சோதிடம்,முதன்மை செய்திகள் எப்படி நம்ம யோகம்…குருபெயர்ச்சி பலன் 2012 – மேஷம்

எப்படி நம்ம யோகம்…குருபெயர்ச்சி பலன் 2012 – மேஷம்

Tamil Mesa rassi

காணொளி:-

பிற ராசிகளுக்கு
1. குருபெயர்ச்சி பலன் 2012 – ரிஷபம்
2. குருபெயர்ச்சி பலன் 2012 – மிதுனம்
3. குருபெயர்ச்சி பலன் 2012 – கடகம்
4. குருபெயர்ச்சி பலன் 2012 – சிம்மம்
5. குருபெயர்ச்சி பலன் 2012 – கன்னி
6. குருபெயர்ச்சி பலன் 2012 – துலாம்
7. குருபெயர்ச்சி பலன் 2012 – விருச்சிகம்
8. குருபெயர்ச்சி பலன் 2012 – தனுசு
9. குருபெயர்ச்சி பலன் 2012 – மகரம்
10. குருபெயர்ச்சி பலன் 2012 – கும்பம்



பேரன்புள்ள மேஷ ராசி அன்பர்களே! வணக்கம்!! வாழி நலம்!!!

நவக்கிரகங்களில் தைரியக்காரகன் மிகுந்த பலம் வாய்ந்தவன் என்றழைக்கப்படும் ஸ்ரீ செவ்வாய் பகவானை ஆட்சி கிரகமாகவும், வீடாகவும் ராசியாதிபதியாகவும் அமையப் பெற்ற உங்கள் ராசிக்கு 9,12க்குடைய பாக்யஸ்தானாதிபதியும், விரயஸ்தானதிபதியுமான ஸ்ரீ குரு பகவான் இதுவரையில் சுத்த திருக்கணித பஞ்சாங்க சித்தாந்தப்படி உங்கள் ராசிக்கு முதல் ராசியும், ஜென்ம ராசியுமான மேஷ ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த இவர் ஸ்வஸ்;திஸ்ரீ ஸ்ரீநந்தன நாம ஆண்டு வைகாசி மாதம் 4ஆம்தேதி ஆங்கிலம் மேமாதம் 17ஆம் தேதி 2012 ஆம்ஆண்டு (17-5-2012) வியாழக்கிழமை அன்று மாலை 6-18 மணியளவில் பெயர்ச்சியாகி ராசிமாறி உங்கள் ராசிக்கு இரண்டாமிடமும், தனம், குடும்பம், வாக்குஸ்தானமுமான ரிஷப ராசியில் கிருத்திகை நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் பிரவேசித்து 27-5-2013 ஆண்டு வரை ஒராண்டு காலம் அங்கு இவர் சஞ்சாரம் செய்கிறார்.

குணநலன்கள்

உங்கள் ராசிநாதன் செவ்வாய் என்பதால் செயலில் வேகம் இருக்கும். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயலாற்றி வாழ்க்கை நடத்துபவர்கள் நீங்கள் தான். தாமாகவே உதவி செய்யவும் முன் வருவீர்கள்.வெற்றிக்கனியை விரைவில் எட்டிப்பிடிக்க விரும்புவீர்கள். தவறு நடந்தால் தட்டிக் கேட்பதற்கும் தயங்க மாட்டீர்கள்.எதையும் நாளை செய்யலாம் என தள்ளி வைக்காதவர்கள் நீங்கள். சோம்பேறித்தனம் என்பது உங்களுக்கு பிடிக்காது. சுறுசுறுப்பே உங்கள் வெற்றிக்கு காரணமாகும். அஞ்சா நெஞ்சமும், அசாத்திய துணிச்சலும் உங்களுக்கு இருப்பதால் எதையும் நேருக்கு நேராக சந்திக்க முற்படுவீர்கள். ஒரு சில சமயங்களில் நீங்களே பகையை வளர்த்துக் கொண்டு விட்டு, பிறகு அதற்கு வருத்தம் தெரிவித்து அவர்களை நட்பாக்கி கொள்வீர்கள்.உதட்டால் உளறாமல் இதயத்தால் பேசும் நீங்கள்,குலம், கோத்திரம், சாதி, மதம் பார்க்காமல் உண்மையான பாசமுடன்பழகுவீர்கள். எடுத்த வேலையை முடிக்கும் வரை அதே சிந்தனையுடன் இருந்து சாதிக்கும் நீங்கள், இலக்கியம், இசை, ஆன்மிகம் என அனைத்திலும் ஆர்வம் கொண்ட கலா ரசிகர்கள்.

பொதுப்பலன்கள்

இரண்டில் குரு நிற்க தன வரவு பெருகும், லட்சியங்கள் நிறைவேறும்
பேரும் புகழும் பெருமையும், பிரபல்ய யோகம் வந்தே தீரும்
நிழல் கிரகங்களின் சஞ்சாரம் ஆறுதலுடன் கூடிய அவதிகள் மெத்த உண்டு
ஏழாமிடச் சனியால் ஏடாகூடமான மனோவியாக்கூலம் உண்டாகும்

இவ்வளவு நாளும் ஜென்மராசியில் இருந்துக் கொண்டு உங்களை முன்னேயும் போகவிடாமல் பின்னேயும் வரமுடியாமல் தத்தளித்து தடுமாற வைத்துக் கொண்டிருந்த ஸ்ரீPகுருபகவான் இரண்டாமிடமான தன, குடும்ப, வாக்குஸ்தானத்தில் பிரவேசித்து  இப்பொழுது தனக்கு மிகவும் உகந்த, உயர்ந்த, உன்னத இடமான தனஸ்தானத்தில் உச்சமாக ரிஷபத்தில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் இக்காலம் மிகவும் நன்றாகவே இருக்கும். இந்த குரு மாற்றம் ஆரவாரமாக-அற்புதமாக-அதிர்ஷ்டம் நிறைந்ததாகவே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆரவாரம் சரி-அற்புதம் சரி அவை என்ன என்கிறீர்களா! இனி நல்ல மாறுதலான மிகப்பெரிய அதிர்ஷ்டகரமான நன்மை களையும், யோகங்களையும் அற்புதங்களையும் ஸ்ரீPகுரு பகவான் செய்ய இருக்கிறார். உச்சகுருவின் திருவருளால் வருமானம் பன்மடங்கு உயர்ந்து விடும். எதிர்பாராத வழிகளில் கூட பணம் கணிச மாகவும், பெருந்தொகையாகவும் கொட்டோகொட்டு என்று கொட்டிக் கொண்டிருக்கும். ஸ்ரீ குருபகவானின் அருளைப் பெற்று, தெம்பும், உற்சாகத்துடன் தான் இருப்பீர்கள். ஒளிமயமான ராஜயோக எதிர்காலத்தை அற்புதமாக வழங்கப் போகிறார். இந்தக்காலத்தில் குருவை கும்பிட்டு மகிழ்வதோடு வியாழக்கிழமை விரதமும் இருப்பது நல்லது.

பொதுவாகதோல்விகள் என்பதே மேஷ ராசிக்காரர்களின் சரித்திரத்தில் இல்லாத ஒன்றுதான். ஆனால் ஜென்ம குரு உங்களை தோல்வியடையச்செய்யவில்லை என்றாலும் வெற்றி வாசலைக் காட்டி அடுத்த கணமே கதவை மூடிவிட்டார். இதுவும் ஒரு வகையில் நல்லதுதான் என்றெண்ணி நீங்கள் தகுந்த சமயத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தீர்கள். இப்போது இரண்டாமிட தனஸ்தானத்து குரு அதிர்ஷ்டகரமான அற்புதங்களை அளிக்கப் போகிறார்.மொத்தத்தில் நல்லநேரம் இப்போது வந்துவிட்டது. நீங்கள் கோடுபோட்டால் ரோடு போடக்கூடியவர்கள்தான். இனி வெற்றிகள் உங்களை நோக்கி வரும்.நீங்கள் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடிகளும் வெற்றிப் படிகளைத் தொடுவதாகத்தான் இருக்கும்.

ஸ்ரீ சனி பகவானின் சஞ்சார நிலவரம்

முக்கிய கிரகங்களின் சஞ்சார நிலவரங்களை அனுசரித்துப் பார்க்கையில் உங்கள் ராசிக்கு 10,11 ஆகிய இடங்களுக்குரிய அதிபதியும் ஜீவனஸ்தானாதிபதியும் லாபாதிபதியுமான ஸ்ரீ சனி பகவான்ஏழாமிடமும் களத்திரஸ்தானமுமான துலாம் ராசியில் ; தொடர்ந்து சஞ்சரிக்கும் போது உங்கள் ராசியை அல்லவா பார்க்கப் போகிறார். இது கண்டச்சனியின் காலமாகும். எனவே நீங்கள் கண்டச்சனியாக இருக்கிறதே என்று கவலைப்பட வேண்டாம். ஏழாமிடத்து சனியால் இனிய பலன்கள் ஏற்படுமா? என்ற ஐயப்பாடே தேவையில்லை. ஒரளவு நல்ல நல்ல பலன்களை வழங்குவார் என்றாலும் பெரும்பாலும் நன்மையான பலன்களை செய்ய முடியாது என்பது தான் நிஜம்.எனவே கண்டச் சனியின் சஞ்சாரம் பற்றி சிறிது சிந்தித்து ஆராய்வோம்.

ஏழாமிடத்திலே ஸ்ரீசனிபகவானின் சஞ்சாரம் சிறந்ததும் உகந்ததும் அல்ல. ஏழாமிடத்திலே நடமாடும் ஸ்ரீசனிபகவானின் சஞ்சாரத்தை பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் கண்டச்சனி என்று கூறுவார்கள்.

ஆமெனவே சனியொன்று ரெண்டு நான்கு ஐந்தேழு எட்டொன்பான் பத்தீராறில்
நாமெனவே நின்றபலன் நவிலக்கேளுநாடிவரும்பகையொடு அலைச்சலுண்டாம்
போமெனவே தனதான்ய சேதமாகும் பொல்லாத பீடையுடன் வழக்கு நேரும்;
ஆமெனவே ஆரோக்கியம்குறைந்துஅடுத்திடும் ஈனப்பகையும் சண்டைதானே

என்ற இப்பாடலின்படி ஏழாமிடத்திலே சஞ்சரிக்கும் ஸ்ரீ சனி பகவான் நல்ல பலன்களைக் கொடுக்க மாட்டார் என்பது தெளிவாகிறதல்லவா! உழைப்புக்கு அதிபதி கிரகமே ஸ்ரீசனிபகவான் தான் என்பதால் அவர் பாதக ஸ்தானமான ஏழாமிடத்திலே சஞ்சரிப்பதன் காரணமாக பிழைப்புக்கு ஆதாரமாக உள்ள உழைப்பு எதிலுமே அலைச்சல், திரிச்சல், அல்லல், அலைக்கழிப்பு அதிகப்படும் என்பது தான் நிஜம்.

இதுவரை ஆறாமிடத்தில் சாதகச்சனியாக இருந்தவர் ஏழாமிடத்தில் இனி சங்கடச் சனியாக சஞ்சலங்கள் தரும் கண்டச்சனியாகப் பார்க்கும்போது கவலை, கலக்கம், மனோவியாக்கூலம் தான் அதிகம். எக்கச்சக்கமான இடைஞ்சல்கள்தான். எனவே  இந்த ஏழாமிடச்சனி இனி உங்களுக்கு ஏணிப்படிகளாக இன்றி எச்சரிக்கைப்படிகளாகவே இருக்கப்போகிறது. இவ்வளவு நாளும் திருநாளாக அற்புதமான ஆறாமிடத்திலிருந்த சனி தற்போது சஞ்சரிக்கும் ஏழாமிடத்தை கண்ட ஸ்தானம் என்பர். கண்டச் சனியின் காலம் நடைபெறுவதால்  இனி நீங்கள் ஏற முடியாது. அதேசமயத்தில் சர்ரென கீழே இறங்கி விடுவீர்களா என்றால் அதுவுமில்லை.ஆனால் எது எப்படி நடந்தாலும் கண்ட சனியின் பலன்களை தனுஸ்தானத்து ஸ்ரீ குருபகவசான் தூள் பரத்தி  அதிர்ஷ்டகரமான அட்டகாசமான நற்பலன்களை வாரி வழங்குவார் என்பது நிஜம்.

ஸ்ரீராகு-கேது பகவான்களின் சஞ்சார நிலவரம்

மேலும் முக்கிய கிரகங்களில் ஒன்றான நிழல் கிரகங்களான ஸ்ரீ ராகு பகவான் எட்டாமிடமான விருச்சிகத்திலும், ஸ்ரீகேதுபகவான் இரண்டாமிடமான ரிஷபத்திலும்; தொடர்ந்து சஞ்சரிப்பதால் அவதிகள் மெத்த உண்டு. எட்டாமிட ராகு கடவுளை நம்பினோர் கைவிடமாட்டார் என்பது மாதிரி அதிர்ஷ்டம் எப்போது வரும் என்று அதிர்ஷ்டத்துக்கே தெரியாது என்பது மாதிரி வாழப்போகிறீர்கள். நீ;ங்கள் எங்கும் எதிலும், நிதானமாகவும், பொறுமையாகவும், கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். ஸ்ரீகேதுவின் சஞ்சாரம் பணவரவு அதிகரிக்கும். நன்மைகள் கிடைத்துவிட சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு. 

வாக்கிய பஞ்சாங்க சித்தாந்தப்படி நிழல் கிரகங்களான ஸ்ரீ ராகு பகவானும் ஸ்ரீ கேது பகவானும் கார்த்திகை மாதம் 17ஆம்தேதி ஆங்கிலம் டிசம்பர் மாதம் 2ஆம்தேதி 2012 ஆம் ஆண்டு (2-12-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10-53  மணியளவில் ஸ்ரீ ராகுபகவான் பெயர்ச்சியாகி ராசி மாறி துலாம் ராசிக்கும், ஸ்ரீ கேது பகவான் பெயர்ச்சியாகி ராசிமாறி மேஷ ராசிக்கும்  11-31 நாழிகைக்குள் பிரவேசித்து ஒன்றை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்கிறார்கள்.

ஆனால் சுத்த திருக்கணித பஞ்சாங்க சித்தாந்தப்படி நிழல் கிரகங்களான பாம்பு கிரகங்கள் ஸ்ரீ ராகு பகவானும் ஸ்ரீ கேது பகவானும் மார்கழி மாதம் 8ஆம் தேதி ஆங்கிலம் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி 2012 ஆம் ஆண்டு (23-12-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீ ராகு பகவானும், அதே நேரம் ஸ்ரீ கேது பகவானும் பெயர்ச்சியாகி ராசிமாறி முறையே துலாம்ராசிக்கும்,மேஷராசிக்கும் பிரவேசித்து ஒன்னரைஆண்டுகாலம்சஞ்சாரம் செய்கிறார்கள்.

மொத்தத்தில் இருபஞ்சாங்கங்களின் சித்தாந்தப்படி ஸ்ரீராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு சாதாரணமாக-ஒரளவு அனுகூலமாகவே ஆரம்பமாகிறது என்றாலும் கேள்விக்குறியுடன் துவங்குகிறது என்று சொல்வது தான் பொருத்தம். சாதனைகளும், சோதனைகளும் சரிசமமாக இருக்கும். அதிர்;ஷ்ட காற்று திசைத் திரும்பியது மாதிரி இருக்கும். அது வெறும் கானல் நீராகத்தான் இருக்கும். ஆனால் சில குருட்டு அதிர்ஷ்டங்கள் நிச்சயமிருக்கும். எனவே நீங்கள் நீங்களாகவேதான் இருப்பீர்;கள். இந்த காலகட்டம் டோட்டலாக சரிஇல்லை என்று கூறி விட முடியாது. இறைவழிபாட்டின் மூலம் வெற்றி தரும் ஏழாமிடத்து ராகு- எதையும் யோசித்து செய்ய வைக்கும் ஜென்ம கேது. இந்த ராகு-கேது பெயர்ச்சி நெருப்பிலிட்ட தங்கம் போல் உங்களைச் சுத்தப்படுத்தி உயர்த்துவதுடன் உலக அனுபவங்களையும் தருவதாக அமையும்.

ஸ்ரீ குருபகவானின் சஞ்சார நிலவரம்

இதுவரை ஜென்மராசியில் இருந்த ஸ்ரீPகுருபகவான் இப்போது தனஸ்தானமெனும் இரண்டா மிடத்திற்கு வந்திருக்கிறார். இரண்டாமிடமென்பது குருவுக்கு எப்படிப்பட்ட இடம் தெரியுமா? சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் அற்புதமான நன்மைகளைத் தரக்கூடிய யோகமான நல்லகாலம்தான்.இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கும் என்ற கேள்விக்குறியும் எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்திடும்.உங்களுக்கு ஸ்ரீகுருபகவானின் கடாட்சத்தால் இனி விடிவு காலமே. ஸ்ரீகுருபகவானே உங்களைத் தூக்கி நிறுத்தி முன்வைத்து உயர்த்திடவும் வாழ்க்கையில் வளமான திருப்பங்கள் உண்டாக்கவும் செய்வார். இனிய சந்தோஷசந்தர்ப்பங்கள் இனி அதிகம் ஏற்படுத்துவார்.இனி நீங்கள் வசதியில் வளமாக உயர்ந்து, அதிர்ஷ்டகரமான யோகபலன்களின் பெருமையில் சுபீட்சமாக மிதந்து, வாழ்க்கையில் கொடிகட்டிப் பறப்பீர்கள் என்று சொல்லும் போது உங்களுக்கு தெம்பும் உற்சாகம் ஏற்பட்டு சந்தோஷக் கடலில் மிதப்பீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

ஜோதிட சாஸ்திரங்களும் – ஜோதிடச் சுவடிகளும்

இனிமேல் உங்களுக்கு நல்ல காலம்தான் என்ற வகையில் இரண்டாமிடத்து ஸ்ரீகுருபகவான் பற்றி நமது முன்னோர்கள் சிறப்பாக சொல்லியுள்ளார்கள்.

இரணியன் இரண்டில் – நிற்கக் குருபக்தி வாய்சாலன் வித்தை அன்றும்
குவலயத்தில் பேர் விளங்குவான் சுபபோகன் தாயே!- 

என்கிறார் புலிப்பாணி முனிவர்.

ஸ்ரீகுருபகவான் இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கிற போது ஜாதகனுக்கு குருபக்தி உண்டாகும். வாக்கு சாதுர்யம்,சாமர்த்தியம் அமையும். கல்வியில் மேம்பட்டும், செய்தொழில்,வியாபாரம் நுணுக்கமும் ஏற்படும். நல்லபேரும்,புகழும்,பெருமையும் நிறைந்து விளங்குவான். சகல சுக சௌகர்யங்களையும் அனுபவிப்பான் என்பது மேலே சொன்ன பாடலின் கருத்து. மேலும்பழந்தமிழ் ஞானிகள் – இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் ஸ்ரீPகுரு பகவானைப் பற்றி எப்படியெல்லாம் பாடியிருக்கிறார்கள் என்று பாருங்கள். இதோ உங்களை உற்சாகப்படுத்தும் மற்றுமொரு பாடல்.

பாரப்பாகுருவேதான் இரண்டுஐந்தேழ்பரிவாகும்நவத்தோடுபதினொன்றில் தான்
சீரப்பா நின்ற பலன் செப்பக்கேளும் சிவிகையோடு கரிபரி கல்யாணம் கூடும்
நேரப்பா பூஷணமும் மறையோர் நேயம் நிலையாகும் அரசருடன் பேட்டி காணும் கூறப்பாசுகமெல்லாம்கொடுக்கும்மெத்தக்குடும்பமதுதான்செழிக்கும்கீர்த்திஓங்கும்

– என்று ஏட்டிலேயும் பாட்டிலேயும் எழுதியிருப்பது நிச்சயமாக நடைமுறைக்கு சரிப்பட்டு வரும். உங்கள் மேஷ ராசியைப் பொறுத்தவரையில் இனிமேல் நல்ல யோகமான நன்மையான பலன்கள் பெரும்பாலும் பொருந்தி நடக்கும்.  நீங்களும் ஏராளமான அதிர்ஷ்டகரமான பலன்களை எதிர்பார்ப்பது நியாயமே.

ஆமெனவியாழனுமே இரண்டு ஐந்தேழ் அடுத்து ஒன்பது பதினொன்றில் வாழ
தாமெனசெல்வமொடு குதிரைஉண்டாம்தழைக்குமேகுடைதர்ம தானமோங்கும்
நாமெனத்தாய்தகப்பன்புதல்வராலேநன்மையாம்அருமையொடுபெருமைஉண்டாம்
போமேன அரசர்க்கு நல்லோனாக்கும் புகழ் சோபனம் நடக்கும் பூமியாள்வான்

– என்னும் ஜோதிடப் பாடல் இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் ஸ்ரீ குருபகவான் அதிர்ஷ்டகரமான அருமையான பலன்களை செய்வார் என்று கூறுகிறது.

பெருபதி னொன்றைத்தேழ்பேர் ஒன்பதாம் இரண்டில் தேவ
குருவரில் செல்வம் சீரூர் குதிரை வெண்குடை தீவர்த்தி
தருமமும் தானமுண்டு தாய் தந்தை துணையும் உண்டாம்
அருமையும் பெருமையுண்டாம் அரசர் சேவையும் உண்டாமே

என்ற ஜோதிடப் பாடலின் மூலம் இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் ஸ்ரீகுருபகவானால் பிரமாதமான பலன்கள் உண்டாகும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிந்து கொள்ளலாம். பல்லக்கும், குதிரையும், வெண்கொற்ற குடையும், தீவர்த்திகளும் அந்தக் காலத்து செல்வ சிறப்பை எடுத்துக்காட்டும் ராஜயோகப் பலன்களைக் குறிக்கிறது. ஆனால் இக்காலத்தில் இப்பாடலுக்கு பணவசதி உயரும். வளமான, சுபீட்சமான செழிப்பான வாழ்வு அமையும். நவநாகரீக ஆடம்பரமான உல்லாச வாழ்க்கையோடு கூடிய சொகுசான வண்டி, வாகன வசதி வந்தடையும் என்பதாகத்தான் பொருள் கொள்ள வேண்டும்.

இன்னுமொரு ஜோதிடப் பாடல் இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவைப் பற்றி…..

இரண்டிலே குருவரின் திரண்டிடும் பெருநிதி;- எனவே பணம் சம்பந்தமான வகையில் பெரிய அளவில் புரளும் என்பது இப்பாடல் மூலம் தெளிவாகிறது.

இரண்டாமிடத்தில் குரு சஞ்சரிக்கும் போது பொன்னும் பொருள்களும் சேரும் என்று வராக மிஹிரர் கூறுகிறார்.

வளமும் சுகமும் பெருகும்' என்பது பலதீபிகையை அருளிய மந்தீரேஸ்வரர் மகானின் அருள் வாக்காகும்.

மந்திரி பன்னொன் றென்பான் வளம் ஏழிலஞ்சிப்
வந்திரண்டிடத்தில் நிற்கில் மன்னர்க்கு நல்லவனாவான்
சுந்தர மனைவி மக்கள் சோபனம் சிவிகை உண்டாம்
தந்திரத்துடனே பூமி ஆளவும் தலைவனாமே

– என்று ஜாதகலங்காரப்பாடல் சாதகமாகத்தான் சொல்கிறது.

இனி நீங்கள் முயற்சிக்கும் காரியங்களில் முன்னைவிட மதிப்பும், மரியாதையும், செல்வாக்கும், எண்ணங்களில் தெளிவும், மனதில் தெம்பும், சிந்தனையில் தைரியமும், தன்னம்பிக்கையும், ஊக்கமும் அதிகரிக்கும். ஏடாகூடமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை யெல்லாம் லாவகமாகவும், சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், சமாளித்து போட்டி, பொறாமை, எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். சாதனை புரிவீர்கள்.

தனாதிபதியான ஸ்ரீகுருபகவான் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் அற்புதமாக சஞ்சரிப்பதால் பொருளாதாரத்தில் உயர்ந்து தேவைகள் எல்லாம் நல்லபடியாகவே நிறைவேறும்.உத்தியோகத்தில் சம்பளம் அதிகரிப்பும், வியாபாரத்தில் லாபம் கூடுவது, செய்தொழிலில், ஆதாயம் பெருகுவது, கலைத்துறையில் சம்பாத்தியம் உயர்வது போன்ற அடிப்படை வருமானம் முன்னைவிட அதிகமாகிவிடும்.

செய்தொழிலில், வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த முட்டுக் கட்டைகள், எதிர்பார்ப்புகள் தானாகவே நீங்கிவிடும். இதன்போக்கில் ஒரு அதிர்ஷ்டச் சூழ்நிலை உருவாகிவிடும். கடன்களை அடைத்துவிடுவீர்கள். புதிய திட்டங்களைத் துணிந்து மேற்கொள் வீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு முன்பைவிட அதிகம் கிடைக்கும். இனி யோகம் காலம்தான்.

குடும்பத்தின் தேவைகளை சமாளிப்பீர்கள்.கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி, ஏற்பட்டுக் கொண்டிருந்த கசப்பான கருத்து வேறுபாடுகளும், நீங்கி இணக்கமும், நெருக்கமும் சந்தோஷமாக தாம்பத்ய சுகம் மேலோங்கும். உத்தியோகத்தின் காரணமாக பிரிந்திருந்த கணவன், மனைவியர் இந்த குருமாற்றத்தால் குடும்பத்தோடு வந்து சேர்ந்து இணைந்து கொள்வார்கள். மொத்தத்தில் வளம் பெருகும். வாழ்க்கைத்தரம் உயரும்;

உத்தியோகஸ்தர்களுக்கு – செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும். ஊசலாடிக்கொண்டிருந்த சிலரது வேலையிலே நிரந்தரமும், பிடிப்பும் ஏற்படும்.

மாணவர்களுக்கு – கல்வியில் ஏற்றமும், முன்னேற்றமும் உண்டாகும். தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.என்றாலும் படிப்பில் கூடுதல் கவனம் தேவை.

வியாபாரிகளுக்கு – நல்ல அபிவிருத்தியுடன் லாபகரமான வருமானப் பெருக்கம் கூடுதலாகும். பிறர் அசந்திடும் பல உருப்படியான காரியங்களை செய்வீர்கள்.

தொழிலாளர்களுக்கு – உங்களது திறமையும், ஆற்றலும் வெளிப் படுத்த சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும். சிலர் சுயமுயற்சியில் சுயதொழில்அமைக்கவும் கூடும். 

கலைஞர்களுக்கு – சிறந்த திறமையாலும், யூகமான எண்ணங்களாலும், புதிய ஒப்பந்தங்களும், நல்ல சந்தர்ப்பங்கள் கைகூடும். சொந்த தயாரிப்பு வேண்டாம்.

அரசியல்வாதிகளுக்கு – உங்களுடைய தகுதியும், செல்வாக்கும் தனி முக்கியத்துவமும், உயரும். கணிசமாக பணமும் தேற்றிக் கொண்டு விடுவீர்கள்.

பெண்களுக்கு -கணிசமாகவும், சரளமாகவும் தாராளமாகவும் ஏராளமாகவும் பணம் புழங்குவதால் முகத்திலே தேஜஸ் பளிச்சென்று மகாலட்சுமி மாதிரி ஜொலிப் பீர்கள்.

ஸ்ரீ குருபகவானின் அருட்பார்வைகளினால் ஏற்படும் நன்மைகள்

ஸ்ரீகுருபகவானின் மூன்று பார்வைகளில் ஒரு பார்வையான ஐந்தாம் பார்வை உங்கள் ராசிக்கு ஆறாமிடமான கன்னியில் விழுகிறது. ஆறாமிடம் என்பது பகை, ருண, ரோக சத்ரு ஸ்தானமாகும். இதனால் கெடுதல்கள் பலவும் கட்டுக்கடங்கும் என எதிர்பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். வழக்குகள் சமரசமாகவோ சாதகமாகவோ தீர்ப்பாகும்.

ஸ்ரீPகுருபகவானின் மூன்று பார்வைகளில் மற்றொரு பார்வையான ஏழாம் பார்வை உங்கள் ராசிக்கு எட்டாமிடமான விருச்சிகத்தில் பதிவதால் நீடித்த வியாதிகள் தீர்வு காணும். பகை, பிணி, வம்பு, வழக்கு, போன்றவை தலையெடுக்காது. வேலை ஆட்களால் ஏற்பட்டு வந்த இக்கட்டு,இடைஞ்சல் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு குறைவு,போராட்டம், உழைப்பின் கடுமையால் உபத்திரவம், தொழில் துறைகளில் ஏற்பட்டகவலையும், கலக்கமும் உபத்திரவமும், தீரும்.

ஸ்ரீகுருபகவானின் அருள் பார்வைகளில் இன்னொரு பார்வையான ஒன்பதாம் பார்வை இந்த ராசியான பத்தாமிடமான மகரத்தில் வீசுவதால் உங்கள் வருமானத்தை உயர்த்துவதாலும், வாட்டத்தை குறைக்கவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும். கௌரவத்தில் விழுந்திருந்த கரும்புள்ளிகளை கழுவிக் கொள்வதோடு சிக்கல், சிரமம், தடை, தாமதம், உபத்திரவம், தொந்திரவு போகும் என்று எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் சிலருக்கு ஸ்திர சொத்துக்கள் வாங்கிவிடும் அதிர்ஷ்டமும் உள்ளது.

நட்சத்திரப்பலன்கள்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

ஞானகாரகன் என்று வர்ணிக்கப்பட்ட ஸ்ரீ கேதுபகவானின் ஆதிக்க பலம் பெற்ற அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு சீரான முன்னேற்றம் இருக்கும். இழந்தவைகள் திரும்பக் கிடைக்கும். செய்தொழில் வியாபாரத்தில் நெருக்கடிகள் இருக்காது. உத்தியோகத்தில் மாறுதல்கள் இருக்கும். தடைகளை மீறி வெற்றி கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சுயத்தொழிலில் மாற்றம் எதுவும் இருக்காது. உத்தியோகத்த்ல் சிறிய அளவில் டென்ஷன் இருக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

களத்திரக்காரகன் என்று வர்ணிக்கப்படும் சுக்ரனின் ஆதிக்க பலம் பெற்ற நட்சத்திரமான பரணி நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் மிகவும் அனுகூலமாக இருக்கும். குருவும் கேதுவும் போட்டி போட்டுக் கொண்டு நற்பலன்களைத் தருவார்கள். பழைய செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திருப்பம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் அடிக்கும். லாபங்கள் அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு

சூரியனின் ஆதிக்க பலம்பெற்ற கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் மிகவும் அனுகூலமாக இருக்கும். நீங்கள் நினைத்தது நிறைவேறும். இழந்ததை திரும்பப் பெறலாம். தொழில் வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நெருக்கடிகள் விலகி உயர்வு கிடைக்கும்.சுப காரியங்கள் நடக்கும். பண வசதி அதிகரிக்கும்.புதிய முயற்சிகள் வேண்டாம்.

மாதவாரியாகப்பலன்கள்

மே-17-5-2012 முதல் 31-5-2012 வரை – இக்காலக் கட்டத்தில்  இனி குதூகலம் அதிகரிக்கும். உங்கள் பேர், புகழ், செல்வாக்கு, சொல்வாக்கு அதிகரிக்கும். எல்லாமே நிறைவான எதிர் பார்ப்புகளோடு ஆரம்பமாகிறது. செய்தொழில், வியாபாரம் பல வகையில் முன்னேற்றம், புதுத் திருப்பம், லாபகரமான வருமானப் பெருக்கம் அதிகரிக்கும்.

ஜூன்-1-6-2012 முதல் 30-6-2012 வரை – இக்கால கட்டத்தில் நிழல் கிரகங்களினால் வீடு,நிலம்,மனை,கட்டிடம் போன்ற ஸ்திர சொத்துக்களில் ஆதாயமும், அனுகூலமும், பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல் சிரமங்கள் விலகி அனுகூலமாகும். பாகப்பிரிவினைகளில் வருமானமும் இருந்திடும் பலருக்கு புதிய தொழில், அமையக்கூடும்.

ஜூலை – 1-7-2012 முதல ;31-7-2012 வரை- இக்காலக் கட்டங்களில்  முயற்சிக்கும் காரியங்களில் முழு வெற்றி;. உடல்நலக் குறைவும் வாக்கு கொடுத்தால் சிறிது விரயங்களுக்கு ஆளாகவும் நேரிடும். மனைவியால் தொல்லை, செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரியாகலாம். கீழ்நிலை ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய தொழில் முயற்சி பலன் தரும்.

ஆகஸ்ட்-1-8-2012  முதல் 31-8-2012  வரை – இக்காலகட்டம் தைரியமும், தன்னம்பிக்கையும், ஊக்கமும், யுக்தி, புத்தி, திடசிந்தனையும் அதிகரிக்கும். முயற்சிக்கும் காரியங்களில் செயல்வேகமும் மும்முரமாகி வெற்றியும் கிட்டிடும். வருமானம் தாராளமாகவும், சரளமாகவும், கணிசமாகவும் புரண்டுக்கிட்டிருக்கும். கொடுக்கல், வாங்கல் அனுகூலமாக நடைபெறும். கடன்கள் வசூலாகும். தேவைக் கதிகமாகவே பணம் புரளும்.

செப்டம்பர்-1-9-2012 முதல் 30-9-2012 வரை- இந்த காலக்கட்டம் நல்லதையே செய்யும். பல்வேறு சௌகர்யங்கள், லாபங்கள், வெற்றிகள் ஏற்பட்டுவிடும். வாக்கு சாதுர்யம், வெற்றியும் தரும். உடல் நலம் நன்கு அமையும். பணவசதி அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புது வீடு, மனை, வண்டி, வாகனம், வாங்கும் யோகம் ஏற்படும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் சிக்கல், சிரமம் ஏற்பட்டு சரியாகிவிடும்.

அக்டோபர் -1-10-2012 முதல் 31-10-2012 வரை – இக்காலக்கட்டம் உங்களுக்கு சாதகமாகத்தான் இருக்கும் புதிய முயற்சிகளும் அனு கூலமாகும். பணவசதி தேவைக்கதிகமாக உபரியாகவே புரளுவதால் பொருளாதாரத்தில் மேன்மையும், கொடுக்கல், வாங்கலில் அபிவிருத்தியும் உண்டாகும். அரசாங்க சம்பந்தப்பட்ட வகையில் எதிர்பார்த்த ஆதாயமும், சலுகைகளும் கிட்டிடும். வம்பு, வழக்கு அனுகூலமாகும்.

நவம்பர் 1-11-2012 முதல் 30-11-2012 வரை – இந்தக்காலக்கட்டம் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். கடன் கொடுக்கல், வாங்கலில் பிக்கல் பிடுங்கலிலிருந்து விடுபட்டு, அடமானத்திலிருந்த நகை நட்டுகளை மீட்பீர்கள். புதிய பொருட்கள் சேரும். வீடு, வாகனாதி பதிகள் திருப்தி தரும். குடும்ப வாழ்வில் தன்னிறைவு, கடன்கள் மறையும். எழுத்து மூல நன்மைகள், அரசாங்க வகை ஆதாயம், அனுகூலமும் கிட்டிடும்.

டிசம்பர் -1-12-2012 முதல் 31-12-2012 வரை – இந்தக்காலகட்டம் மிகவும் பயனுள்ள தாகவே இருக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். புதிய மனிதர்களை சந்திப்பீர்கள். தீராத பிரச்னைகள் தீரும்.செய்தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த தட்டுத்தடங்கல் நீங்கி, மந்தநிலை மறைந்து புதுத் தெம்புடன் சுறுசுறுப்பு ஏற்படும். நல்ல வெற்றி உண்டாகும்.உத்தியோகத்தில் உயர்வுகள் கிடைக்கும்.

ஜனவரி -1-1-2013 முதல் 31-1-2013 வரை – இக்காலகட்டத்தில் மீண்டும் உங்களைத் தலைநிமிரச் செய்யும். தடைபட்ட நிகழ்ச்சிகள் நடக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றியடைவீர்கள். பணப்புழக்கம் சரளமாக-தாராளமாக இருக்கும். செய்தொழில், வியாபாரம் எதுவானாலும் விரும்பத்தக்க மாறுதல்கள் இருக்கும். உத்தியோகத்தில் திடீர் பிரமோஷன் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் மிகச் சுலபமாகவும் நடக்கும்.

பிப்ரவரி -1-2-2013 முதல் 28-2-2013 வரை – இக்காலகட்டத்தில் குடும்ப வாழ்வு பூரிப்பாகவும், சுபீட்சமாகவும் இருக்கும். செய்தொழில், வியாபாரம் வணிகம், ஜீவனம் சம்பந்தப்பட்ட வகைகளில் எதுவானாலும் அமோகமான லாபமும் புதிய தொழில் வியாபாரம் தொடங்க, வேலை வாய்ப்பு பெற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோக ஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வும் கிட்டிடும். கடன் வகையில் நிவர்த்தியும், ஏற்படும்.

மார்ச்-1-3-2013 முதல் 31-3-2013வரை – இந்தக் காலக் கட்டத்தில் முயற்சிக்கும் காரியங்களில் சாதனை புரிவீர்கள். பொருளாதார நிலையில் உயர்வும், செல்வாக்கும், சொல் ;வாக்கு யாவும் அற்புதமாக இருக்கும். ஜீவனம் சம்பந்தப்பட்ட வகையில் எதுவானாலும் பிரமாத மான லாபகரமான வருமானப் பெருக்கமும் கூடுதலாகிவிடும். குடும்பத்தில் நீண்ட காலமாக தடைப்பட்டிருந்த அல்லது சுணக்கமான சுபகாரிய முயற்சிகள் கைகூடும்.

ஏப்ரல் 1-4-2013 முதல் 30-4-2013 வரை – இந்தக் காலக் கட்டம் இருந்து வந்த சோதனைகள், வேதனைகள் நீங்கி சாதனைகள் சந்தோஷமாக நிகழ்வதாகவே இருக்கும். நீண்ட காலமாக தடை பட்ட வழக்குகள், வியாஜ்ஜியங்கள், கோர்ட் விவகாரங்கள் ஒரு முடிவுக்கு வரும். வியாபாரிகள், மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடுவார்கள். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்கும். பழைய வீட்டை விற்று புதுவீடு வாங்குவீர்கள். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள்.

மே 1-5-2013 முதல் மே 27-5-2013 வரை – இக்காலக்கட்டத்தில் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உண்டு. முயற்சிக்கும் காரியங்களில் முழுவெற்றி கிட்டிடும். செய்தொழில், வியாபாரம் உத்தியோகம் எதுவானாலும் திடீர் திருப்பங்களும் உண்டு. மேன்மையும், பொருளாதார உயர்வும், செல்வாக்கும், சொல்வாக்கும் அதிகரிக்கும் நிலையாகவும் இருந்திடும். நீண்ட தூரப் பயணங்களால் நன்மைகள் ஏற்படும்.

ஆனால் அடுத்து வரும் மிதுன குருப்பெயர்ச்சி கேள்விக்குறியாகத்தான் இருக்கும். ஒரு இருண்ட காலம் வருவதற்கான அறிகுறிகள் சூழ்நிலைகள் எதிர்கொண்டாலும் வெளிச்சத்தை ஸ்ரீ குருபகவான் காட்டுவார். எனவே அடுத்து வரும் குருப்பெயர்ச்சியை வரவேற்கத் தயாராகுங்கள். எதிர்காலத்தில் உஷார்நிலையில் செயல்படுங்கள்.

குரு வாழ்க! குருவே துணை!![rps]

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி