அரசியல்,முதன்மை செய்திகள் திருப்பூரில் இன்று விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம்-ஜெ. ஸ்டைலில் பிரமாண்ட கூட்டம் கூட்ட ஏற்பாடு

திருப்பூரில் இன்று விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம்-ஜெ. ஸ்டைலில் பிரமாண்ட கூட்டம் கூட்ட ஏற்பாடு

vijayakanth

Vijayakanth conducting rally in thirupur like the sameway jayalalitha did

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஸ்டைலில் திருப்பூரில் இன்று விஜயகாந்த் தலைமையில் பிரமாண்ட தேமுதிக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் ஒவ்வொரு நகரமாக போய் கண்டனக் கூட்டங்களை நடத்தி வருகிறார். இதில் பல லட்சம் பேர் கூடி வருவதால் தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பு அதிகரித்து வருகிறது.

தற்போது அதே பாணியில் விஜயகாந்த்தும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் குதித்துள்ளார். முதல் கட்டமாக திருப்பூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஜவுளி தொழிலை பாதுகாக்க வேண்டும், பஞ்சு ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும், தொழிலாளர் நலனை காக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் விஜயகாந்த் தலைமையில் நடைபெறவுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தநர். ஆனால் போலீஸ் அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து திருப்பூர் மில் ரோட்டில் உள்ள ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடைத்துள்ளது.

அங்கு பிரமாண்ட ஏற்பாடுகளை தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் செய்து வருகின்றனர். ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகே மேடை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக விஜயகாந்த் இன்று காலை 11 மணிக்கு விமானம் மூலம் கோவை வருகிறார். சூலூர் அருகே உள்ள ராவுத்தர் தோட்டத்தில் தங்குகிறார். மதியம் அங்கிருந்து திருப்பூர் புறப்பட்டு செல்கிறார். 3 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

விஜயகாந்தை வரவேற்று திருப்பூரில் வரவேற்பு வளைவுகள், பேனர்கள் கட்டப் பட்டுள்ளது. 30 இடங்களில் வரவேற்பு வளைவுகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவினாசி ரோடு, பல்லடம் ரோடு, பி.என்.ரோடு, ஊத்துக்குளி, காங்கயம் ரோடு, ஆகிய பகுதிகளில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

10 ஆயிரம் கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என வடக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் தினேஷ்குமார் தெரிவித்தார்.

விஜயகாந்த் வருகையையொட்டி திருப்பூரே விழாக் கோலம் பூண்டு காணப்படுகிறது

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி