அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுல் விலக முடிவு!…

தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுல் விலக முடிவு!…

தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுல் விலக முடிவு!… post thumbnail image
புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 45 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது.காங்கிரசுக்கு இதுவரை இத்தகைய மோசமான தோல்வி ஏற்பட்டதே இல்லை. ஊழல் குற்றச்சாட்டுக்களும், விலைவாசி உயர்வும், நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடிகளும் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள தோல்வியால் அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் நிலை குலைந்து போய் உள்ளனர். இதனால் நேற்று நிருபர்களை சந்தித்த சோனியாவும், ராகுலும் காங்கிரசின் தோல்விக்கு தாங்கள் பொறுப்பு ஏற்றுக் கொள்வதாக கூறினார்கள்.அடுத்தக்கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக திங்கட்கிழமை டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது.காங்கிரஸ் மூத்த தலைவர்கள், காரிய கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் காங்கிரசுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்த நிர்வாகிகளை மாற்றுவது பற்றி ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. இதனால் காங்கிரசில் பல அதிரடி மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி சோனியா, ராகுல் காந்தி இருவரிடமும் கடும் மன வேதனையை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகி அவர் ராஜினாமா கடிதம் கொடுப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.சோனியாவைத் தொடர்ந்து ராகுலும் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து காரிய கமிட்டி கூட்டத்தில் கடிதம் கொடுப்பார் என்று கூறப்படுகிறது.
ராகுல் காந்தி கடந்த 2 மாதமாக நாடெங்கும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார். என்றாலும் 10 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. தமிழ்நாடு, சீமாந்திரா உள்பட சில மாநிலங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை பறிகொடுத்தனர்.
இதன் மூலம் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தங்கள் மனதில் இருந்து காங்கிரசை கழற்றி தூர வீசி விட்டதை தேர்தல் முடிவு காட்டியுள்ளது. குறிப்பாக உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 இடங்களில் 73 இடங்களை பா.ஜ.க. பெற்ற நிலையில், காங்கிரசுக்கு 3 இடம் மட்டுமே கிடைத்ததை சோனியா, ராகுலால் ஜீரணிக்க இயலவில்லை.

எனவே படுதோல்விக்கு தார்மீக பொறுப்பு ஏற்று கட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளை விட்டு விலக சோனியாவும், ராகுலும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அவர்களது விலகலை காங்கிரஸ் காரியக் கமிட்டி ஏற்காது.
சோனியா, ராகுல் இருவரையும் சமரசம் செய்து பதவியில் நீடிக்க செய்வார்கள். என்றாலும் காங்கிரசின் உள் கட்டமைப்பில் மாற்றங்கள் வருவது உறுதியாகி விட்டது.பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்து இருப்பதால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிரதமர் பதவியில் மோடி தான் இருப்பார். அடுத்து 2019ம் ஆண்டுதான் பாராளுமன்றத்துக்கு தேர்தல் வர உள்ளது.இந்த 5 ஆண்டு கால அவகாசத்தில் காங்கிரசுக்கு புத்துயிர் கொடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். ராகுலை பொருத்தவரை அவர் நாட்டு மக்களிடம் பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.ராகுல் மேற்கொண்ட தேர்தல் பிரசாரங்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிகிறது. அவரது பேச்சுக்கள் மக்களை கவரவில்லை. பாராளுமன்றத்தில் அவர் எந்த விவாதத்திலும் கலந்து கொள்வது இல்லை என்பதால், அரசியலில் அவருக்கு பக்குவமும், தைரியமும் போதாது என்ற இமேஜ் நாட்டு மக்களிடம் உருவாகியுள்ளது.

ராகுல் மீதான இந்த எண்ணம் அடுத்த 5 ஆண்டுகளில் மாறுமா என்பதில் கேள்விக்குறியே நீடிக்கிறது. எனவே பிரியங்காவை தீவிர அரசியலுக்கு கொண்டு வர முயற்சிகள் நடக்கும் என்று தெரிய வந்துள்ளது.அச்சு அசல் இந்திரா காந்தி போன்று இருக்கும் பிரியங்கா தீவிர அரசியலுக்கு வரும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நேரு, இந்திரா காலத்தில் இருந்த மரியாதையும், பலமும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.காங்கிரஸ் மூத்த தலைவர்களும் பிரியங்கா அரசியலுக்கு வர வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கியுள்ளனர். நாளை மறுநாள் நடக்கும் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் இதற்கான விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது.பிரியங்காவுக்கு காங்கிரசில் முக்கியப் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநில தலைவர்கள் வெளிப்படையாக விருப்பம் தெரிவிக்க தொடங்கியுள்ளனர். அதே சமயத்தில் காங்கிரஸ் தலைவர்களிடம் ராகுல் மீதி அதிருப்தி ஏற்பட்டு இருப்பதையும் காண முடிகிறது.கட்சியிலும், ஆட்சியிலும் ராகுல் கொண்டு வந்த திட்டங்கள் தோல்வி அடைந்து விட்டன. குறிப்பாக பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் தேர்வில் ராகுல் பணியாற்றிய விதம் தவறாக போய் விட்டதாக சொல்கிறார்கள்.

ராகுலின் நம்பிக்கைக்குரிய இளைஞர் படையில் 15 பேர் உள்ளனர். அந்த 15 பேரும் தேர்தலில் தோற்று விட்டது குறிப்பிடத்தக்கது.இதை சுட்டிக்காட்டும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், ராகுல் காந்தியை சற்று ஓரம் கட்டி விட்டு பிரியங்காவை முக்கிய பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறத் தொடங்கியுள்ளனர்.கட்சி நிர்வாகத்தை இனி பிரியங்கா கையில் கொடுக்க வேண்டும் என்ற கோஷம் காங்கிரசில் வலுத்து வருகிறது.ஆனால் இதை சோனியா ஏற்பாரா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது.ஒரு வேளை சோனியா ஏற்றுக் கொண்டாலும் பிரியங்கா தீவிர அரசியலுக்கு வர விரும்புவாரா என்று தெரியவில்லை. நாளை மறுநாள் நடக்கும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இதற்கு விடை கிடைக்கலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி