செய்திகள்,திரையுலகம் சந்திரா திரை விமர்சனம்…

சந்திரா திரை விமர்சனம்…

சந்திரா திரை விமர்சனம்… post thumbnail image
பாரம்பரிய மிக்க மைசூர் அரண்மனையில் வாழ்ந்து வருகிறார் ஸ்ரேயா. ராஜ பரம்பரையான இவரது குடும்ப வைத்தியராகவும், இசை கற்றுத்தருபவராகவும் வருகிறார் விஜயகுமார். இவருடைய மகனான நாயகன் பிரேம் குமார், தந்தை செய்யும் தொழிலை கற்று கைதேர்ந்தவராக இருக்கிறார். இந்த அரச குடும்பத்தில் உள்ள ஸ்ரேயாவிற்கு இசை கற்றுத்தருகிறார் பிரேம் குமார். இவர்களுக்கிடையே காதல் மலர்கிறது.

இதற்கிடையில் ஸ்ரேயாவிற்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் ராஜபரம்பரையில் மாப்பிள்ளையை தேடுகிறார்கள். அமெரிக்காவில் வாழும் சுகன்யாவின் மகனான கணேஷ் வெங்கட்ராமை மைசூர் வரவழைத்து திருமணத்தைப் பற்றி பேசுகிறார்கள். அமெரிக்காவில் இருந்து வரும் கணேசுக்கு ஸ்ரேயாவை பார்த்தவுடன் பிடித்து விடுகிறது. ஸ்ரேயாவை திருமணம் செய்ய முடிவு செய்கிறார்.
இதற்கு ஸ்ரேயா எந்தவித பதிலும் சொல்லாமல் மவுனம் காட்டி வருகிறார். கணேசின் அன்பை ஏற்காமல் ஸ்ரேயா, பிரேம் குமாரையே நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஸ்ரேயா, பிரேம் குமாரின் காதல் விசயம் இவர்களின் குடும்பத்தினருக்கு தெரிந்து விடுகிறது. இதனால் பிரேம் குமாரிடம், இரு குடும்பத்தின் மானத்தை காப்பாற்ற ஸ்ரேயாவை மறந்திட சத்தியம் வாங்குகிறார்கள். இதற்கு சம்மதித்து வேறுவழியில்லாமல் சத்தியம் செய்கிறார் பிரேம் குமார்.இறுதியில் ஸ்ரேயா, பிரேம் குமாரை மணந்தாரா? கணேசை மணந்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் சந்திரா என்னும் ராஜ குமாரி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா சிறப்பாக நடித்துள்ளார். திரையில் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். நடிப்பு, கவர்ச்சி, நடனம், வாள் சண்டை என அனைத்திலும் அசத்துகிறார்.கதாநாயகன் பிரேம் குமார், சந்திரன் என்னும் கதாபாத்திரத்தில் தனது மென்மையான நடிப்பில் அனைவரையும் கவர்கிறார். அவருடைய உடல் கட்டமைப்பு காட்சிகளுக்கு மேலும் வலுவூட்டுகிறது.அமெரிக்க மாப்பிளையாக வரும் கணேஷ் வெங்கட்ராம், திரையில் பளிச்சிடுகிறார். கொடுத்த கதாபாத்திரத்தையும் கச்சிதமாக செய்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு படம் முழுக்க வரும் விவேக், ஸ்ரேயாவின் அண்ணன் கதாபாத்திரத்தில் நகைச்சுவை கலந்த நடிப்பில் ரசிகர்களுக்கு சிரிப்பு வரவழைக்க முயற்சி செய்திருக்கிறார். விஜயகுமார், சுகன்யா என படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் திறமையாக நடித்துள்ளனர்.

இயக்குனர் ரூபா ஐயர், ராஜ குடும்பக் கதையை கையில் எடுத்துக் கொண்டு, அதை தன் திறமையால் வெற்றிப்படமாக்க முயற்சி செய்திருக்கிறார். காலம் காலமாக நாம் பார்த்துப் பார்த்து, சலித்துப் போன கதையை திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லாமல் நகர்த்திக் கொண்டு போவது பார்ப்பவர்களுக்கு மீண்டும் சலிப்பையே ஏற்படுத்துகிறது.

கௌதம் ஸ்ரீவஸ்தா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். தாஸ் ஒளிப்பதிவு படத்திற்கு முக்கிய பலம்.

மொத்தத்தில் ‘சந்திரா’ பழைய காதல்….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி