செய்திகள்,விளையாட்டு பயிற்சியின் போது நிருபரை வசைபாடிய விராட் கோலி!…

பயிற்சியின் போது நிருபரை வசைபாடிய விராட் கோலி!…

பயிற்சியின் போது நிருபரை வசைபாடிய விராட் கோலி!… post thumbnail image
பெர்த்:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் பெர்த்தில் வருகிற வெள்ளிக்கிழமை நடக்கிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று பெர்த்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சி முடிந்து வீரர்கள் அறைக்கு திரும்பும் போது இந்திய அணியின் துணை கேப்டன் விராட்கோலி, அங்கு நின்று கொண்டிருந்த இந்திய தேசிய நாளிதழின் நிருபர் ஒருவரை பார்த்து கண்டபடி தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்தார். இதனால் அந்த இடத்தில் திடீர் பரபரப்பு உண்டானது. அந்த பத்திரிகையாளர் ஏன்? விராட்கோலி தன்னை பார்த்து திட்டுகிறார் என்பது தெரியாமல் திகைத்தார்.

இதேபோல் அருகில் இருந்தவர்களும் என்ன நடக்கிறது என்பது அறியாமல் தவித்தனர். தேசிய நாளிதழில் விராட்கோலி மற்றும் அவரது காதலியும், இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா குறித்து வெளியான செய்திக்கு சம்பந்தப்பட்ட நிருபர் தான் காரணம் என்று கருதி விராட்கோலி பொது இடத்தில் பொறுமை இழந்து இவ்வாறு நடந்து கொண்டது தெரியவந்தது.

ஆனால் அந்த செய்திக்கும் குறிப்பிட்ட நிருபருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது பின்னர் தெரிந்ததும் விராட்கோலி வருத்தம் தெரிவித்தார். இதற்கிடையில் வருங்கால கேப்டனாக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படும் விராட்கோலி அநாகரீகமாக நடந்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் இந்திய அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி, பொது இடத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று விராட்கோலிக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி