்கும் அவருக்கும் காதல், கத்தரிக்காய் என புரளியை கிளப்புவது உருப்படியான வேலை இல்லாதவர்களின் வேலை. ஒரு படத்தில் இணைந்து நடித்தாலோ, ஏதாவது ஒரு விழாவுக்கு ஒன்றாக வந்தாலோ இதுபோன்ற கிசுகிசுக்கள் பரவுவது சகஜம். ஆனால், நான் சந்திக்காத ஒரு நபருடன் இணைத்து பேசும்போது அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை” என்று பொங்கி வெடித்தார் ஸ்ரேயா!

அவரது கோபத்தில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி