அதிலும் குறிப்பாக நடிகர் விஜய் தனது ரசிகர்கள் மூலம் அரசியலுக்கு போவதற்கான எல்லா முன்னேற்பாடுகளையும் நற்பணி இயக்கத்தை ஆரம்பித்து செய்து வந்தார். இதில் முக்கியப் பங்கு அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரைத் தான் போய்ச்சேரும். ‘தலைவா’ ரிலீஸுக்கு முன்புவரை தனது மகன் விஜய்யை அப்படியே அரசியலுக்குள் களம் இறக்கி விட எல்லா வேலைகளையும், சிறப்பாக செய்து வந்தார்.ஆனால் இதையெல்லாம் ஏற்கனவே ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கின்ற அரசியல்வாதிகள் சும்மா விடுவார்களா என்ன?
பிறந்தநாளை பெரிய பெரிய மைதானத்தில் பந்தல் அமைத்து கொண்டாடுவது, நற்பணி இயக்கம் என்ற பெயரில் அரசியல்வாதிகள் செய்யும் எல்லாவிதமான ‘நலத்திட்ட’ உதவிகளையும் செய்வது என்று அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனிக்கத் தவறவில்லை.
விஜய்யின் இந்த அரசியல் நோக்கிய நகர்வை தோற்கடிக்க சரியான தருணம் பார்த்த ஆளும்கட்சி ‘தலைவா’ படத்தில் ஒரு பெரிய ஆப்பை சொருகி விட்டு வேடிக்கை பார்த்தனர். இந்த ஆப்பை கொஞ்சமும் எதிர்பார்க்காத விஜய் நடுங்கிப் போய் தனது அரசியல் ஆசைக்கு அப்போதே பூட்டு போட்டு விட்டார்.அதோடு விடவில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்றிந்த நம்மை தேவையில்லாமல் அரசியல் ஆசை காட்டி நம்மை சந்தி சிரிக்க வைத்த அப்பா எஸ்.ஏ.சியை ஓரங்கட்டி விட்டார் விஜய்.அதன் விளைவு சமீபகாலமாக தான் எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் அப்பா எஸ்.ஏ.சியின் கருத்தை விஜய் கேட்பதில்லை. எந்த ஒரு முடிவையும் விஜய் மட்டும்தான் எடுக்கிறார். ஒரு வார்த்தை கூட அப்பா எஸ்.ஏ.சியின் ஆலோசனைகளை அவர் கேட்பதில்லை.
அதில் ஒரு முக்கியமான முடிவு தான் அரசியல் ஆசைக்கு நிரந்தரமாக முடிவு கட்டுவது என்பது. ஆமாம், இனி எந்த காரணத்தை கொண்டும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும், மார்க்கெட் இருக்கும் காலம் வரை சினிமாப் படங்களில் நடித்து விட்டு ஓய்வு பெறுவது என்றும் அதிரடி முடிவை எடுத்திருக்கிறாராம் விஜய்.
விஜய்யின் இந்த அதிரடி முடிவைக் கேள்விப்பட்டு வட்டம், மாவட்டம் என அரசியல் ஆசையோடு காத்திருந்த விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து கொஞ்சம் கொஞ்சமாக விஜய் நற்பணி மன்றத்தை விட்டு விலகி ஓட ஆரம்பித்துள்ளனர். மேலும் விஜய் நற்பணி மன்றத்தில் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தரப்படுவதாகவும், மற்றவர்களை மன்றத்தலைமை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்று விஜய் ரசிகர்கள் புகார் கூற ஆரம்பித்துள்ளனர். அத்தோடு அவர்கள் ஆம்- ஆத்மி உள்ளிட்ட பிற அரசியல் கட்சிகளில் கூட்டம் கூட்டமாக சேரத் துவங்கியுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு ஜாபர் சாதிக் தலைமையில் செயல்பட்டு வந்த திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் முழுமையாக கலைக்கப்பட்டு விட்டது. மன்றத்தை கலைத்த அவர்கள் அத்தனை பேரும் அப்படியே ‘ஆம் ஆத்மி’ கட்சியில் இணைந்துள்ளனர். இதேபோல் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலுள்ள விஜய் நற்பணி மன்ற நிர்வாகிகளும் இந்த ‘விலகல்’ முடிவை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி