அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் நாடாளுமன்றத்தில் 8ம் தேதி ரெயில்வே பட்ஜெட்டும்,10ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல்!…

நாடாளுமன்றத்தில் 8ம் தேதி ரெயில்வே பட்ஜெட்டும்,10ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல்!…

நாடாளுமன்றத்தில் 8ம் தேதி ரெயில்வே பட்ஜெட்டும்,10ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல்!… post thumbnail image
புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பாராளுமன்ற கூட்டம் கடந்த 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடந்தது. அந்த கூட்டத்தில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர். பிறகு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். இதையடுத்து பாராளு மன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கடந்த காங்கிரஸ் அரசு தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டையே தாக்கல் செய்திருந்தது. அப்போது ஜூலை மாதம் இறுதி வரையிலான காலத்துக்கு மட்டுமே பட்ஜெட் வரவு–செலவு திட்டத்தில் முன் அனுமதி ஒப்புதல் பெறப்பட்டது. எனவே மோடி தலைமையிலான புதிய அரசுக்கு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை எப்போது நடத்துவது என்பது பற்றிய மத்திய மந்திரிசபையின் பாராளுமன்ற விவகாரக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை அடுத்த மாதம் மாதம் 7ம் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 14ம் தேதி வரை நடத்த ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத் தொடரில் ஜூலை 8ம் தேதி ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 9ம் தேதி பொருளா தார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். ஜூலை 10ம் தேதி 2014–2015–ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதி மந்திரி அருண்ஜேட்லி தாக்கல் செய்வார்.மத்திய பொது பட்ஜெட் மற்றும் ரெயில்வே பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் கடந்த இரு வாரங்களாக மத்திய மந்திரிகள் அருண் ஜேட்லியும், சதானந்த கவுடாவும் ஈடுபட்டுள்ளனர். பட்ஜெட்டுக்கு முன்பே ரெயில் கட்டணங்கள் கணிசமாக உயர்த்தப்பட்டு விட்டது. எனவே ரெயில்வே பட்ஜெட்டில் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெயில் கட்டண உயர்வால் அதிருப்தி அடைந்துள்ள பயணிகளை திருப்திபடுத்தும் வகையில் பல்வேறு சலுகைகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடி பதவியேற்றபோது பொருளாதார நிலை மிகவும் திருப்திகரமாக இருந்தது. ஆனால் கடந்த 10 நாட்களாக நடந்து வரும் ஈராக் உள்நாட்டுப்போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்தபடி உள்ளது. இது இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.பணவீக்கத்தை கட்டுப்படுத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முடுக்கி விட வேண்டிய சூழ்நிலையில், மோடி அரசு அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு உள்பட பல சவால்களை எதிர் கொண்டுள்ளது. எனவே அதற்கு ஏற்ப மத்திய பட்ஜெட் அமையும்.

தேர்தல் சமயத்தில் பல நல்ல திட்டங்களை மோடி வாக்குறுதியாக அறிவித்திருந்தார். அந்த திட்டங்களை அறிமுகம் செய்து, அவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியதுள்ளது. இதற்கிடையே மானிய சுமையும் மத்திய அரசுக்கு கழுத்தை நெரிப்பதுபோல அதிகரித்துள்ளது. எனவே இத்தகைய சவால்களை சமாளித்து, மக்களை கவரும் வகையில் மத்திய அரசு புதிய திட்டங்களை எப்படி அறிவிக்கும் என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மாத சம்பளக்காரர்கள் வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சம் உயரும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதற்கு ஏற்ப வரி உள்கட்டமைப்புகளில் மாற்றங்கள் செய்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ளது.தொழில் துறையினர் ஏற்கனவே நிறைய சலுகைகள் கேட்டு காத்து இருக்கிறார்கள். இப்படி எல்லா துறையை சேர்ந்தவர்களும் மத்திய பட்ஜெட் எப்படி இருக்கும் என்று காத்திருக்கிறார்கள். மோடி அரசின் முதல் பட்ஜெட் என்பதால் அது வளர்ச்சி பாதைக்கு எப்படியெல்லாம் வித்திடப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள நாட்டு மக்களிடமும் எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி