செய்திகள் குளிர்கால ஒலிம்பிக் போட்டி ரஷ்யாவில் நடந்தால் கடும் விளைவு-அதிபருக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை…

குளிர்கால ஒலிம்பிக் போட்டி ரஷ்யாவில் நடந்தால் கடும் விளைவு-அதிபருக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை…

குளிர்கால ஒலிம்பிக் போட்டி ரஷ்யாவில் நடந்தால் கடும் விளைவு-அதிபருக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை… post thumbnail image
மாஸ்கோ:-ரஷ்யாவில் சோச்சி நகரத்தில் வரும் பிப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ளன. இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் சென்ற மாதம் வோல்காகிராடில் நடந்த இரண்டு தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல்கள் ஒலிம்பிக் போட்டிகளுக்கான அச்சுறுத்தல்களைத் தோற்றுவித்தன.

34 பேர் கொல்லப்பட்ட இந்த சம்பவங்களுக்கு அப்போது எந்த இயக்கமும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. நாட்டின் உச்சபட்சமான பாதுகாப்பு குறித்த ஐயங்களையும் இந்த வெடிகுண்டு சம்பவங்கள் ஏற்படுத்தின.தற்போது இந்த வெடிகுண்டுத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டும், ஒலிம்பிக் போட்டிகளை அச்சுறுத்தியும் நேற்று இணையதள வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ரஷ்யாவின் வடக்கு காகசஸ் மலைப்பகுதியைச் சேர்ந்த விலாயத் டகேஸ்டான் என்ற போராளிக்குழு இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்பதாகத் தெரிவித்துள்ளது. சுலைமான், அப்துர்ரஹ்மான் என்ற இரு தீவிரவாதிகளே தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறும் அந்த அறிக்கை அவர்கள் உடலில் வெடிகுண்டுகள் வைத்துக் கட்டப்படுவது போன்ற காட்சியையும் வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டால் ஆப்கானிஸ்தான், சோமாலியா, சிரியா உட்பட உலகம் முழுவதும் முஸ்லிம்கள் சிந்திய இரத்தத்திற்கு ஒரு பரிசு கொடுக்கப்படும் என்றும், போட்டியைக் காண வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கும் ஒரு பரிசு கிடைக்கும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை ரஷ்ய மொழி பேசும் இரு ஆண்கள் எச்சரிப்பது போன்ற காட்சிகள் இந்த வீடியோவில் வருகின்றன. 49 நிமிடம் ஓடும் இந்த வீடியோவின் பின்னணியில் அல்-கொய்தா இயக்கத்தினர் உபயோகப்படுத்துவது போன்ற அரபி வார்த்தைகளைக் கொண்ட கருப்பு நிற திரை காணப்பட்டது என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன.ரஷ்யாவின் பாதுகாப்பு சேவைகளிடமிருந்து இந்த வீடியோ குறித்து எந்தவிதக் கருத்தும் வெளியிடப்படவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி