செய்திகள் தென்னாப்பிரிக்காவில் உயரிய கவுரவத்துக்கு 5 இந்தியர்கள் தேர்வு!…

தென்னாப்பிரிக்காவில் உயரிய கவுரவத்துக்கு 5 இந்தியர்கள் தேர்வு!…

தென்னாப்பிரிக்காவில் உயரிய கவுரவத்துக்கு 5 இந்தியர்கள் தேர்வு!… post thumbnail image
ஜோகனஸ்பர்க்:-தென்னாப்பிரிக்காவின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று வீரதீர செயல்களையும், பெரும் தியாகத்தையும் புரிந்தமைக்காக தென்னாப்பிரிக்க இந்தியர்கள் 5 பேருக்கு அந்நாட்டின் மிக உயர்ந்த கவுரவமான ‘தி ஆர்டர் ஆஃப் மெண்டி ஃபார் பிரேவரி’, ‘தி ஆர்டர் ஆஃப் லுத்துலி’ மற்றும் ‘தி ஆர்டர் ஆஃப் மபுங்குப்வே’ ஆகிய விருதுகள் வழங்கப்படுகிறது.

இந்த விருதுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மொத்தம் 54 பேரில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய வம்சாவழியை சேர்ந்த இந்த ஐவரும் இடம்பெற்றுள்ளனர்.அநீதியான அடக்குமுறைகளை மக்களின் மீது திணித்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடி, சுதந்திர தென்னாப்பிரிக்கா அமைய உழைத்த இந்த்ரெஸ் நாயுடு, ஷிரிஷ் நானாபாய், ரெக்கி வாண்டையார் ஆகியோருக்கு ‘தி ஆர்டர் ஆஃப் மெண்டி ஃபார் பிரேவரி’ விருதுகள் வழங்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவின் தேசிய கட்டமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்காக உழைத்த அப்துல்ஹே ஜசாத்துக்கு ‘தி ஆர்டர் ஃபார் லுத்துலி’ விருதும், மருத்துவ அறிவியல் துறையில் பேராசிரியையாக இருந்து நாட்டு மக்களுக்கு பல்வேறு நன்மைகளை புரிந்த பிரிடோரியா தாவரவியல் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான நம்ரீதா லால் என்ற பெண்ணுக்கு ‘தி ஆர்டர் ஆஃப் மபுங்குப்வே’ விருதும் வழங்கப்படுகிறது.
வரும் ஞாயிற்றுக்கிழமை பிரிட்டோரியாவில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் இந்த விருதுகளை இவர்களுக்கு வழங்கி தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா வாழ்த்துரை ஆற்றுகிறார்.

சர்வாதிகாரத்தை எதிர்த்து நடைபெற்ற தென்னாப்பிரிக்க மக்களின் போராட்டத்துக்கு துணை நின்றமைக்காக மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ‘காந்தி’ என்ற ஆங்கில திரைப்படமாக்கிய இங்கிலாந்தை சேர்ந்த இயக்குனர் ‘லார்ட்’ ரிச்சர்ட் அட்டன்பரோ, அமெரிக்க திரையுலகை சேர்ந்த டேன்னி க்லோவர் மற்றும் குவின்சி ஜோன்ஸ் ஆகியோருக்கும் இவ்விழாவில் விருதுகள் வழங்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி