செய்திகள்,திரையுலகம் சோக்கு சுந்தரம் (2014) திரை விமர்சனம்…

சோக்கு சுந்தரம் (2014) திரை விமர்சனம்…

சோக்கு சுந்தரம் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
ஊரில் கலர் கலர் ஆடைகள், கண்ணாடிகள் மற்றும் நகைகளை போட்டுக் கொண்டு நண்பர்களுடன் ஜாலியாக சோக்காக வாழ்ந்து வருகிறார் சோக்கு சுந்தரம் (எம்.ஆர்). இவர் காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கிறார். ஆனால் இவரை ஒரு பெண் கூட காதலிக்கவில்லை. இதனால் காலம் கடந்து வாலிப வயதை தாண்டுவதால் இவருடைய அம்மாவான வடிவுக்கரசி வருத்தப்படுகிறார். இந்த சூழ்நிலையில் சுந்தரத்திற்கு யோகா சொல்லித்தர டீச்சர் ஒருவர் வருகிறார். அவர் தொட்டு பேசி யோகா சொல்லித்தருவதால் அவள் மீது காதல் கொள்கிறார். அவள் சிரித்து பேசி தன் பிறந்தநாளுக்கு வீட்டிற்கு அழைக்கிறார். சுந்தரமும் அவளுடைய பேச்சை கேட்டு தன் நண்பர்களை விட்டு செல்கிறார். அங்கு சுந்தரத்தின் நகைகளை எல்லாம் பறித்துக் கொண்டு ஏமாற்றி விடுகிறார்.

அதன்பிறகு வாஸ்து மீசை வைத்தால் உங்களுக்கு பெண்கள் காதல் வலையில் விழுவார்கள் என்று சுந்தரத்திடம் சாமியார் சொல்ல, அவரும் அதை வைத்துக் கொண்டு ஒரு பெண்ணை காதல் வலையில் விழவைக்கிறார். ஆனால் மறுநாளே அந்தப் பெண்ணுக்கு வேறொருவருடன் நிச்சயம் நடந்து விடுகிறது. இதனால் வருத்தமடைகிறார் சுந்தரம்.இந்நிலையில் அதே ஊரில் வசிக்கும் ராஜாவின் தங்கை, தான் காதலிக்கும் பையனுடன் சுந்தரம் வீட்டிற்கு அடைக்களம் தேடி வருகிறாள். சுந்தரம் அந்த காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கிறார். இதை பார்க்கும் ராஜா கோபம் அடைகிறார். என் தங்கைக்கு காதல் திருமணம் செய்து வைத்ததால் உனக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்றும், நீ யாரை காதலித்தாலும் அவர்களை உன்னுடன் சேர விடமாட்டேன் என்று சவால் விட்டு செல்கிறான்.இறுதியில் சுந்தரம் காதலித்து திருமணம் செய்து கொண்டாரா? ராஜா அதை தடுத்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் சோக்கு சுந்தரம் கதாபாத்திரத்தில் எம்.ஆர். நடித்திருக்கிறார். கதைக்கு ஏற்றார் போல் வாலிப வயதை கடந்த ஒருவர் காதலிப்பது என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். ஆனால் நடிப்புதான் வரமாட்டிங்குது. காமெடி என்னும் பெயரில் இவர் செய்யும் செய்கைகள் போன்ற நடிப்பு கடுப்பை வரவழைக்கிறது. குறிப்பாக பாடலுக்கு இவர் நடனமாடுவது ரசிக்கும்படியாக இல்லை. நாயகியாக நடித்திருக்கும் சௌஜன்யா நடிக்க முயற்சி செய்திருக்கிறார். யோகா டீச்சராக வரும் நிஷா கவர்ச்சியில் ரசிகர்கள் மனதை கவர்கிறார்.படத்தில் வரும் குள்ளசுந்தர், போண்டாமணி, சாப்ளின் பாலு, பெஞ்சமின் மற்றும் கராத்தே ராஜா ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். அம்மாவாக நடித்திருக்கும் வடிவுக்கரசி வழக்கம்போல் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.ஜேம்ஸ் விக்டர் இசையில் கானா பாலா பாடிய ‘கப்பல் விடாதே கட்டாந்தரையில் கவிழ்ந்து விடாதே..’ பாடல் மட்டும் குத்தாட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு பொருந்தாமல் இருக்கிறது. மகிபாலன் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். வாலிப வயதை கடந்த ஒருவன் காதலித்துதான் திருமணம் செய்ய ஆசைப்படும் கதையை காமெடி கலந்து கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் ஆணைவாரி ஸ்ரீதர். காமெடி படத்திற்கான வசனங்கள் மற்றும் கதாபாத்திரங்களை சரியாக அமைத்திருந்தால் ரசித்திருக்கலாம்.

மொத்தத்தில் ‘சோக்கு சுந்தரம்’ பந்தா…………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி