செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் 500 “கோச்சடையான்” திருட்டு டி.வி.டி.க்கள் பறிமுதல்… சேலத்தில் பரபரப்பு …

500 “கோச்சடையான்” திருட்டு டி.வி.டி.க்கள் பறிமுதல்… சேலத்தில் பரபரப்பு …

500 “கோச்சடையான்” திருட்டு டி.வி.டி.க்கள் பறிமுதல்… சேலத்தில் பரபரப்பு … post thumbnail image
சேலம் :- சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த கோச்சடையான் பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று வெளியிடப்பட்டது. படம் வெளியான 24 மணி நேரத்திலேயே அதன் திருட்டு டி.வி.டி.க்கள் சேலத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக ரசிகர் மன்றத்துக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து மாவட்ட தலைவர் பழனிவேல் மற்றும் ரஜினி ரசிகர்கள் சிலர் வீரபாண்டியார் நகர் ஆலமரக்காடு பகுதியில் ஒரு கேசட் கடையை கண்காணித்து கொண்டு இருந்தனர்.

அப்போது காலை 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சில பண்டல்களை எடுத்து கொண்டு முதல் தளத்தில் உள்ள ஒரு கேசட் கடைக்கு கொண்டு சென்றனர். சந்தேகம் அடைந்த பழனிவேல் மற்ற நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். இதை யடுத்து அங்கு துணை தலைவர் சித்தேஸ்வரன், இணை செயலாளர் பாலகிருஷ்ணன், செயலாளர் தளபதிராம், ரஜினி பட்டதாரிகள் பேரவை ஆடிட்டர் சீனிவாச பெருமாள், முருகன், சுக்கம்பட்டி பிரபு உள்ளிட்ட ரசிகர்கள் திரண்டு வந்தனர். தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் திரண்டு சென்று பார்த்த போது கடையில் பூபதி, மோகன் ஆகிய 2 பேர் இருந்தனர்.

அப்போது அவர்கள் அந்த பண்டல்களை பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பண்டல்களில் 500–க்கும் மேற்பட்ட கோச்சடையான் திருட்டு டி.வி.டி. கேசட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அவர்களிடம் எங்கு இருந்து இந்த கேசட்டுகள் வந்தது என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்து கொண்டே அவர்கள் நைசாக அங்கிருந்து சென்று விட்டனர்.

இதுப்பற்றி ரஜினி ரசிகர்கள் பள்ளப்பட்டி போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்களிடம் ரசிகர்கள் கோச்சடையான் திருட்டு டி.வி.டி.க்களை ஒப்படைத்தனர். மேலும் இதே போல் சுவர்ணபுரி பகுதியிலும் ஒரு கடையில் கோச்சடையான் கேசட் விற்கப்படுவதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த கேசட்டுகளை அள்ளி சென்றனர். அந்த கடையையும் பூட்டினர். மேலும் இது தொடர்பாக ரஜினி ரசிகர் மன்றத்தினர் போலீசில் புகார் மனு கொடுத்தனர். மேலும் இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தனர்.

இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் பழனிவேல் கூறியதாவது:–

மிக பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் தலைவர் ரஜினியின் கோச்சடையான் படம் வெளியான 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் முழுவதும் திருட்டு டி.வி.டிக்கள் விற்பனை செய்யப்படுவதாக பல இடங்களில் ரசிகர்களிடம் இருந்து எனக்கு தகவல் கிடைத்தது. அதுவும் மோட்டார் சைக்கிள்களில் கொண்டு வரப்பட்டு கடைகளில் பதுக்கப்படுவதாகவும் கூறினர்.

இதையடுத்து நான் காலை 6 மணிக்கே இந்த பகுதியில் வந்து ஒரு கேசட் கடையை கண்காணித்து கொண்டு இருந்தேன். அப்போது மோட்டார் சைக்கிளில் பண்டல்கள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் சென்று பார்த்த போது கோச்சடையான் திருட்டு கேசட் இருப்பது தெரியவந்தது. எனவே அதை பிடித்து போலீசில் ஒப்படைத்து உள்ளோம். இந்த சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்றும், இந்த கேசட்டுகள் எங்கிருந்து வந்தது என்றும் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி