செய்திகள்,திரையுலகம் ‘பாட்ஷா’ ரீமேக்கில் நடிக்க விரும்பும் கார்த்தி…

‘பாட்ஷா’ ரீமேக்கில் நடிக்க விரும்பும் கார்த்தி…

‘பாட்ஷா’ ரீமேக்கில் நடிக்க விரும்பும் கார்த்தி… post thumbnail image
காட்பாடி:-காட்பாடியில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் ரிவேரா கலை விழா கடந்த 6–ந் தேதி தொடங்கியது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமை தாங்கினார்.துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், இணை துணை வேந்தர் நாராயணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்து கொண்டார், அப்போது அவர் பேசியதாவது:–

வேலூர் ரசிகர்களை என்னால் மறக்க முடியாது. ‘பருத்திவீரன்’ படம் வெளியானபோது மதுரையைவிட வேலூரில் ரசிகர்கள் எனக்கு அளித்த வரவேற்பு அதிகமாக இருந்தது.வேலூர் என்றாலே வெயில் அதிகம் என்பார்கள். ஆனால் வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் பசுமை மரங்களால் வெயில் தெரியவில்லை. நான் என்ஜினீயரிங் படித்தேன். படிப்பு முடித்தவுடன் அந்த துறையில் வேலை செய்தும் எனக்கு திருப்தி வரவில்லை. அதனால் சினிமா தான் நமக்கு உகந்த துறை என முடிவு செய்தேன்.டைரக்டராக வேண்டும் என்று டைரக்டர் மணிரத்தினத்திடம் உதவி டைரக்டராக சேர்ந்தேன். பின்பு நடிக்கவும் வாய்ப்பு வந்தது. இன்று நடிகனாக உங்கள் முன்பு நிற்கிறேன். கல்வி மிகவும் முக்கியம், கடினமாக உழைக்கும் உங்கள் வேந்தர் விசுவநாதனைபோல நீங்களும் கடினமாக உழைத்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். அகரம் தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்யும் அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் மாணவ–மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு நடிகர் கார்த்தி அளித்த பதில் அளித்து பேசினார். அவர் கூறியதாவது:–நடிகர் ரஜினிகாந்த்தின் படத்தை ரீமேக் செய்து நடிப்பது கஷ்டம், இருந்தாலும் ‘பாட்ஷா’ படத்தை ரீமேக் செய்தால் அதில் நடிக்க ஆசையாக இருக்கிறேன்.ஓய்வு நேரத்தில் காடுகளுக்கு சென்று அங்குள்ள விலங்குகளை பார்த்து ரசிப்பேன். நான் பிளஸ்–2 தேர்ச்சி பெற்றபோது என்னுடைய மாமா வாங்கி தந்த மோட்டார் சைக்கிள் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத பரிசாகும்.
மேலும் என்னுடைய ரசிகர் ஒருவர் அவருடைய முதல் சம்பளத்தில் சட்டை வாங்கி எனக்கு அனுப்பி இருந்தார். அந்த சட்டையை ஒரு பேட்டிக்கு போட்டு சென்றேன். அதுவும் மறக்க முடியாத பரிசாகும்.‘பருத்திவீரன்’ படம் வெளியான போது பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தனர். இதற்கு டைரக்டர் அமீருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். எனக்கு பிடித்த நடிகை அமலா. எனக்கு ஆண், பெண் ரசிகர்கள் சம அளவில் உள்ளனர். அழகான பெண் என்னை பார்த்து அண்ணா என்று கூப்பிட்டால் வருத்தமாகத்தான் இருக்கும்.மாணவ–மாணவிகளாகிய நீங்ள் உங்கள் கனவுகளை நோக்கி செல்லுங்கள், நீங்கள் சாதித்த பிறகு 10 பேருக்கு உதவி செய்யுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

விழா முடிவில் ராஜா ராஜா ராக்கெட் ராஜா… என்ற பாடலுக்கு மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து நடிகர் கார்த்தி நடனமாடி மகிழ்வித்தார். ரிவேரா விளையாட்டு மற்றும் கலை போட்டிகளில் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் ஓட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அந்த அணிகளுக்கு வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விசுவநான், நடிகர் கார்த்தி ஆகியோர் பரிசுக் கோப்பை வழங்கினர்.விழாவில் வி.ஐ.டி. துணை வேந்தர் ராஜூ, துணைத்தலைவர் சேகர் விசுவநாதன், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி வளாகத்தில் நடிகர் கார்த்தி மரக்கன்று நட்டார். தொடக்கத்தில் மாணவ ஒருங்கிணைப்பாளர் அக்ஷிதா சோர்டியா வரவேற்றார். முடிவில் விநாயக்மேனன் நன்றி கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி