அரசியல்,செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் மோடியின் பயணத்தை பயன்படுத்தி இந்தியாவுடன் ரூ.30 ஆயிரம் கோடி வர்த்தகத்துக்கு அமெரிக்கா திட்டம்!…

மோடியின் பயணத்தை பயன்படுத்தி இந்தியாவுடன் ரூ.30 ஆயிரம் கோடி வர்த்தகத்துக்கு அமெரிக்கா திட்டம்!…

மோடியின் பயணத்தை பயன்படுத்தி இந்தியாவுடன் ரூ.30 ஆயிரம் கோடி வர்த்தகத்துக்கு அமெரிக்கா திட்டம்!… post thumbnail image
வாஷிங்டன்:-பிரதமர் நரேந்திர மோடி இன்று வாஷிங்டன் செல்கிறார். அவரது வாஷிங்டன் பயணத்தை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமெரிக்கா எடுத்துக்கொண்டிருக்கிறது. பல்வேறு துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டினை பெருக்குவதற்கு மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. அதை அமெரிக்கா கவனத்தில் கொண்டுள்ளது.பிரதமர் மோடி, நியூயார்க் நகரில் அமெரிக்க வாழ் இந்திய தொழில் அதிபர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது மோடி, அவர்களை இந்தியாவில் இளைய தலைமுறையினருக்கு கற்பிக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

இந்தியாவில் அமெரிக்க முதலீடுகளை, வர்த்தகங்களை விரிவுபடுத்தவும் மோடி விரும்புகிறார். இந்த நிலையில், இந்தியாவுடன் அமெரிக்கா 3 பில்லியன் டாலர் முதல் 5 பில்லியன் டாலர் வரையிலான (சுமார் ரூ.18 ஆயிரம் கோடி முதல் ரூ.30 ஆயிரம் கோடி) வர்த்தக ஒப்பந்தங்கள் செய்ய விரும்புகிறது. குறிப்பாக ராணுவம், விண்வெளி துறையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.ராணுவத்துறையை பொருத்தமட்டில், ராணுவ ஹெலிகாப்டர்கள் விற்பனைக்காக போயிங், லாக்ஹீட் மார்ட்டின், ஜெனரல் எலெக்டிக், ரேதியான் நிறுவனங்கள் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள விருப்பம் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.சென்னையை அடுத்த பொன்னேரி உள்பட 100 சிறுநகரங்களை, நகரங்களை மத்திய அரசு தேர்வு செய்து ‘ஸ்மார்ட் சிட்டி’ என்னும் நவீன நகரங்களாக உருவாக்க விரும்புகிறது. இந்த திட்டத்திலும், ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்திலும் பங்கு பெற கூகுள், ஐபிஎம், அடோப், காக்னிசன்ட் நிறுவனங்கள் ஆர்வம் கொண்டுள்ளன. ‘தூய்மையான இந்தியா’ உள்ளிட்ட திட்டங்களில் பங்கேற்க பெப்சிகோ உள்ளிட்ட நுகர்வோர் பயன்பாட்டு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் விரும்புகின்றன.

பிரதமர் மோடி, வாஷிங்டன் பயணத்தின்போது பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளையும் சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளார். வாஷிங்டனில் நாளை நடைபெற உள்ள அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சில் கூட்டத்திலும் மோடி பங்கேற்று பேசுகிறார். இதில் சுமார் 400 தொழில் அதிபர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த கூட்டத்தை இந்திய-அமெரிக்க வர்த்தக உறவினை மேலும் விரிவாக்குவதற்கான ஒரு சந்தர்ப்பமாக பிரதமர் மோடி பயன்படுத்திக்கொள்வார் என தகவல்கள் கூறுகின்றன. தற்போது இந்திய-அமெரிக்க வர்த்தக மதிப்பு (2013 நிலவரப்படி) 64 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3 லட்சத்து 84 ஆயிரம் கோடி) ஆகும். இது மோடியின் பயணத்தினால் நிச்சயம் அதிகரிக்கும் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி