செய்திகள்,திரையுலகம் வெற்றிப்பயணம் (2014) திரை விமர்சனம்…

வெற்றிப்பயணம் (2014) திரை விமர்சனம்…

வெற்றிப்பயணம் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஜெயசூர்யா, தாய் சீதாவுடன் வாழ்ந்து வருகிறார். கம்ப்யூட்டர் சென்டரில் வேலைப் பார்த்துக் கொண்டு நாயகி மீரா நந்தன் மீது காதல் கொள்கிறார். ஒருநாள் ஜெயசூர்யா பேங்கிற்கு சென்று வரும் வழியில், பைக்கில் வந்த முகேஷ் அவரை இடித்துவிட்டு செல்கிறார். அப்போது முகேஷ் தவறவிட்ட பர்சை எடுத்த ஜெயசூர்யா, அதில் உள்ள விலாசத்திற்கு சென்று ஒப்படைக்கிறார். அன்று முதல் இருவரும் நண்பர்கள் ஆகின்றனர்.

ஒருநாள் சீதாவின் உடல்நிலை சரியில்லாமல் போகிறது. அவர் அதிக நாட்கள் உயிருடன் இருக்கமாட்டார்கள் என்று டாக்டர் கூறுகிறார். இதனால் வருத்தமடையும் ஜெயசூர்யா, தாய் உயிருடன் இருக்கும் வரையில் அவரை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். தாயின் பிறந்தநாள் வருவதால் அவருக்கு ஒரு பரிசு வாங்குவதற்காக தன் முதலாளியிடம் ஆயிரம் ரூபாய் கேட்கிறார். அதற்கு முதலாளி தர மறுக்கிறார்.இதனால் வாடிக்கையாளர் ஒருவர் தரும் ஆயிரம் ரூபாயை வைத்து, கம்ப்யூட்டர் சென்டரில் உள்ள கலர் பிரிண்டர் மூலம் போலி ஆயிரம் ரூபாயை உருவாக்குகிறார். அந்த பணத்துடன் மீரா நந்தன் வேலை செய்யும் கடைக்குச் சென்ற ஜெயசூர்யா, தாய்க்கு பரிசுப் பொருளை வாங்க முயற்சி செய்கிறார். ஆனால், கள்ள நோட்டைக் கொடுத்தால் மீராவிற்கு வேலையில் ஆபத்து ஏற்படும் என்று நினைத்து அதை மாற்றாமல், நண்பர் முகேசிடம் சென்று ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி அதை மீராவிடம் கொடுத்து பரிசுப் பொருள் வாங்குகிறார்.

நண்பர் முகேஷ் பாரில் இருக்கும் போது, ஜெயசூர்யா அந்த கள்ளநோட்டைக் கொடுத்து கடனை அடைக்கிறார். இதனால் மாட்டிக்கொள்வோம் என்று பயந்த ஜெயசூர்யா, மறுநாள் முகேசை சந்தித்து அது கள்ளநோட்டு என்று சொல்கிறார். இதை அறிந்த முகேஷுக்கு, அச்சு அசல் நோட்டு போல் இருந்த கள்ள நோட்டைப் பார்த்ததும், இந்த டெக்னிக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று ஜெயசூர்யாவிடம் கேட்கிறார். இதற்கு உடன்படாத ஜெயசூர்யாவை மிரட்டி கள்ள நோட்டுகளை அச்சடிக்க வைக்கிறார். முதலில் 25000 ரூபாய் பணத்தை உருவாக்குகிறார் ஜெயசூர்யா. அதை இருவரும் சேர்ந்து நல்ல நோட்டுகளாக மாற்ற முயற்சி செய்து அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.இதற்கிடையில் மீரா நந்தனும் ஜெயசூர்யாவின் காதலை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், ஜெயசூர்யா கள்ளநோட்டுகள் அடிப்பதை தெரிந்துக் கொண்ட மீரா நந்தன், அவரை வெறுக்கிறார்.
இதனால் கள்ளநோட்டுகளை இனிமேல் அடிக்க கூடாது என்று முடிவெடுத்து, முகேசிடம் தன் நிலையை விளக்கி கூறுகிறார். ஆனால், பேராசையில் இருந்த முகேசால் நண்பனின் முடிவை ஏற்க முடியவில்லை.

கடைசியாக ஒரு தடவை மட்டும் 10 கோடி ரூபாய்க்கு கள்ளநோட்டுகளை அச்சடித்துவிட்டு, அத்துடன் தொழிலை விட்டுவிடலாம், எல்லா பிரச்சினைகளும் சரியாகிவிடும் என்று மூளைச் சலவை செய்கிறார். அந்த முயற்சி பலிக்காததால், மிரட்டி காரியத்தை சாதிக்கிறார் முகேஷ்.பின்னர் பக்கத்து மாநிலத்தில் தேர்தலையொட்டி கறுப்பு பணம் கைமாறுவதை தெரிந்துகொண்ட அவர்கள், சூழ்ச்சி செய்து கறுப்பு பணத்தை கொள்ளையடித்து, தங்களிடம் இருந்த கள்ளநோட்டுகளை மாற்றுகிறார்கள். கொள்ளையடித்த பணத்தை கலாபவன் மணியிடம் கொடுத்து வைக்கிறார்கள். இதை அறிந்து போலீஸ் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.இறுதியில் 10 கோடி பணத்தை இவர்கள் பிரித்துக் கொண்டார்களா? அல்லது போலீசிடம் மாட்டிக்கொண்டார்களா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகன் ஜெயசூர்யா சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார். படம் முழுக்க சோகமாகவே வலம் வருகிறார். ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயற்சி செய்யும் காட்சிகளிலும், தாய் சீதாவின் பாசத்திற்காக ஏங்கும் காட்சிகளிலும் இவருடைய நடிப்பு திறமையை பாராட்டலாம். நாயகி மீரா நந்தன், ஜெயசூர்யாவை வெறுக்கும் காட்சிகளில் அசத்தல் நடிப்பு.முகேஷின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம். காமெடியிலும், ஜெயசூர்யாவை மிரட்டுவதிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். சில காட்சிகள் மட்டும் வந்தாலும் கலாபவனின் வில்லத்தன நடிப்பை ரசிக்கலாம். இசையிலும், ஒளிப்பதிவிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.முற்பகுதியில் திரைக்கதை மெதுவாக சென்றாலும் பிற்பகுதியில் விறுவிறுப்பை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சுவாதி பாஸ்கர்.

மொத்தத்தில் ‘வெற்றிப்பயணம்’ விவேகமான பயணம்…..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி