செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு இன்று ஐ.பி.எல். ஏலம் தொடக்கம்…

இன்று ஐ.பி.எல். ஏலம் தொடக்கம்…

இன்று ஐ.பி.எல். ஏலம் தொடக்கம்… post thumbnail image
பெங்களூர்:-ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் பெங்களூரில் இன்று தொடங்குகிறது. ஒரு பக்கம் சூதாட்ட சர்ச்சை பற்றி எரிகின்ற நிலையில், மறுபுறம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்றும், நாளையும் நடக்கிறது. 8 அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் ஏலத்தில் கலந்து கொள்கிறார்கள்.

ஏலப்பட்டியலில் மொத்தம் 514 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 169 இந்தியர் உள்பட 219 பேர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள். 255 இந்தியர் உள்பட 295 பேர் உள்ளூர் மற்றும் முதல்தர கிரிக்கெட்டில் ஆடியவர்கள். சர்வதேச போட்டிகளில் ஆடாத வீரர்களும் ஏலத்திற்கு வருவது இதுவே முதல் முறையாகும். அத்துடன் வீரர்கள் ஏலத்தொகை முதல்முறையாக இந்திய ரூபாய் மதிப்பில் (முன்பு அமெரிக்க டாலர்) கணக்கிடப்படுகிறது.

ஒவ்வொரு அணியும் குறைந்தது ரூ.36 கோடியில் இருந்து அதிகபட்சமாக ரூ.60 கோடி வரை வீரர்களை ஏலத்தில் வாங்க செலவு செய்யலாம்.

ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 16 வீரர்களும், 27 பேருக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இதில் அதிகபட்சமாக 9 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெறலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், வெய்ன் பிராவோ ஆகிய 5 வீரர்களை தக்க வைத்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்குரிய ஊதியத் தொகை ரூ.39 கோடி (ரூ.12.5 கோடி, 9.5 கோடி, ரூ.7.5 கோடி, ரூ.5.5 கோடி, ரூ.4 கோடி) போக மீதமுள்ள 21 கோடியை கொண்டு தான் எஞ்சிய வீரர்களை வாங்க முடியும். இதே போல் 5 வீரர்களை முழுமையாக தக்க வைத்துக் கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிலைமையும் இது தான்.

எந்த வீரர்களையும் வைத்துக் கொள்ளாத டெல்லி டேர்டெவில்ஸ் அணி மட்டுமே முழுமையான இருப்புடன் (ரூ.60 கோடி) ஏலத்தில் குதிக்கிறது. *இந்த முறை ‘மேட்ச் கார்டு’ என்ற புதிய முறை அறிமுகமாகிறது. அதாவது தங்கள் அணியில் இருந்து விடுவித்த ஒரு வீரரை மறுபடியும் தங்கள் அணிக்கு இழுக்க விரும்பினால், மேட்ச் கார்டு சலுகையை பயன்படுத்தி அந்த வீரரை ஏலத்தில் கேட்கப்பட்ட அதிகபட்ச தொகையை கொடுத்து வாங்கிக் கொள்ள முடியும். தக்க வைத்துக் கொள்ளப்படும் வீரர்களின்அடிப்படையிலேயே மேட்ச் கார்டு எண்ணிக்கை அமையும்.

சென்னை அணிக்கு ஒரு மேட்ச் கார்டு வழங்கப்பட்டுள்ளது. டெல்லி அணிக்கு 3 மேட்ச் கார்டு கிடைத்துள்ளது. பஞ்சாப், கொல்கத்தா, ஐதராபாத் அணிகள் தலா 2 மேட்ச் கார்டு வைத்துள்ளன. ஏலத்தில், முத்திரை அந்தஸ்து பெற்ற வீரர்கள் கணிசமான தொகைக்கு விற்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. டெல்லி அணி ஷேவாக்கை தக்க வைத்துக் கொள்ளாவிட்டாலும், அவரை ஏலம் மூலம் மீண்டும் எடுக்க வாய்ப்புள்ளது.
இதே போல் யுவராஜ்சிங்கை வாங்கவும் போட்டி இருக்கும். யுவராஜ்சிங்கை தங்கள் அணிக்கு எடுக்க பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் விராட்கோலி விரும்புகிறார். இவர்களது அடிப்படை விலை ரூ.2 கோடியாகும். வெளிநாட்டு வீரர்களில் இரண்டு வீரர்களை தான் பெரும்பாலான அணிகள் குறி வைத்துள்ளன.அதிரடிக்கு பிரசித்தி பெற்ற இங்கிலாந்து நட்சத்திர பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சனை, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திடீரென நிரந்தரமாக நீக்கி விட்டது. இனி சர்வதேச போட்டியில் அவர் விளையாட வாய்ப்பில்லை என்பதால், முதல்முறையாக இந்த ஐ.பி.எல். சீசனில் முழுமையாக அவர் விளையாட முடியும். இதனால் அவரை இழுக்க ஒவ்வொரு அணிகளும் வரிந்துகட்டும்.

கிங்ஸ் லெவன் அணி அவரை இழுப்பதற்கான வியூகங்களை தீட்டி வருகிறது. இவரது அடிப்படை விலை ரூ.2 கோடியாகும். நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் கோரி ஆண்டர்சனுக்கும் கிராக்கி காணப்படுகிறது. ஒரு நாள் போட்டியில் 36 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்தவரான இவரது அடிப்படை விலை ரூ.1 கோடி என்றாலும், அதை விட சில மடங்கு தாராளமாக உயரும் என்பதில் சந்தேகமில்லை.
மஹேலா ஜெயவர்த்தனே, தில்ஷன், மேத்யூஸ் (இலங்கை), டேவிட் வார்னர், மிட்செல் ஜான்சன், கிளைன் மேக்வெல், ஸ்டீவன் சுமித், மைக் ஹஸ்சி (ஆஸ்திரேலியா), பிரன்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து), காலிஸ் (தென்ஆப்பிரிக்கா), வெய்ன் சுமித், டேரன் சேமி (வெஸ்ட் இண்டீஸ்), அலெக்ஸ் ஹாலஸ் (இங்கிலாந்து), உத்தப்பா, முரளிவிஜய், யூசுப் பதான், தினேஷ் கார்த்திக், ஜாகீர்கான், எல்.பாலாஜி (இந்தியா), கெவின் ஓ பிரையன் (அயர்லாந்து) உள்ளிட்டோரும் நல்ல தொகைக்கு விலை போகலாம்.

வீரர்கள் மொத்தம் 53 பிரிவாக பிரிக்கப்பட்டு ஏலம் விடப்படுகிறார்கள். இதில் ஷேவாக், யுவராஜ்சிங், பீட்டர்சன் உள்ளிட்டோர் முதல் பிரிவில் அங்கம் வகிப்பதால், அவர்கள் தொடக்கத்திலேயே ஏலத்திற்கு வருகிறார்கள். காலை 9.30 மணிக்கு தொடங்கும் ஏலம் நிகழ்ச்சியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி