செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் இந்திய சினிமாவுக்கு அரசு உதவி செய்யவில்லை – கமல்ஹாசன் பேச்சு…!

இந்திய சினிமாவுக்கு அரசு உதவி செய்யவில்லை – கமல்ஹாசன் பேச்சு…!

இந்திய சினிமாவுக்கு அரசு உதவி செய்யவில்லை – கமல்ஹாசன் பேச்சு…! post thumbnail image
சாய் கோகுல் ராம்நாத் இயக்கத்தில் சேது, சந்தானம், விசாகா, நடிக்கும் படம் ‘வாலிபராஜா’. இப்படத்தை எச்.முரளி தயாரிக்கிறார். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சென்னை தேவி தியேட்டரில் நடந்தது. இதில் கமலஹாசன் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டு பேசியதாவது:–

இளைஞர்கள் இணைந்து இப்படத்தை எடுத்துள்ளனர். திரையுலகுக்கு வரும் புதியவர்களையும் இளைஞர்களையும் பாராட்ட வேண்டும். அதற்காகவே இந்த விழாவுக்கு வந்தேன். அப்படி பாராட்டாதவர்கள் யாரும் பெயர் வாங்க முடியாது. அதற்கு உதாரணம் எனது வாத்தியார் கே.பாலசந்தர். அவரும் இளைஞராகத்தான் இருக்கிறார். எனது ‘உத்தமவில்லன்’ படத்திலும் நடிக்கிறார்.

சினிமாவில் எத்தனையோ பேர் உழைக்கிறார்கள். பல திறமையானவர்களும் இருக்கிறார்கள். ஆனால் எல்லோரும் வெற்றி பெறவில்லை. என்னைவிட திறமையானவர்கள்கூட காணாமல் போய் இருக்கிறார்கள்.

ஒருமுறை தெருவில் நான் நடந்து போய்க் கொண்டு இருந்தேன். ‘அரங்கேற்றம்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படங்களை முடிந்திருந்த நேரம் அது. நடந்து போன என் அருகில் ஒரு கார் வந்து நின்றது. காருக்குள் டைரக்டர் பாலச்சந்தரும் ராம அரங்கண்ணலும் இருந்தார்கள். என்னை பார்த்து சிரித்துக் கொண்டே ஆபீசுக்கு வா என்றனர்.

ஏன் சிரிக்கிறார்கள். சட்டை அழுக்கா என்று முதுகு பக்கம் திரும்பினேன். பிறகு ஆபீஸ் போனேன். அப்போது சிரித்த காரணத்தை சொன்னார்கள். அவள் ஒரு தொடர்கதை படத்தில் நடிக்க ஸ்ரீகாந்தை அழைத்துள்ளனர். அவரிடம் கால்சீட் இல்லை. அவர் இல்லாமல் வேறு தெருவில போறவனையா கூட்டி வந்து நடிக்க வைக்க முடியும் என்று பாலசந்தர் பேசி உள்ளார். அப்போது தெருவில் நான் நடந்து போனதை பார்த்துள்ளனர். அதனால் என்னை பார்த்து சிரித்து ஆபீசுக்கு அழைத்ததை அறிந்தேன்.

அன்று தெருவில் நடந்து போனதால் இந்த அளவு உயர்ந்துள்ளேன். சினிமாவுக்கு இந்தியா முழுவதும் அரசுகள் உதவிகள் செய்து விடவில்லை. அதையும் மீறி இந்த தொழில் தடையில்லாமல் நடக்கிறது. இதில் இருப்பதை பெருமையாக கருதுகிறேன். இவ்வாறு கமலஹாசன் பேசினார்.

விழாவில் டைரக்டர் கே.வி.ஆனந்த், தயாரிப்பாளர்கள் கே.ஆர்., டி.சிவா, ஏ.எல்.அழகப்பபன், கே.ராஜன், சீனிவாசன், ஜே.கே.ரித்தீஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி இசையமைப்பாளர் ரதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனைவரையும் எச்.முரளி வரவேற்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி