திரையுலகம் விக்ரம் இப்பவும் என் நண்பர்தான் – டைரக்டர் சசிக்குமார் பதில்

விக்ரம் இப்பவும் என் நண்பர்தான் – டைரக்டர் சசிக்குமார் பதில்

sasivikram

பகுத்தறிவு விஷயத்தில் டைரக்டர் சசிக்குமார் அவருடைய குருநாதர் பாலா மாதிரி! சிவன் என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்தார்கள். துவக்கவிழாவோடு நின்றது படம். அதன்பின் ஈசா என்றொரு படம் வந்தது. ஒட்டிய போஸ்டரை கூட மாடு தின்னவில்லை. இப்போது தனது படத்திற்கு ‘ஈசன்’ பெயர் வைத்திருக்கிறார் சசி. மேலே சொன்ன டைட்டில்களின் வரலாறு அறியாதவர் அல்ல அவர். பின் ஏன் இப்படி? நாம்தான் சொன்னோமே, பகுத்தறிவு விஷயத்தில் அவர் எப்படி என்று!

நடிகர் விக்ரம் தயாரிப்பில் உருவாகி, சசிக்குமார் இயக்கிய படம்தான் இது. பின்பு படத்தை நானே தயாரித்துக் கொள்கிறேன் என்று கைமாற்றிக் கொண்டார் சசி. படமே முடிந்துவிட்டது. இப்போதுதான் டைட்டிலை அறிவித்தார்கள். “என்னென்னவோ பேரு செலக்ட் பண்ணி வச்சுருந்தேன். அதில எனக்கு ஆப்ட்டா தெரிஞ்சது இந்த பேருதான் என்ற சசி, படம் எப்படி விக்ரமிடமிருந்து தன் கைக்கு மாறியது” என்ற விபரத்தையும் கூறினார்.

“வேறொரு தயாரிப்பாளருடன் இணைந்துதான் இந்த படத்தை தயாரித்தார் விக்ரம். செலவு அதிகமாகறதா ஃபீல் பண்ணினாங்க. அவங்களுக்கு இது முதல் படம் வேற. சரி… நானே தயாரிச்சுக்கிறேன் என்றேன். அவரும் சம்மதிச்சார். இப்பவும் சொல்றேன். விக்ரம் சார் என் இனிய நண்பர்தான்” என்றார் சசி. விக்ரம் இதில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்று வெளிவந்த தகவல்கள் சுத்த கப்சாதானாம். போகட்டும்… நாடோடிகள் படத்தில் சசிக்குமாருக்கு தங்கையாக நடித்த அபிநயாதான் இந்த படத்தில் ஹீரோயின். ஏன் தொடர்நது அபிநயா? என்று கேட்காமலிருந்தால்தான் ஆச்சர்யம். அதற்கும் பதிலளித்த சசி, “நாடோடிகள் பண்ணும் போதே என் அடுத்த படத்தில் நீதான் ஹீரோயின் என்று சொல்லியிருந்தேன். சொன்ன வாக்கை காப்பாற்ற வேண்டாமா? அதான் இப்படி. இனிமே அவங்க வெளி கம்பெனி படங்களிலும் நடிப்பாங்க” என்றார். முன்பே பலரும் கிசுகிசுத்த மாதிரி தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் மிக முக்கியமான ரோலில் நடிக்கிறார். டைரக்டர் சமுத்திக்கனி நல்ல போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

‘ஈசன்’ மதுரையில் நடக்கும் கதையல்ல. சசிக்குமார் முதன் முதலாக தனது எண்ணத்தை சென்னை பக்கம் திருப்பியிருக்கிறார். சென்னையில் நடக்கும் இரவு வாழ்க்கை பற்றிய படம்தான் இது. யாராலும் யூகிக்க முடியாத எனது யதார்த்தத்தையும் விட்டுக் கொடுக்காத கமர்ஷியல் படமாக இருக்கும் என்றார்.

சசிக்குமார் படம் என்றோலே அது கமர்ஷியல் ஹிட்டுதான் என்பதை தனியாக வேறு சொல்லணுமா என்ன?

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி