செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் ஓய்வு அறிவிப்பு!…

ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் ஓய்வு அறிவிப்பு!…

ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் ஓய்வு அறிவிப்பு!… post thumbnail image
பெர்லின்:-சமீபத்தில் பிரேசிலில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் 24 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. ஜெர்மனி அணியை வெற்றிகரமாக வழிநடத்தியவர் பிலிப் லாம். அவர் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.

உலக கோப்பை போட்டியின் போதே இந்த முடிவை எடுத்து விட்டதாகவும், உலக சாம்பியன் அந்தஸ்துடன் மகிழ்ச்சியுடன் விடைபெறுவதாகவும் அவர் கூறியுள்ளார். அவருக்கு புகழாரம் சூட்டியுள்ள ஜெர்மனி கால்பந்து சங்கத்தின் தலைவர் வோல்ப்காங் நியர்ஸ்பாச் கூறும் போது,‘பிலிப் லாம் இன்று (நேற்று) காலை என்னை தொடர்பு கொண்டு பேசி, ஓய்வு முடிவு குறித்து தெரிவித்தார். அப்போது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அவரை அறிவுறுத்துவது பயனற்றது என்பதை அவரிடம் பேசியதில் இருந்து உடனடியாக உணர்ந்து கொண்டேன்.அவர் ஜெர்மனியின் மிகச்சிறந்த வீரர் மட்டுமல்ல, முன்மாதிரி வீரராகவும் திகழ்ந்தார். 10 ஆண்டுகளாக ஜெர்மனி அணிக்கு அவர் அளித்த பங்களிப்புக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார். 30 வயதான பிலிப் லாம் இதுவரை 113 சர்வதேச போட்டிகளில் விளையாடி 5 கோல்கள் அடித்துள்ளார்.

நிறைய கோல்கள் அடிக்காவிட்டாலும், அணியை திறம்பட வழிநடத்துவதிலும், மற்ற வீரர்கள் கோல் அடிக்க உதவுவதிலும் கில்லாடியாக விளங்கினார். 2004-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரோஷியாவுக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியுடன் தனது சர்வதேச கால்பந்து வாழ்க்கையை தொடங்கிய அவர் 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் அர்ஜென்டினாவுக்கு எதிரான உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் வெற்றியுடன் நிறைவு செய்துள்ளார்.சர்வதேச கால்பந்துக்கு முழுக்கு போட்டாலும், ஜெர்மனியை சேர்ந்த பெய்ர்ன் முனிச் கிளப்புக்காக தொடர்ந்து விளையாடுவார். அந்த கிளப்புடனான அவரது ஒப்பந்தம் 2018-ம் ஆண்டு வரை நீடிக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி