திரையுலகம் "சினிமாவில் காமெடியன் வாழ்க்கையில் ஹுரோ"

"சினிமாவில் காமெடியன் வாழ்க்கையில் ஹுரோ"

vivek

திரைத்துறையில் இருப்பவர்களில் டாக்டர். ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் மீது அதிக ஈடுபாடு உள்ளவர் யார் என்றால் அது விவேக்காதான் இருக்கும். அப்துல்கலாமின் கருத்துக்களை தான் நடிக்கும் திரைப்படங்களின் மூலமும், பல மேடை நிகழ்ச்சிகளிலும் பேசி வந்த விவேக் நெடுநாட்களாக, அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளன அக்டோபர் 15ஆம் தேதியை “இந்திய மாணவர் தினம்’ ஆக அறிவிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வந்தார்.

விவேக்கின் இந்த முயற்சிக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது சென்னை, குன்றத்தூரில் உள்ள லிட்டில் ஃப்ளவர் மெட்ரிக் பள்ளி. இப்பள்ளி அப்துல்கலாமின் பிறந்தநாளை இந்திய மாணவர் தினமாக அறிவிக்க, இந்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் கையெழுத்து இயக்கத்தை மாணவர்கள் சார்பில், அப்துல்கலாமின் பிறந்தநாளான இன்று (அக்டோபர் 15) சென்னையில் காலை 11 மணிக்கு துவக்கியது.

இந்த கையெழுத்து கோரிக்கை, ஆறு மொழிகளில் கையெழுத்து படிவங்களின் மூலம் கையெழுத்து இடுதல், இணையத்தின் மூலம் பதிவு செய்தல் மற்றும் கைபேசியின் மூலம் குறுஞ்செய்தி அனுப்புதல் என மூன்று வகையில் செயல்படுத்தப்படுகிறது.

இதில் கலந்துக்கொண்ட விவேக், முதலாவதாக கையெழுத்திட்டு ஆரம்பித்து வைத்தார். மேலும் அறிவியல் விஞ்ஞானி டாக்டர்.சோமு இணையத்தின் மூலம் கையெழுத்து போடும் முறையை துவக்கி வைக்க, செயின்ட் மேரீஸ் தாளாளர் மார்டின் கென்னடி ஆங்கிலப்படிவத்தில் முதல் கையெழுத்திட்டு அம்முறையை துவக்கி வைத்தார். லிட்டில் ஃப்ளவர் பள்ளியின் தாளாளர் எஸ்.ஜான் சேவியர் தங்கராஜ், முதல் எஸ்.எம்.எஸ்-ஐ அனுப்பி அந்த முறையை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பாக ஜீவா, என்ற ஏழை மாணவியின் மருத்துவ படிப்பிற்கான முழு செலவையும் நடிகர் விவேக் ஏற்றுக்கொண்டார். அதற்கான தொகையை அந்த மாணவியிடம் இந்நிகழ்ச்சியில் வழங்கினார்.

உதவியைப் பெற்றுக்கொண்ட மாணவி பேசுகையில் “விவேக் சார் படத்தில் தான் காமெடியன். நிஜ வாழ்க்கையில் என்னை போன்ற மாணவர்களுக்கு ஹுரோவாக விளங்குகிறார்” என்றார்.

“இன்று ஒரு விஞ்ஞானிக்கு ஐஸ்வர்யாராய் கூட காதலியாக கிடைக்கிறார்.”. என்று எந்திரன் படத்தை கூறி நிகழ்ச்சியை கலகலப்பாக்கிய விவேக், தொடர்ந்து பேசுகையில் “அப்துல்கலாம் நம் நாட்டில் பிறந்தது நமக்கு பெறுமையான விஷயம். அதுவும் அவர் நம் தமிழராக இருப்பதில் நமக்கு இன்னும் பெறுமை. தன்னை நாட்டிற்காக அர்ப்பனித்துக்கொண்டவர். நம் நாட்டில் எதுஎதுக்கோ தினம் கொண்டாடுகிறோம். எங்கோயோ பிறந்த வலண்டைன் என்ற பாதிரியாரின் நினைவாக காதலர்கள் தினமெல்லாம் கொண்டாடுகிறோம். அதுபோல “மாணவர்கள் தினம்” ஒன்றை நாம் கொண்டாட வேண்டும். அது நம் இந்தியாவை காதலித்த, இந்திய மாணவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளாக இருக்க வேண்டும் என்று நான் பல இடங்களில், பல மேடைகளில் பேசி இருக்கிறேன். அதற்கு இபோது ஒரு பாதை அமைத்திருக்கிறார்கள் லிட்டில் ஃப்ளவர் பள்ளியினர் அதற்கு எனது நன்றி” என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி