செய்திகள்,விளையாட்டு உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா தோல்வி!…

உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா தோல்வி!…

உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா தோல்வி!… post thumbnail image
அடிலெய்டு:-11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 14ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாட்டில் நடக்கிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பு பயிற்சி ஆட்டங்கள் நடக்கிறது. நேற்று முதல் 13–ந்தேதி வரை பயிற்சி போட்டி நடக்கிறது. அடிலெய்டில் நேற்றைய முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் பெய்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் களம் இறங்கினார். முதல் ஓவரை ஸ்டுவர்ட் பின்னி வீசினார். இதில் முதல் பந்தை வார்னர் பவுண்டரிக்கு விரட்டினார்.

இருவரும் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆஸ்திரேலியாவின் ரன் வேகம் அதிகரித்தது. இந்த ஜோடியை பின்னி பிரித்தார். அவரது பந்தில் ஆரோன் பிஞ்ச் அவுட் ஆனார்.
அவர் 20 பந்தில் 20 ரன் எடுத்தார். அப்போது ஸ்கோர் 62 ரன்னாக (8.2 ஓவர்) இருந்தது. அடுத்து டேவிட் வார்னருடன் வாட்சன் ஜோடி சேர்ந்தார். வாட்சன் 22 ரன் எடுத்திருந்த போது மோகித் சர்மா பந்தில் அவுட் ஆனார். அதற்கு அடுத்த ஓவரில் ஸ்டீவன் ஸ்மித் ஒரு ரன்னில் உமேஷ் யாதவ் பந்தில் போல்டானார்.
விக்கெட் வீழ்ந்த போதிலும் டேவிட் வார்னர் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். அவர் 80 பந்தில் சதம் அடித்தார். இதில் 13 பவுண்டரி, 2 சிக்சர் அடங்கும். சதம் அடித்த சிறிது நேரத்தில் அவர் அவுட் ஆனார். அக்ஷர் பட்டேல் பந்தில் போல்டானார். வார்னர் 104 ரன் எடுத்தார். அப்போது, ஸ்கோர் 26.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்னாக இருந்தது. கேப்டன் பெய்லி 44 ரன்னில் வெளியேறினார்.அடுத்து ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல்–மார்ஷ் அதிரடியாக விளையாடினர். 21 ரன்னில் மார்ஷ், உமேஷ் யாதவ் பந்தில் அவுட் ஆனார். அதற்கு அடுத்த பந்தில் மேக்ஸ்வெல் பவுண்டரி அடித்து சதத்தை தொட்டார். அவர் 53 பந்தில் சதம் அடித்தார். அந்த ஓவரில் மேலும் ஒரு பவுண்டரி 3 சிக்சர் அடித்து 27 ரன்களை மேக்ஸ்வெல் எடுத்தார். 122 ரன்னுடன் அவர் தானாக வெளியேறினார். அவர் 11 பவுண்டரி 8 சிக்சர் அடித்தார். அடுத்து களம் வந்த ஸ்டார்க் ரன் எதுவும் எடுக்காமலும் ஜான்சன் 19 ரன்னிலும், கும்மின்ஸ் 5 ரன்களிலும் அவுட் ஆனார்கள். ஆஸ்திரேலியா 48.2 ஓவரில் 371 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது.

பின்னர் வெற்றிக்கு 372 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித்தும், தவானும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி வந்த நிலையில் ரோகித் 8 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து கோலி தவானுடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய கோலியும் சிறிது நேரத்தில் துரதிருஷ்டவசமாக இன்சைட் எட்ஜ் மூலம் 18 ரன்னுக்கு போல்டானார். அடுத்து ரகானே தவானுடன் ஜோடி சேர்ந்தார். ரகானேவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக லெக் சைடில் இறங்கி ஆப் சைடில் அவர் சிறப்பான ஷாட்களை அடித்தார். நன்றாக விளையாடி கொண்டிருந்த அவர் 66 ரன்களில் அவுட்டாக, அடுத்த சில நிமிடங்களில் தவானும் 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போட்டியில் தவான் தனது இழந்த பார்மை மீட்டு அரை சதம் அடித்தது உலக கோப்பை மீதான இந்திய அணியின் நம்பிக்கையை அதிகரித்தது. அடுத்து களமிறங்கிய ரெய்னா 9 ரன்னில் ரன் அவுட்டாக, கேப்டன் தோனி டக் அவுட்டாகி வாத்து நடை நடந்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி