செய்திகள்,விளையாட்டு பயிற்சி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி!…

பயிற்சி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி!…

பயிற்சி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி!… post thumbnail image
லண்டன்:-இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முன்னதாக இந்தியாவுக்கும், அங்குள்ள மிடில்செக்ஸ் கவுண்டி அணிக்கும் இடையே பயிற்சி ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் கேப்டன் டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, விராட் கோலி அணியை வழி நடத்தினார். டாஸ் ஜெயித்த மிடில்செக்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. ரோகித் ஷர்மா 8 ரன்னிலும், ஷிகர் தவான் 10 ரன்னிலும், ரஹானே 14 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதன் பின்னர் விராட் கோலியும், அம்பத்தி ராயுடுவும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த சுற்றுப்பயணத்தில் விராட் கோலி முதல் முறையாக அரைசதத்தை பூர்த்தி செய்தார்.4-வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் திரட்டிய இந்த ஜோடி ஸ்கோர் 156 ரன்களை எட்டிய போது பிரிந்தது. விராட் கோலி 71 ரன்களில் (75 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) விக்கெட் கீப்பர் சிம்சனிடம் கேட்ச் ஆனார்.இதைத் தொடர்ந்து இந்தியாவின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. மறுமுனையில் அரைசதத்தை கடந்த அம்பத்தி ராயுடு (72 ரன், 82 பந்து, 8 பவுண்டரி) மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் ‘ரிட்டயர்ட் ஹர்ட்’ ஆகி வெளியேறினார். பின்வரிசையில் ரவீந்திர ஜடேஜா (7 ரன்), அஸ்வின் (18 ரன்), சஞ்சு சாம்சன் (6 ரன்), ஸ்டூவர்ட் பின்னி (0), சுரேஷ் ரெய்னா (5 ரன்) என்று யாரும் சோபிக்கவில்லை.

இதனால் 280 ரன்களை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் ஸ்கோர் 44.2 ஓவர்களில் 230 ரன்களில் அடங்கிப் போனது. இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆலி ரெய்னர் 4 விக்கெட்டுகளும், ரவி பட்டேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.பின்னர் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய மிடில்செக்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மளமளவென நடையை கட்டினர். அதிகபட்சமாக ரையான் க்கின்ஸ், ஜேம்ஸ் ஹாரிஸ் தலா 20 ரன்களும், இயான் மோர்கன் 16 ரன்களும் எடுத்தனர்.முடிவில் மிடில்செக்ஸ் அணி 39.5 ஓவர்களில் 135 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.சுழற்பந்து வீச்சாளரான புதுமுக வீரர் கரன் ஷர்மா 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார், முகமதுஷமி, மொகித் ஷர்மா, உமேஷ் யாதவ், தவால் குல்கர்னி, அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி