செய்திகள்,திரையுலகம் நீ நான் நிழல் (2014) திரை விமர்சனம்…

நீ நான் நிழல் (2014) திரை விமர்சனம்…

நீ நான் நிழல் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
மலேசியாவில் தொடர்ந்து 5 கொலைகள் நடக்கிறது. இந்த கொலைகளுக்கான காரணத்தை அறிய முயற்சி செய்து வருகிறார் அந்நாட்டு போலீஸ் அதிகாரியான அன்வர். அதன்படி அவர் அந்த 5 பேர் பற்றிய தகவல்களை சேகரிக்க ஆரம்பிக்கிறார். இவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றும் பேஸ்புக்கில் இவர்களுக்கு பொதுவான நண்பராக ஆஷா பிளாக் என்னும் பெண் இருப்பதாக தகவல்களை அறிகிறார். அவள் தான் இந்தக் கொலைக்கு காரணமாக இருக்க கூடும் என்று சந்தேகப்பட்டு அவரை தேடி வருகிறார். இந்நிலையில் கோயம்புத்தூரில் எம்.எஸ்.பாஸ்கர் நடத்திவரும் ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் தன் நண்பர்களுடன் மியூசிக் பேண்டு நடத்தி வருகிறார் ரோஹித். இவருக்கு பேஸ்புக்கில் ஆஷா பிளாக் என்னும் பெயரில் இருந்து பிரண்ட்ஸ் அழைப்பு வருகிறது. ரோஹித்தும் அழைப்பை ஏற்று அவளுடன் இண்டர்நெட்டில் சாட் மூலம் பேச ஆரம்பிக்கிறார்.

சாட் மூலம் பேச ஆரம்பிக்கும் ரோஹித், நாளடைவில் அவளுடைய பேச்சுக்கு அடிமையாகிறார். நாள் முழுவதும் ஆஷாவிடம் பேசுவதால் தன் நண்பர்கள் மற்றும் மியூசிக்கில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. நண்பர்களும் யார் என்று தெரியாத ஒரு பெண்ணிடம் இப்படி பேசாதே என்று அறிவுரை கூறுகிறார்கள்.ரோஹித்தும் அவளுடைய முகத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அதற்காக ஆஷாவிடம் போட்டோவை அனுப்பும்படி கேட்கிறான். ஆனால் ஆஷா போட்டோ அனுப்ப முடியாது வேண்டுமென்றால் வீடியோகால் மூலம் பேசலாம் என்று கூறுகிறார். இதை ஏற்கும் ரோஹித் வீடியோகாலுக்காக காத்திருந்து ஆஷாவை பார்க்கிறான். ஆஷாவை பார்த்தவுடன் அவளுடைய அழகில் மயங்குகிறான். அதன்பிறகு இருவரும் வீடியோகால் மூலம் அடிக்கடி பேச ஆரம்பிக்கிறார்கள்.ரோஹித், ஆஷாவின் பேச்சுக்கு அடிமையாகிறான். ஆஷா மீது காதல் வயப்படுகிறான். ஆஷாவை நேரில் சந்திக்க ஆசைப்பட்டு அவளிடம் நான் மலேசியாவிற்கு வருகிறேன் என்று கேட்கிறான். முதலில் மறுக்கும் ஆஷா பிறகு ரோஹித்தின் கட்டாயத்தால் சந்திக்க சம்மதிக்கிறார். இறுதியில் மலேசியாவிற்கு சென்ற ரோஹித், ஆஷாவை சந்தித்தாரா? போலீஸ் அதிகாரியான அன்வர் தேடிவரும் ஆஷாவை கண்டுபிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் சரத்குமார், போலீஸ் அதிகாரியான அன்வர் கதாபாத்திரத்திற்கு பொருந்துகிறார். துப்பறியும் காட்சிகளிலும், தன் குழந்தை மீது அக்கறை காட்ட முயற்சிப்பதும் அருமை. ஆனால் இவர் பாணியில் ஒரு சண்டைக்காட்சி கூட இல்லை என்பதுதான் வருத்தம். ரோஹித்தாக நடித்திருக்கும் அர்ஜூன் லால், புதுமுகம் என்று தெரியாதளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார். ஆஷாவை காதல் செய்யும் காட்சிகளும், அவளுக்காக ஏங்குவது உள்ள காட்சிகளில் நடிப்பில் அருமை. ஆஷா பிளாக் என்னும் கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்கும் இஷிதா, அழகில் ரசிகர்களை கவர்கிறார். நடிக்க வாய்ப்புகள் குறைவு என்றாலும் கொடுத்த வேலையை திறம்பட செய்திருக்கிறார்.மலேசியாவை அருமையாக படம் பிடித்து காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் நஸீர். ஜெசின் ஜார்ஜ் இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. இவரின் இசையில் இரண்டு பாடல்களை ரசிக்கலாம். பின்னணி இசையையும் சிறப்பாக செய்திருக்கிறார். இன்றைய இளைஞர்கள் சமூக வலை தளங்களை எப்படி உபயோகிக்கிறார்கள் என்பதையும் பெற்றோர்கள் தன் பிள்ளைகளிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதையும் கதை எழுதி இயக்கிய ஜான் ராபின்சன்னை பாராட்டலாம். இன்றைய வாழ்க்கையில் பேஸ்புக் என்பது மிகவும் தவிர்க்க முடியாத தகவல் பரிமாற்ற சாதனமாகிவிட்டது. இந்த பேஸ்புக் பல நல்ல விஷயங்களுக்கு பயன்படுவது போலவே, மோசமான விஷயங்களுக்கும் பயன்படுகிறது என்பதை திரைக்கதையாக அமைத்து ரசிக்கும்படி இயக்கியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘நீ நான் நிழல்’ நிஜம்………….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி