அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் நாட்டின் 15வது பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார்!…

நாட்டின் 15வது பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார்!…

நாட்டின் 15வது பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார்!… post thumbnail image
புதுடெல்லி:-மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள பா.ஜனதா, 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தனி மெஜாரிட்டி பெற்ற பா.ஜனதா கட்சியின் எம்.பி.க்கள் கூட்டத்தில் நரேந்திர மோடி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் பதவியேற்பு விழாவிற்கான நடைமுறைகள் தொடங்கின.

மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இன்று டெல்லி வந்து சேர்ந்தனர். இவர்கள் தவிர உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முக்கிய பிரமுகர்கள் பலரும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வந்தனர்.பதவியேற்பு விழா நடைபெறும் ஜனாதிபதி மாளிகை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தீவிரவாதிகளால் மோடிக்கு அச்சுறுத்தல் இருப்பதால் குஜராத் பவன் முதல் ஜனாதிபதி மாளிகை வரையில் அனைத்து சாலைகளிலும் பாதுகாப்பிற்காக ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

பதவியேற்பு விழாவிற்கு தயாரான நரேந்திர மோடி, டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்து பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாயின் இல்லத்திற்கு சென்று அவரிடம் ஆசி பெற்றார்.பின்னர் தன்னுடன் புதிதாக பொறுப்பேற்கவுள்ள மந்திரிகளின் பட்டியலை ஜனாதிபதியிடம் வழங்கினார். மாலை 6 மணியளவில் ஜனாதிபதி மாளிகையின் திறந்தவெளி திடலில் பதவியேற்பு விழா தொடங்கியது. மாலை 6.10 மணிக்கு நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதன்பின்னர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட புதிய மந்திரிகள் பொறுப்பேற்றனர்.

விழாவில் ராஜபக்சே, நவாஸ் ஷெரீப், நேபாள பிரதமர் சுசில் கொய்ராலா, ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய், மாலத்தீவு அதிபர் அபதுல் கயீப் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுடன், துணை குடியரசு தலைவர் அன்சாரி, முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, உமாபாரதி, முகேஷ் அம்பானி, சிவராஜ் சிங் சவுகான், மேனகா காந்தி, ராஜீவ் பிரதாப் ரூடி, ரவி சங்கர் பிரசாத், ராம் விலாஸ் பஸ்வான், உத்தவ் தாக்கரே, வெங்கையா நாயுடு, முரளி மனோகர் ஜோஷி, ப.சிதம்பரம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தன் மனைவி குர்ஷரன் கவுருடன் வந்திருந்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி