செய்திகள்,விளையாட்டு இந்தியா – இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து சிறப்பான தொடக்கம்!…

இந்தியா – இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து சிறப்பான தொடக்கம்!…

இந்தியா – இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து சிறப்பான தொடக்கம்!… post thumbnail image
சவுதம்டன்:-இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் லார்ட்ஸ் டெஸ்டின் கதாநாயகன் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா கணுக்கால் காயத்தால் அவதிப்படுவதால் கடைசி நேரத்தில் விலக நேரிட்டது. அவருக்கு பதிலாக டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் ராஜஸ்தானைச் சேர்ந்த பங்கஜ் சிங் அறிமுகம் ஆனார். ஸ்டூவர்ட் பின்னிக்கு பதிலாக ரோகித் ஷர்மா சேர்க்கப்பட்டார்.இங்கிலாந்து அணியில் மூன்று மாற்றமாக பென் ஸ்டோக்ஸ், பிளங்கெட், மேத் பிரையர் ஆகியோருக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், ஜோஸ் பட்லர் இடம் பெற்றனர்.

டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதன்படி குக்கும், சாம் ராப்சனும் இங்கிலாந்தின் இன்னிங்சை மிகுந்த எச்சரிக்கையுடன் தொடங்கினர். குக் 14 ரன்னில் ஆடிக் கொண்டிருந்த போது, பங்கஜ் சிங்கின் பந்து வீச்சில் கேட்ச் வாய்ப்பு வழங்கினார். பேட்டில் உரசி பின்பகுதிக்கு பாய்ந்த பந்தை 3-வது ஸ்லிப்பில் நின்ற ரவீந்திர ஜடேஜா வீணடித்தார். அதிர்ஷ்டவசமாக மறுவாழ்வு கிடைத்தது போல் புதுதெம்பை பெற்ற குக் இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். அணியின் ஸ்கோர் 55 ரன்களை எட்டிய போது சாம் ராப்சன் (26 ரன், 59 பந்து, 4 பவுண்டரி) முகமது ஷமியின் பந்து வீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் ஆனார்.அடுத்து குக்குடன், கேரி பேலன்ஸ் கைகோர்த்தார். இருவரும் இந்திய பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஆடினார்கள். நிதானத்தை கடைபிடித்த இவர்கள், ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டவும் தவறவில்லை. இவர்களை பிரிக்க இந்திய கேப்டன் டோனி பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி பார்த்தும், தேனீர் இடைவேளை வரை பலன் கிடைக்கவில்லை. லார்ட்ஸ் டெஸ்ட் போல் இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சு, அவ்வளவு துல்லியமாக இல்லை.

அதே நேரத்தில் இந்த ஆண்டில் முதல் முறையாக 50 ரன்களை கடந்த குக், மீண்டும் பார்முக்கு திரும்பிய உத்வேகத்துடன் சதத்தை நோக்கி பயணித்தார். ஸ்கோர் 213 ரன்களை எட்டிய போது, அலஸ்டயர் குக், ரவீந்திர ஜடேஜாவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் ஆனார். 5 ரன்னில் 26-வது சதத்தை தவற விட்ட குக் 95 ரன்களுடன் (231 பந்து, 9 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார். இதன் பின்னர், 3-வது விக்கெட்டுக்கு இறங்கிய இயான் பெல்லின் துணையுடன் கேரி பேலன்ஸ் தனது 3-வது சதத்தை நிறைவு செய்தார். அவர் 2-வது டெஸ்டிலும் சதம் அடித்திருந்திருந்தார்.முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்துள்ளது. கேரி பேலன்ஸ் 104 ரன்களுடனும் (204 பந்து, 15 பவுண்டரி), இயான் பெல் 16 ரன்களுடனும் (46 பந்து, 3 பவுண்டரி) களத்தில் நிற்கிறார்கள்.தொடக்க நாளில் இங்கிலாந்தின் கை ஓங்கியதற்கு இந்தியாவின் மோசமான பீல்டிங்கே காரணம். ஒரு சில கேட்ச்சுகளை நழுவ விட்டதுடன், சில ரன்-அவுட் வாய்ப்புகளையும் கோட்டை விட்டனர். அத்துடன் சில எல்.பி.டபிள்யூ.க்களும் இந்தியாவுக்கு சாதகமாக கனியாமல் போய் விட்டது. 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி