செய்திகள்,திரையுலகம் என்னை அறிந்தால் (2015) திரை விமர்சனம்…

என்னை அறிந்தால் (2015) திரை விமர்சனம்…

என்னை அறிந்தால் (2015) திரை விமர்சனம்… post thumbnail image
கேங்ஸ்டார், கேங்வார்… என்பார்களே அதுமாதிரி ஒரு ரவுடி கும்பலின் தலைவன் டேனியல் பாலாஜியின் துப்பாக்கி குண்டுகளுக்கு தன் அப்பாவி ஆசை அப்பா நாசரை சிறுவயதிலேயே பறிகொடுக்கு அஜீத், தன் தாயின் எம்பிபிஎஸ்., கனவை நிராகரித்து, ஐபிஎஸ் ஆபிஸராகிறார். தன் அப்பாவை கொன்றவன் மாதிரியான கேங்ஸ்டார் ரவுடிகளை அவர்களது கூட்டத்திலேயே இருந்து கொண்டு கொன்று குவித்து, நாட்டுக்கு நல்லது செய்வது தான் தலயின் லட்சியம். இந்த லட்சியத்திற்காக அருண் விஜய் மூலம் ஒரு பெரும் போதை மருந்து கும்பலில் சேர்ந்து தானும் ஒரு தல என்பது மாதிரி செயல்படும் அஜீத், ஒரு கட்டத்தில் அந்த போதை மருந்து கும்பலை கூண்டோடு கைலாசம் அனுப்புகிறார். அதில் ஜஸ்ட்-எஸ்கேப் ஆகும் அருண் விஜய்யின் கண்களுக்கு நம்பிக்கை துரோகியாக தெரிகிறார் அஜீத். அஜீத்துக்கு, கணவரை விவாகரத்து செய்துவிட்டு ஒரு பெண் குழந்தையுடன் தனித்து இருக்கும் பரதநாட்டிய மங்கை த்ரிஷா மீது இருக்கும் காதலை தெரிந்து கொண்டு, அஜீத்-த்ரிஷா திருமணத்திற்கு முதல்நாள் த்ரிஷாவையும், அவரது அப்பாவையும் கொடூரமாக தீர்த்து கட்டுகிறார் அருண் விஜய்.

இதில் துடித்து போகும் அஜீத், த்ரிஷாவின் பெண் குழந்தையுடன் போலீஸ் உத்யோகமே வேண்டாம் என இந்தியா முழுக்க சில ஆண்டுகள் சுற்றி வருகிறார். ஒருகட்டத்தில் ஊர் திரும்பும் அஜீத்தை தேடி வரும் அவரது நண்பர் சரவணன், தன் பெண் குழந்தை எழும்புர் ரயில் நிலையத்தில் திடீர் என காணாமல் போனதாகவும், அவரை நீ நினைத்தால் கண்டுபிடித்து தரலாம்… என்றும் கதறுகிறார். உடனடியாக களம் இறங்கும் அஜித் தன் போலீஸ் நண்பர்கள் உதவியுடன் அந்த பெண் குழந்தையை மீட்கிறார். அந்த கடத்தல் கும்பலோ., வியாதியில் வீல்சேரில் இருக்கும் கோடீஸ்வரர்களுக்காக ஆட்களை கடத்தி., அவர்களது இரத்தத்தில் தொடங்கி இருதயம் வரை உடல் உறுப்புகள் அத்தனையையும் விற்று கோடிகளாக்கும் கொடூர மனம் படைத்த கும்பல்… அந்த கும்பலின் தலைவன், அஜித்தின் பங்காளி பகையாளி அருண் விஜய். அருண்விஜய்யின் அடுத்த இலக்கு… அமெரிக்காவில் இருந்து திரும்பும் அனுஷ்காவின் உடம்பும் உறுப்புகளும். மீண்டும் போலீஸ் டூட்டியில் சேரும் அஜித், விஜய் கேங்கிடமிருந்து, அனுஷ்காவை எப்படி காபந்து செய்கிறார் என்பதுதான் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் படமாக்கப்பட்டிருக்கும் என்னை அறிந்தால் படத்தின் மீதிக்கதை.

இந்த கதையுடன் த்ரிஷாவின் மகளுடனான பாசத்தையும் அனுஷ்காவுடனான அஜித்தின் காதலையும் கலந்து கட்டி கலர்ஃபுல்லாக படமாக்கி இருக்கிறார் இயக்குநர் கௌதம். அஜித் சால்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலிலும் சரி, இளம் பிராயத்து ஹேர் ஸ்டைலிலும் சரி அதிரடி ஆக்ஷனில் அசத்தி இருக்கிறார். ஐ.பி.எஸ் ஆபீஸராக அவர் காட்டும் கம்பீரமும், நடை, உடை பாவனைகளும் தியேட்டரில் விசில் சப்தம் தூள் பறக்க செய்கிறது. த்ரிஷாவுடனான சென்டிமெண்ட் காதலிலும் சரி., அனுஷ்காவுடனான இன்ஸ்டண்ட் காதலிலும் சரி அஜித் சார் அசத்துகிறார். வாவ். த்ரிஷாவின் மகளை தன் மகளாக பாவித்து பாசம் காட்டும் இடங்களிலும், அப்பா நாசரின் ஆன்மா தன் உடன் இருந்து தன்னை, நேர்வழியில் நடத்துவதாக நம்பும் காட்சிகளிலும் கூட ரசிகர்களை சீட்டோடு கட்டிப் போட்டு விடுகிறார் தல. த்ரிஷா, கொஞ்ச நேரமே வந்தாலும் நச் என்று வந்து பச்சக் என்று தலையின் நெஞ்சத்தில் மட்டும் அல்லாது தல ரசிகர்களின் நெஞ்சங்களிலும் பசை போட்டு ஒட்டி இறுதியில் உச் கொட்ட வைக்கிறார். அனுஷ்கா தேன்மொழியாக விழியாலேயே நிறைய காதல்மொழி பேசி அசத்துக்கிறார். அஜித் படங்களில் வில்லனுக்கும் உரிய மரியாதை உண்டென்ற வகையில் அருண் விஜய் நிறையவே நடித்திருக்கிறார். ஆனாலும்., அத்தனை பெரிய போலீஸ் டீமிற்குள் புகுந்து புறப்பட்டு அஜித்தின் மகளை கடத்துவதும் அனுஷ்காவை தன்னிடம் ஒப்படைக்க சொல்லி மிரட்டுவதும் நம்பும்படியாக இல்லை.

அமிதாப் அபிஷேக் பச்சன்களின் உயரத்துடன் அனுஷ்காவின் உயரத்தை கம்பேர் செய்து அடையாறில் டிராபிக் எப்படி இருக்குன்னு பார்த்து சொல்லுங்க… என விவேக் கலாய்ப்பதை ரசிக்க முடிகிறது. குழந்தை ஈஷா, நாசர், ஆர்.என்.ஆர். மனோகர் போலீஸ் அதிகாரியாக ஒரு சில காட்சிகளில் வரும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.டேன்மெகார்தரின் ஒளிப்பதிவு இருட்டிலும் ஒளிர்ந்திருக்கிறது. ஆனாலும் தலக்கு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஷாட்டுகள் வைக்காத குறை. ஹாரீஸ் ஜெயராஜின் இசையில், பம்பம் மரகதா பம்பம் மரகதா…, வாராஜா வா… அதாரு உதாரு… உள்ளிட்ட ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ர(ரா)கம்! பாடல்களை காட்டிலும் பின்னணி இசை மிரட்டில். கௌதம் மேனனின் எழுத்து இயக்கத்தில், சுமார் இரண்டு மணிநேரம் 57 நிமிட படத்தில், பிளாஷ்பேக் த்ரிஷா எபிசோடுகள் (என்னதான் த்ரிஷா கொள்ளை அழகு என்றாலும்..) சற்றே போரடிப்பது… த்ரிஷா உயிர்போக ஒருவகையில் அஜீத்தும் காரணம் எனும்போது, அனுஷ்காவை, அருண் விஜய் அண்ட்கோவினர் கடத்த திட்டமிடும் நாளில், த்ரிஷாவின் மகளை ஸ்கூலுக்கு அனுப்ப அஜீத் அஜாக்கிரதையாக சம்மதிப்பது உள்ளிட்ட மைனஸ்பாயிண்ட்டுகள் தலயின் என்னை அறிந்தால் படத்தை சற்றே போரடிக்கிறது.

மொத்தத்தில் ‘என்னை அறிந்தால்’ ஆக்சன் அதிரடி…………….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி