செய்திகள்,விளையாட்டு சாம்பியன்ஸ் லீக்: சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா!…

சாம்பியன்ஸ் லீக்: சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா!…

சாம்பியன்ஸ் லீக்: சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா!… post thumbnail image
ஐதராபாத்:-சாம்பியன்ஸ் லீக் டி.20 போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஸ்மித்தும், மெக்கல்லமும் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அடித்து ஆடி வந்தனர். 13 பந்துகளில் 20 எடுத்திருந்த ஸ்மித், பியூஸ் சாவ்லா பந்துவீச்சில் அவுட்டானார். அடுத்த சில நிமிடங்களில் மெக்கல்மும் 22 ரன்னுக்கு அவுட்டானார். இதன் பின் ரெய்னாவும், டூ பிளஸ்சிசும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.24 பந்துகளை சந்தித்து 28 ரன்களை எடுத்திருந்த நிலையில் ரெய்னா அவுட்டாக, தொடர்ந்து டூ பிளஸ்சிசும் 14 ரன்னுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்து நடையை கட்டினார். அடுத்து கேப்டன் தோனியும், பிராவோவும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் கொல்கத்தா வீரர்களின் பந்துகளை எல்லைக்கோட்டை நோக்கி விரட்டினர்.

தோனியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ரன் எண்ணிக்கை விறு விறுவென உயர்ந்தது. 20 பந்துகளை சந்தித்து 35 ரன்களை எடுத்த தோனி இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். பிராவோவும் தனது பங்குக்கு 28 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார். இதனால் 20 ஓவர் இறுதியில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது.வெற்றி பெற 158 ரன்கள் தேவை என்ற நிலையில் கொல்கத்தா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக பிஸ்லாவும், காம்பிரும் களமிறங்கினர். பிஸ்லா சென்னை அணி வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறிய நிலையில் காம்பிர் 6 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.அடுத்து களமிறங்கிய மணிஷ் பாண்டே வந்த வேகத்தில் டக் அவுட்டாகி வாத்து நடை நடந்தார். 4வது விக்கெட்டுக்கு களமிறங்கிய யூசுப் பதானும் ஒரு ரன்னில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதனால் 5வது விக்கெட்டுக்கு டோஸ்ச்சாட்டே களமிறங்கினார். சிறிது நேரத்தில் பிஸ்லாவும் 2 ரன்னுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதனால் அந்த அணி 21 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் டோஸ்ச்சாட்டேவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார்.இருவரும் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் 19 ரன்கள் எடுத்திருந்தபோது ஜடேஜா பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார் யாதவ். இதனால் 7வது விக்கெட்டுக்கு ரஸ்ஸல் களமிறங்கினார். இவரும் டோஸ்ச்சாட்டேவும் சென்னை அணி வீரர்களின் பந்துகளை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். ஜடேஜா வீசிய ஒரே ஓவரில் 17 ரன்களை குவித்து அசத்தினார் ரஸ்ஸல்.மிகச்சிறந்த ஆட்டநுணுக்கத்தை பயன்படுத்தி விளையாடிய ரஸ்ஸல் 22 பந்துகளிலேயே 50 ரன்களை தொட்டார். எனினும் 58 ரன்கள் எடுத்திருந்தபோது நெஹ்ரா பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் ரஸ்ஸல். பின்னர் வந்த கம்மின்ஸ் 8 ரன்னில் ரன் அவுட்டாக டோஸ்ச்சாட்டே 50 ரன்களை பூர்த்தி செய்தார். கம்மின்ஸ் அவுட்டான பின் களமிறங்கிய பியூஸ் சாவ்லா தான் சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி கொல்கத்தா அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
ஆட்டநாயகனாக கொல்கத்தா அணியின் ரஸ்ஸல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி