அரசியல்,செய்திகள் பெங்களூரில் கலக்கும் நரேந்திர மோடி டீக்கடைகள்…

பெங்களூரில் கலக்கும் நரேந்திர மோடி டீக்கடைகள்…

பெங்களூரில் கலக்கும் நரேந்திர மோடி டீக்கடைகள்… post thumbnail image
பெங்களூர்:-பா.ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றார். இவரைப் பற்றி காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மணி சங்கர் ஐயர் ‘டீ விற்பனையாளர்’ என்று குறிப்பிட்டது நாடு முழுவதும் புதுவித தேர்தல் உத்தியாக செயல்பட துவங்கியுள்ளது.

இது பெங்களூருவையும் விட்டுவைக்கவில்லை. நரேந்திர மோடியின் பெயரில் தேநீர் டீக்கடைகளை ஏற்படுத்தியுள்ள பா.ஜனதா கட்சியின் தன்னார்வலர்கள் அந்த இடத்தை வாக்காளர்களை சந்திக்கும் பிரசார தளமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அங்கு ஒரு ரூபாய்க்குத் தேநீர் விற்பதோடு மோடிக்கான பிரசாரத்திலும் அவர்கள் ஈடுபடுகின்றனர். மோடியின் சாதனைகள் குறித்த வீடியோக் காட்சிகளும் அந்த டீக்கடைகளில் திரையிடப்பட்டு வருகின்றன.கென்கெரி, யஷ்வந்த்பூர் போன்ற பகுதிகளில் நடைபெற்றுவரும் இத்தகைய தேநீர் டீக்கடைகள் மாநிலத்தின் பல இடங்களிலும் விஸ்தரிக்கப்படும். ஒரு ரூபாய்க்கு இங்கு தேநீர் விற்கப்படுவதோடு வாக்காளர்களை சந்திக்கும் இடமாகவும் இவை விளங்கும் என்று பா.ஜனதா சார்பாக செயல்பட்டு வரும் அனில் சலகேரி குறிப்பிட்டார்.

மேலும், கடந்த சனிக்கிழமை அன்று பா.ஜனதா கட்சியின் ஊடக ஒருங்கிணைப்பாளரான எஸ்.பிரகாஷ் வித்தியாசமான ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டார். இலவச தேநீர் விநியோகத்துடன் கூடிய வாக்காளர் தொடர்பு நிகழ்ச்சி ஒன்று அவரால் மேற்கொள்ளப்பட்டது. வாக்காளர்களுடன் மேற்கொள்ளப்படும் கருத்துப் பரிமாற்றங்கள் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகளாகக் கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.வாக்களர்களிடம் பிரசாரம் செய்யக் கூடிய வகையில் தேநீர் டீக்கடைகள் அனைத்து இடங்களிலும் தொடங்கப்பட்டு வரும் நிலையில் கர்நாடக மாநிலத்திற்கு நரேந்திர மோடி பிரசாரம் செய்யவரும் நாளும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பா.ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளரான இவர் பிப்ரவரி மாதம் 18-ம் தேதி மங்களூருவிலும், தாவனகரேயிலும் அதனைத் தொடர்ந்து 28-ம் தேதி ஹூப்ளியிலும், குல்பர்காவிலும் பொதுமக்களிடத்தில் உரையாற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேநீர் டீக்கடைகளில் மக்களிடம் பெறப்பட்ட கருத்துகள் அனைத்தும் அப்போது மோடியிடம் அளிக்கப்படும் என்று கட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி