அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா…

அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா…

அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா… post thumbnail image
தேவயானி கோப்ரகாடே வயது 39, பெண் ஐ.எப்.எஸ்., அதிகாரி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணியாற்றினார். இவரது வீட்டு வேலைக்கார பெண்ணுக்கு ‘விசா’ பெறுவதற்காக மோசடியான சில சான்றிதழ்களை வழங்கினார் என தேவயானி மீது அமெரிக்கா குற்றம்சாட்டியது.கடந்த வாரம், தன் குழந்தையை பள்ளியில் விடுவதற்காக தேவயானி காரில் சென்ற போது, நடுரோட்டில் அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைவிலங்கிடப்பட்ட தேவயானி சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக அவர் உடைகளை களைந்து சோதனை செய்த போலீசார் அவரை பயங்கர குற்றவாளிகள் அடைக்கப்படும் சிறையில் அடைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பின், 1.5 கோடி ரூபாய் செலுத்திய பின் ஜாமினில் தேவயானி விடுதலை செய்யப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பு போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன. தூதரக அதிகாரிகள் வைத்திருந்த அடையாள அட்டைகள் திரும்ப பெறப்பட்டன. இனிமேல் தூதரக அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை கிடையாது என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேவயானி கைது விவகாரத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி வருத்தம் தெரிவித்தார். ஆனால் வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது தேவயானி மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது.

இந்நிலையில், இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்கா அதிர்ந்து போனதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த விவகாரத்தில் மறு ஆய்வு செய்யும் முடிவுக்கு அமெரிக்கா வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் நீதித்துறை மற்றும் வெளியுறவுத்துறை ஆகியவை தேவயானி விவகாரத்தில் மறு ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. தேவயானி விவகாரத்தை கையாண்டதில் தவறு உள்ளது எனவும் அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் இந்த விவகாரத்தை விரைவில் தீர்வு காண்பதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இந்தியாவை முக்கியமான நாடாக அமெரிக்க பாதுகாப்புத்துறை கருதுகிறது. இந்தியாவுடன் பல பாதுகாப்பு ஒப்பந்தங்களையும் அந்நாடு செய்து வருகிறது. இந்த நிலையில், தேவயானி விவகாரத்தில் இந்தியா கோபமடைந்திருப்பதை அந்நாடு விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி