அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் சீனாவுக்கு வருமாறு மோடிக்கு அதிபர் ஜின்பிங் அழைப்பு!…

சீனாவுக்கு வருமாறு மோடிக்கு அதிபர் ஜின்பிங் அழைப்பு!…

சீனாவுக்கு வருமாறு மோடிக்கு அதிபர் ஜின்பிங் அழைப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். முதல் நாள் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்ற ஜின்பிங் ஆமதாபாத் நகரில் அவரைச் சந்தித்து பேசினார். அப்போது குஜராத்தின் 3 முக்கிய திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.டெல்லியில் பிரதமர் மோடியும் ஜின்பிங்கும் மீண்டும் சந்தித்துப் பேசினர். அப்போது இருதரப்பு எல்லைப் பிரச்சினைக்கும் தீர்வு காண்பது உள்பட பல்வேறு விஷயங்களை இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின.

இந்நிலையில் டெல்லி தாஜ் ஓட்டலில் தங்கியிருந்த சீன அதிபர் ஜின்பிங்கை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று காலை சந்தித்து பேசினார். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு வெளிநாட்டுத் தலைவர் ஒருவரை சோனியாகாந்தி சந்தித்து பேசுவது இதுவே முதல் முறை.இந்த சந்திப்பின்போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, கட்சியின் மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர்.நேற்று ஜின்பிங் தனது மனைவியுடன் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார்.இதனிடையே பிரதமர் மோடியை தனது நாட்டுக்கு விரைவில் பயணம் மேற்கொள்ள வருமாறு ஜின்பிங் அழைப்பு விடுத்தார்.சீனா வரும்போது தனது சொந்த ஊரான ஷியான் நகருக்கு முதலில் வருமாறு மோடியை, ஜின்பிங் கேட்டுக் கொண்டார். 1,300 ஆண்டுகளுக்கு முன்பு சீன யாத்திரிகர் யுவான்சுவாங் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு பின்னர் சீனா திரும்பியபோது ஷியான் நகரில்தான் தங்கினார் என்று அப்போது ஜின்பிங் குறிப்பிட்டார்.இதனை மோடியும் ஏற்றுக் கொண்டு சீனாவுக்கு வருவதாக உறுதியும் அளித்தார்.

வெற்றிகரமான தனது இந்திய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று பிற்பகலில் ஜின்பிங் விமானம் மூலம் பெய்ஜிங் புறப்பட்டுச் சென்றார்.பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு குறித்து நேற்று இரு நாடுகளின் சார்பிலும் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-எல்லையில் அமைதியும், சாந்தமும் நிலவவேண்டியது அவசியம். அப்போதுதான் இரு நாடுகளின் உறவிலும் மேம்பட்ட நிலையை எட்ட முடியும். இதற்கு இரு நாடுகளுமே இணைந்து முயற்சிகளை மேற்கொள்வது முக்கியமானது.எல்லை பகுதியில் காணப்படும் கேள்விக்கான பிரச்சினைகளில் இரு நாடுகளும் தங்களது நட்புறவை கருத்தில் கொண்டு நேர்மையான, பொருத்தமான இரு தரப்பும் இசைவுடன் ஏற்றுக் கொள்ளத் தக்க ஒரு இறுதித் தீர்வை விரைவில் காண வேண்டும் என்ற உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் தங்களின் பேச்சுவார்த்தையின்போது தெரிவித்தனர்.இந்திய-சீன எல்லைப்பகுதிகளில் அரசியல் ரீதியான தீர்வைக் காண்பதற்கு சிறப்பு பிரதிநிதிகள் மூலம் ஆலோசனைகள் நடத்துவதற்கும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

மேலும் இரு நாடுகளும் 4-வது கூட்டு ராணுவ பயிற்சியை இரு தரப்பினருக்கும் இசைவான நேரத்தில் நடத்துவதெனவும், இதேபோல் கடற்படை, விமானப்படை போர் பயிற்சிகளையும் உரிய நேரத்தில் மேற்கொள்வதெனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.அமைதியை நிலைநாட்டுதல், தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள், கடல்வழி பாதுகாப்பு, பேரிடர் துயரத்தை தணித்தல் போன்றவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் இரு நாடுகளும் உறவை இன்னும் பலப்படுத்திக் கொள்ள முடியும் எனவும் ஒப்புக் கொண்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி