செய்திகள்,முதன்மை செய்திகள் 50 துணைமின் நிலையங்கள் – முதல்வர் திறப்பு…

50 துணைமின் நிலையங்கள் – முதல்வர் திறப்பு…

50 துணைமின் நிலையங்கள் – முதல்வர் திறப்பு… post thumbnail image
முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பு:-

மின்பாதையில் ஏற்படுகின்ற மின்சக்தி இழப்பையும், மின்பராமரிப்பு செலவினங்களையும் குறைத்து, குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படுகின்ற உச்சக்கட்ட மின் தேவையை நிறைவு செய்து, சரியான மின் அழுத்தத்துடன் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்கிட புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பது இன்றியமையாததாகும்.

இதை கருத்தில் கொண்டு புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஏப்ரல் 25–ந் தேதி அன்று சட்டசபையில் அறிவித்தார்.

50 துணை மின்நிலையங்கள்

அதன் அடிப்படையில், மதுரை மாநகர், மகாத்மா காந்தி நகரில் 4 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 33 கி.வோ. துணை மின் நிலையத்தை காணொலி காட்சி மூலமாகவும்; 505 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 2 எண்ணிக்கையிலான 230 கி.வோ. துணை மின் நிலையங்கள், 29 எண்ணிக்கையிலான 110 கி.வோ. துணை மின் நிலையங்கள், 18 எண்ணிக்கையிலான 33 கி.வோ. துணை மின் நிலையங்கள் என மொத்தம் 509 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 50 துணை மின் நிலையங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று கோடநாடு முகாம் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலமாக திறந்துவைத்தார்.

சூரிய மின்சக்தி

சூரிய ஒளியானது, மனித குலத்திற்கு தூய்மையானதும், சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தாததும், அளப்பரியதும் மற்றும் குறைவற்றதுமான எரிசக்தி ஆதாரம் கொண்டதாகும். சூரிய சக்தியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்து தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்துடன் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, ‘தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை–2012’–ஐ அறிமுகப்படுத்தினார். அதன் வாயிலாக சூரியசக்தியில் இருந்து மின் உற்பத்தி பெருக்கத்திற்கு ஒரு புதிய பாதை வகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதுப்பிக்கத்தக்க மற்றும் மாசற்ற எரிசக்தியினை ஊக்குவித்து அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சென்னை தலைமை அலுவலக கட்டிட மேற்கூரையில் 55 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 60 கிலோ வாட் திறன் கொண்ட சூரியசக்தி மின்உற்பத்தி அமைப்பை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.

உபரி மின்சாரம்

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சென்னை தலைமை அலுவலக கட்டிட மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி மின் உற்பத்தி மூலம், வருடத்திற்கு சுமார் ஒரு லட்சம் மின் யூனிட் அளவிலான மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும்.

மேலும், இந்த சூரியசக்தி மின்உற்பத்தி நிலையத்தில் பெறப்படும் மின்சாரம் மின்வாரிய தலைமை அலுவலகத்தின் தினசரி மின் தேவையின் ஒரு பகுதியினை ஈடுசெய்ய பயன்படுவதோடு விடுமுறை தினங்களில் உற்பத்தியாகும் உபரி மின்சாரம் மின் கட்டமைப்பு தொகுப்புடன் இணைக்கப்படும்.

சிறு விளக்குகள்

பொதுமக்களிடையே மின் சேமிப்பினை ஊக்குவிக்கும் வகையிலும், திறன்மிக்க மின்விளக்குகளின் சந்தை விலையை கருத்தில் கொண்டும், ஏழை, எளிய மக்களும் இத்தகைய மின்விளக்குகளை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும், தமிழகத்தில் உள்ள சுமார் 14 லட்சத்து 62 ஆயிரம் குடிசை மின்இணைப்பு நுகர்வோர்களுக்கு விலையில்லா திறன்மிக்க சிறுகுழல் விளக்குகளை வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, குடிசை மின் இணைப்பு நுகர்வோருக்கு 8 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான விலையில்லா சிறுகுழல் விளக்கு வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்து, முதற்கட்டமாக 7 லட்சம் குடிசை மின்இணைப்பு நுகர்வோர்களுக்கு விலையில்லா 9 வாட் சிறுகுழல் விளக்குகளை வழங்குவதன் அடையாளமாக 7 பயனாளிகளுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா, திறன் மிக்க சிறுகுழல் விளக்குகளை வழங்கினார்.

இந்த திட்டத்தின் பயனாக மட்டுமே சுமார் 40 மெகாவாட் மின்சாரத்தை சேமிக்க இயலும். மொத்தத்தில் 519 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மின் திட்டங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்து, மின் வினியோகத்தை தொடக்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், எரிசக்தி துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் கு.ஞானதேசிகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி