செய்திகள்,முதன்மை செய்திகள் 27 வருடம் வளர்த்த பாகனை பிரிந்ததால் சோகத்தில் உள்ள கோவில் யானை …

27 வருடம் வளர்த்த பாகனை பிரிந்ததால் சோகத்தில் உள்ள கோவில் யானை …

27 வருடம் வளர்த்த பாகனை பிரிந்ததால் சோகத்தில் உள்ள கோவில் யானை … post thumbnail image
திருச்சி:-ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் யானை ஆண்டாள். இந்த யானை கோவையிலிருந்து கடந்த 16.10.1986ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.இந்த யானையின் பாகனாக ஸ்ரீதர் என்பவர் இருந்து வந்தார்.

யானையை தினமும் குளிப்பாட்டுவது, அதற்கு உணவு சமைத்து கொடுப்பது, பராமரிப்பது போன்ற பணிகளில் பாகன் ஈடுபட்டு வந்தார்.தினமும் காலை 4.30 மணிக்கு யானையை காவிரி ஆற்றுக்கு அழைத்து சென்று குளிப்பாட்டி சாமிக்கு யானை ஊர்வலத்தில் காவிரி நீர் எடுத்து வரப்படும். யானை முன்பு தான் கதவு திறக்கப்படும்.
மேலும் சாமி ஊர்வலத்தின் போது ஆண்டாள் யானை முன்பாக செல்லும். பாகன் ஸ்ரீதர் உடனிருந்து நடத்தி செல்வார்.இந்த நிலையில் பாகன் ஸ்ரீதர் தற்போது பணியில் இருந்து விலகி விட்டார். அவர் கொடுத்த ராஜினாமா கடிதத்தை கோவில் நிர்வாகம் ஏற்றுக் கொண்டதாக அறிவித்துள்ளது.ஆனால் 1986 முதல் நேற்று முன்தினம் வரை 27 வருடங்கள் மற்றும் 67 நாட்களாக ஆண்டாள் யானையுடன் வாழ்ந்த பாகன் ஸ்ரீதர் யானையை பிரிந்த சோகத்தில் யானை கொட்டகை அருகே தவித்தப்படி உள்ளார்.

அதே போன்று கடந்த 18.10.2013ம் தேதி மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் நடைபெறும் யானைகள் புத்துணர்ச்சி முகாமிற்கு சென்ற ஆண்டாள் யானையும் பாகன் ஸ்ரீதரை பிரிந்ததால் சோகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. உணவு உண்ணாமல் அடம் பிடிக்கிறதாம்.பாகன் ஸ்ரீதர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதால் புதிதாக உதவி யானை பாகன் ஆண்டாள் யானையை பராமரித்து வருகிறார். ஆனால் யானை உடனே பழகாததால் பராமரிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் ஆண்டாள் யானை சோகத்தில் இருப்பதை அறிந்த பாகன் ஸ்ரீதர் மீண்டும் யானை பாகனாக சேர்ந்து பராமரிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் ஆண்டாள் யானை சோகத்தில் தவிக்க, இங்கு ஸ்ரீரங்கத்தில் யானை கொட்டகை அருகே பாகன் ஸ்ரீதர் சோகத்தில் தவிக்கிறார்.

பாகன் ஸ்ரீதர் ஏற்கனவே 4.10.2012 அன்று, 18.4.2013 அன்றும் ராஜினாமா கடிதம் கொடுத்திருந்தாராம். உதவி யானை பாகன் நியமனம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அப்போது அவர் ராஜினாமா கடிதம் கொடுத்ததாக கூறப்படுகிறது. தற்போது அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து பாகன் ஸ்ரீதர் கூறும்போது நான் முன்பு கொடுத்த ராஜினாமா கடிதத்தை தற்போது அறங்காவலர் குழு ஏற்றுக் கொண்டதாக அறிவித்துள்ளார். இதனால் 27 வருடங்கள் மற்றும் 67 நாட்கள் ஒரு பிள்ளையைப் போல் வளர்த்த ஆண்டாள் யானையை பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
நான் இல்லாததால் முகாமில் யானை சரியாக சாப்பிடாமல் அடம் பிடிப்பதாக கேள்விப்பட்டேன். நேற்று முன்தினம் சென்று உணவு கொடுத்து விட்டு வந்தேன். மீண்டும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகிற 4.2.2014 அன்று யானை வருகிறது. மீண்டும் ஆண்டாள் யானைக்கு பாகனாக இருந்து பணியாற்ற விரும்புகிறேன்.தினமும் ஆண்டாள் யானைக்கு 11 கிலோ அரிசில் பொங்கல் சமைத்து கொடுப்பேன். 100 கிலோ பசுந்தீவனம் வழங்க வேண்டும். காய்கறி வழங்க வேண்டும். ஆப்பிள், வாழை பழம் போன்றவை கொடுத்தால் யானை உடல் எடை அதிகமாகி விடும். எனவே உணவு விஷயத்தில் சரியாக இருந்து பராமரிக்க வேண்டும். ஆண்டாள் யானையை பிரிந்து இருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி