செய்திகள் பத்மநாபசுவாமி கோயிலில் மேலும் ஒரு ரகசிய அறை திறப்பு!…

பத்மநாபசுவாமி கோயிலில் மேலும் ஒரு ரகசிய அறை திறப்பு!…

பத்மநாபசுவாமி கோயிலில் மேலும் ஒரு ரகசிய அறை திறப்பு!… post thumbnail image
திருவனந்தபுரம்:-கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் ஏராளமான சொத்துக்களையும், நகைகளையும் வழங்கி உள்ளனர். மேலும் பல ஆண்டுகளாக இந்த கோவிலுக்கு வழங்கப்பட்ட காணிக்கைகளும் கணக்கில் அடங்காதது ஆகும்.விலை மதிக்க முடியாத இந்த தங்க, வைர நகைகள் மற்றும் சுவாமி சிலைகள் அபூர்வ பொருட்கள் இந்த கோவிலில் உள்ள ரகசிய அறைகளில் பல ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த ரகசிய அறைகள் பலத்த பாதுகாப்புடன் திறக்கப்பட்டு அதில் இருந்த ஆபரணங்கள் கணக்கிடப்பட்டது. அப்போது அவை பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்களாக இருப்பது தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து இந்த கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் விசேஷ போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு ஒரு போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 24 மணி நேரமும் ஆயுதப்போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமிராவும் பொருத்தப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களும் தீவிர சோதனைக்கு பிறகு தான் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.பத்மநாபபுரம் சுவாமி கோவிலில் இருந்த பொக்கிஷங்கள் மதிப்பிடப்பட்டு அந்த அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொக்கிஷங்கள் மதிப்பு பற்றி எந்த தகவல்களையும் வெளியிடக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் இதுவரை ரகசியமாக உள்ளது.

இந்நிலையில் திருவனந்தபுரம் கோவில் பொக்கிஷங்கள் குறித்த விவரங்களை உடனுக்குடன் சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரிவிப்பதற்காக கோபாலகிருஷ்ணன் என்பவரை சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது.இதைத்தொடர்ந்து அவர் பத்பநாபசுவாமி கோவிலில் இன்னும் திறக்கப்படாமல் உள்ள அறைகளை ஆய்வு செய்து வருகிறார். அப்போது சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் திறக்கப்படாமல் இருந்த ஒரு அறையை திறந்து பார்வையிட்டார். போலீசார் முன்னிலையில் அந்த அறையின் பூட்டுகள் உடைக்கப்பட்டது.அப்போது அந்த அறையில் பல கிலோ எடையிலான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் பழங்கால ஆபரணங்கள் மற்றும் ஏராளமான பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பொருட்களின் மதிப்பு கணக்கிடப்பட்டு விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்படும் என்று அதிகாரி கோபால கிருஷ்ணன் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி