செய்திகள்,விளையாட்டு இந்தியா – இங்கிலாந்துக்கு 2வது டெஸ்ட்: சதம் அடித்தார் ரஹானே!…

இந்தியா – இங்கிலாந்துக்கு 2வது டெஸ்ட்: சதம் அடித்தார் ரஹானே!…

இந்தியா – இங்கிலாந்துக்கு 2வது டெஸ்ட்: சதம் அடித்தார் ரஹானே!… post thumbnail image
லண்டன்:-இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இரு அணியிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இதனால் அஸ்வினும், கவுதம் கம்பீரும் தொடர்ந்து வெளியே இருக்க வேண்டியதாகி விட்டது.

முந்தைய போட்டி போன்று இல்லாமல் லார்ட்ஸ் ஆடுகளம் புற்கள் நிறைந்து பசுமையாக காட்சியளித்தது. இவ்வகை ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.எதிர்பார்த்தது போல் ஆடுகளத்தில் பந்து நன்கு எழும்பி சென்றதுடன் (பவுன்ஸ்), ஸ்விங்கும் ஆனது. சீறிய பந்துகளை சமாளிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே தடுமாறினர். தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் (7) ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்து வீச்சுக்கு இரையானார். இதன் பின்னர் முதலாவது டெஸ்டில் சதம் விளாசிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் முரளிவிஜயும், புஜாராவும் ஜோடி சேர்ந்து சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடினர். ஆனாலும் நீண்ட நேரம் நிலைகொள்ள முடியவில்லை. விஜய் 24 ரன்களில் (67 பந்து, 4 பவுண்டரி) ஸ்லிப்பில் கேட்ச் ஆனார்.அடுத்து துணை கேப்டன் விராட் கோலி களம் புகுந்தார். சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலியின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் மேத் பிரையர் வசம் கோலி கேட்ச் ஆக வேண்டியது. கண்டம் தப்பிய போதிலும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தவறிய கோலி 25 ரன்களில் (34 பந்து, 4 பவுண்டரி) ஆண்டர்சனின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

தொடர்ந்து, பொறுமை காட்டிய புஜாரா (28 ரன், 117 பந்து, 4 பவுண்டரி) மற்றும் கேப்டன் டோனி (1 ரன்), ரவீந்திர ஜடேஜா (3 ரன்) ஆகியோர் வந்த வேகத்தில் வாலை சுருட்டிக் கொண்டனர். ஆல்-ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி (9) நடுவரின் தவறான எல்.பி.டபிள்யூக்கு பலி கடாவானார். 145 ரன்னுக்குள் இந்திய அணி 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்தது.இந்த இக்கட்டான சூழலில் ரஹானேவும், புவனேஷ்வர்குமாரும் இணைந்து அணிக்கு புத்துயிர் ஊட்டினர். சரிவை ஓரளவு தடுத்து நிறுத்திய இவர்கள் இந்தியாவை 200 ரன்களை கடக்க வைத்தனர். ஸ்கோர் 235 ரன்களாக உயர்ந்த போது, புவனேஷ்வர்குமார் 36 ரன்களில் (84 பந்து, 7 பவுண்டரி) கிளீன் போல்டு ஆனார்.மறுமுனையில் நிலைத்து நின்று அணியை மோசமான நிலையில் இருந்து காப்பாற்றிய 26 வயதான மராட்டியத்தைச் சேர்ந்த ரஹானே, முகமது ஷமியின் துணையுடன் தனது 2-வது சதத்தை நிறைவு செய்தார். பவுண்டரி அடித்து அவர் 100 ரன்களை கடந்தார். சதம் அடித்த உடனே அவர் 103 ரன்களில் (154 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தார்.முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்துள்ளது. 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி