செய்திகள் மீண்டும் உருவாகும் பனிப்போர்!…

மீண்டும் உருவாகும் பனிப்போர்!…

மீண்டும் உருவாகும் பனிப்போர்!… post thumbnail image
கிரீமியா தன்னை சுதந்திரக் குடியரசாக அறிவிப்பு செய்துள்ளது. ரஷ்யாவுடன், சில தன்னாட்சி உரிமைகளுடன் இணையவுள்ளது. ஆனால் இதை உக்ரைன் அரசும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்க மறுக்கின்றன. கிரீமியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளன.

கிரீமியா, தானாகவே இத்தகைய பொது வாக்கெடுப்பு நடத்த அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று உக்ரைன் கூறுகிறது. இந்த வாக்கெடுப்பில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், ரஷ்ய படைகளின் ஆதிக்கம் இருப்பதால் இதை ஏற்க முடியாது என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா வெளிப்படையாகவே ரஷ்ய அதிபர் புதினுக்கு தொலைபேசியில் கருத்து கூறிவிட்டார். கிரீமியா இவ்வாறு ரஷ்யாவுடன் இணையுமேயானால், அதன் தாக்கம் உக்ரேனின் ஏனைய பகுதிகளிலும் ஏற்படும் என்கிற அச்சம்தான் இந்த எதிர்ப்புக்குக் காரணம்.
சோவியத் ஒன்றியத்தில் இடம் பெற்றிருந்த உக்ரைன், சோவியத் வீழ்ச்சியின்போது தனி நாடாகப் பிரிந்தது. அதன் தன்னாட்சி பெற்ற பிராந்தியமாக கிரீமியா இருந்தது. சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து தனி நாடுகள் உதயமானபோது அவை மேற்கத்திய, குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய கலாசாரத்துக்கும், தாராள வர்த்தக முறைக்கும் மாறின. அவ்வாறு மாறுவதற்கு ஊக்கம் தரப்பட்டன என்றும் சொல்லலாம்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உள்ள பெரும்பரப்பு உக்ரைன். இங்கே மிக அபரிமிதமான இயற்கை வளங்கள் உள்ளன. வேளாண் உற்பத்தியும் மிக அதிகம். ஆகவே ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்தால் ஐரோப்பாவுக்கு உக்ரைன் மூலம் ஆதாயம் கிடைக்கும். அதே வேளையில், உக்ரைன் பல தேவைகளுக்கு ரஷ்யாவை சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. குறிப்பாக, இயற்கை எரிவாயுவின் தேவை ரஷ்யா மூலம்தான் சாத்தியம்.ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் இணையும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து அதிபராக தேர்வு பெற்ற விக்டர் யானுகோவிச் வாக்குறுதியை நிறைவேற்றாமல் போனார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்தால் நமக்கு இழப்புதான் அதிகம்; ரஷ்யாவிடமிருந்து கிடைக்கும் பெரும்பலன் கிடைக்காமல் போகும் என்று காரணம் கூறினார். நான்கு மாதங்களுக்கு முன்புதான், ரஷ்யாவும் உக்ரைனும் இயற்கை எரிவாயு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. குறைந்த விலையில் எரிவாயு வழங்க ரஷ்யா ஒப்புக்கொண்டிருந்தது.

தற்போது கிரீமியாவில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பு, முறைப்படி நடந்ததா, இத்தேர்தலை நடத்த அவர்களுக்கு அதிகாரம் உள்ளதா என்று உக்ரைன் கவலைப்படுவதைவிட, ஒபாமா அதிகமாகக் கவலைப்படுகிறார். உக்ரைன் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்பதை அமெரிக்கா தீர்மானிப்பது, அதன் சுயலாப நோக்கத்தையே காட்டுகிறது.உக்ரைன் பல காலங்களிலும் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி. இரண்டாம் உலகப் போரின் போது, நாஸி படைகளின் தாக்குதலை ஏற்ற சோவியத் யூனியனின் பகுதி உக்ரைன்தான். குறைந்தது 50 லட்சம் பேர் ஹிட்லரின் நாஸி படையால் கொன்றழிக்கப்பட்டார்கள் என்று கூறப்படுகிறது. நாஸி படைகள் இங்கு பெண்களிடம் நடத்திய அத்துமீறல்கள் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. சோவியத் ஆட்சிக் காலத்திலும்கூட இந்த மக்கள் பஞ்சம் காரணமாக நிறையவே பாதிக்கப்பட்டனர். இப்போது மீண்டும் வேறுமாதிரியான பிரச்னைக்குள் உக்ரைன் தள்ளப்படுகிறது. இந்தப் பிரச்னை அதற்குத் தானாக ஏற்பட்டது அல்ல. இரு வல்லரசுகளால் திணிக்கப்படும் பிரச்னை.

ஐரோப்பிய கூட்டமைப்பே தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில், உக்ரைன் ஐரோப்பிய யூனியனில் இணைவதால் மட்டுமே அதன் பொருளாதாரப் பிரச்னைகள் தீர்ந்துவிடப் போவதில்லை. ஆனால் உலகமயத்தின் கவர்ச்சியால் உக்ரைன் நாட்டு மக்களில் ஒரு பகுதியினர் ஈர்க்கப்பட்டிருக்கும் நிலையில், அதைத் தவிர்க்க முடியாது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி