செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் எபோலா நோயைக் கட்டுப்படுத்த 3000 ராணுவ அதிகாரிகளை அனுப்ப ஒபாமா திட்டம்!…

எபோலா நோயைக் கட்டுப்படுத்த 3000 ராணுவ அதிகாரிகளை அனுப்ப ஒபாமா திட்டம்!…

எபோலா நோயைக் கட்டுப்படுத்த 3000 ராணுவ அதிகாரிகளை அனுப்ப ஒபாமா திட்டம்!… post thumbnail image
வாஷிங்டன்:-மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த பிப்ரவரி மாதம் தென்படத் துவங்கிய எபோலா என்னும் விஷத் தொற்றுநோய் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா, காங்கோ ஆகிய நாடுகளிலும் பரவி இதுவரை 2400 பேர்களைப் பலி வாங்கியுள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கானோர் இந்த நோய்த்தாக்கத்திற்கான சிகிச்சைகளைப் பெற்றுவர அந்நாடுகள் உலக நாடுகளின் உதவியைக் கோரியுள்ளன.

இந்நிலையில் இந்த நோயைக் கட்டுப்படுத்த உதவும்விதமாக தங்கள் நாட்டிலிருந்து 3000 ராணுவ அதிகாரிகளை அனுப்பி அங்கு உடல்நலம் மற்றும் சுகாதாரம் குறித்த பெரிய பயிற்சித் திட்டங்களை நிறைவேற்றும் ஒரு அறிவிப்பினை இன்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வெளியிட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.அட்லாண்டாவில் உள்ள நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களுக்குப் பயணம் செய்து அங்குள்ள சுகாதாரத் தலைமை அதிகாரிகளை சந்தித்தபின்னர் இந்த அறிவிப்பினை அவர் வெளியிடுவார் என்று வெள்ளை மாளிகை அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எபோலா நோயினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள லைபீரியாவில் இவர்களுடைய பெரும்பாலான சேவைகள் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. லைபீரியாவின் தலைநகரான மொன்ரோவியாவில் இதற்கென ஒரு தலைமையகம் திறக்கப்பட்டு அந்த அலுவலகம் அமெரிக்க ராணுவம் மற்றும் சர்வதேச நிவாரணத் திட்டங்களை ஒருங்கிணைக்கும் ஒரு பிராந்திய மையமாகச் செயல்படும். இந்த ராணுவ வீரர்கள் ஒரு நிலையான தளமாகச் செயல்பட்டு நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகளையும், பயிற்சியாளர்களையும் விரைந்து அனுப்புவர் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.
லைபீரியாவின் நலிவடைந்துள்ள சுகாதார உட்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக அமெரிக்க மையம் அங்கு வாரத்திற்கு 500 சுகாதாரப் பணியாளர்களுக்குப் பயிற்சியளிக்கும்.ஏற்கனவே அங்கு நிறுவப்பட்டுள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் எபோலா பாதிப்பு கொண்ட சுகாதார ஊழியர்களை நிர்வகிக்க 65 பேர் கொண்ட பொது சுகாதார சேவைக் குழு ஒன்றையும் அனுப்பும்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்துடன் இணைந்து அந்நாடுகளுக்குத் தேவைப்படும் எபோலா நோய் தடுப்புக் கருவிகளை அனுப்புவதுடன் அம்மக்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளையும் இந்த அதிகாரிகள் வழங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வேகமாகப் பரவி வரும் இந்த நோயை எதிர்கொள்வதில் நாம் பங்கு பெறுவதுடன் சர்வதேச பொறுப்புகளிலும் முன்னணியில் இருக்கவேண்டும் என்று மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி