அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் இந்தியாவில் ரூ.24 ஆயிரம் கோடி முதலீடு – ஒபாமா அறிவிப்பு!…

இந்தியாவில் ரூ.24 ஆயிரம் கோடி முதலீடு – ஒபாமா அறிவிப்பு!…

இந்தியாவில் ரூ.24 ஆயிரம் கோடி முதலீடு – ஒபாமா அறிவிப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-டெல்லியில் தாஜ் பேலஸ் ஓட்டலில், இந்தோ-அமெரிக்க முதன்மை செயல் அதிகாரிகள் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. அதில், இந்திய தரப்பில், முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, சுனில் மிட்டல், அதானி குழும தலைவர் கவுதம் அதானி, எஸ்ஸார் குழும தலைவர் சசி ரூயா, மகிந்திரா அன்ட் மகிந்திரா தலைவர் ஆனந்த் மகிந்த்ரா உள்பட 17 தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

அமெரிக்க தரப்பில், பெப்சிகோ நிறுவனத்தைச் சேர்ந்த இந்திரா நூயி உள்பட 30 பேர் கலந்து கொண்டனர்.இந்திய தொழில் அதிபர்கள், அமெரிக்காவின் விசா நிபந்தனைகள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேசினர்.இந்த கூட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டனர். அவர்களும் பேசினர். ஒபாமா பேசுகையில் கூறியதாவது:- புலம் பெயர்ந்த இந்தியர்கள் வியத்தகு நிறுவனங்களை உருவாக்கி உள்ளனர். அவர்களுக்கு வியாபார திறமை உள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையான கூட்டணி கொண்ட நாடுகள். இரு நாட்டு மக்களும் பலன் அளிக்கும் வகையில், இன்னும் நிறைய வர்த்தகத்தையும், முதலீட்டையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இரு நாட்டு வர்த்தகம், கடந்த சில ஆண்டுகளில் 60 சதவீதம் உயர்ந்துள்ளது. இவ்வாறு ஒபாமா கூறினார்.

இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:-எல்லா பெரிய திட்டங்களையும், நானே நேரடியாக கண்காணிப்பேன். இந்தியாவில் மின் கொள்முதலை ஊக்கப்படுத்த, பொருளாதாரத்தை மேம்படுத்துவது அவசியம். அதற்கு உள்கட்டமைப்பு மற்றும் வேளாண்மை துறையில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.எல்லா பிரச்சினைகளுக்கும் நல்லாட்சியும், மக்களுக்கு சாதகமான அணுகுமுறையுமே தீர்வாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் நடைபெற்ற இந்திய-அமெரிக்க வர்த்தக மாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பேசியதாவது:-

இந்தியாவுடனான வர்த்தகத்தை பெருக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தியாவில் அமெரிக்க அமைப்புகள் ரூ.24 ஆயிரம் கோடி முதலீடுகளை செய்யும். இதில் ரூ.6 ஆயிரம் கோடி சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடனாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார். பிரதமர் மோடி பேசுகையில், இந்திய அரசு, அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழ்நிலையை அளிக்கும். அத்துடன், அவர்களின் திட்டங்களில் அவர்களுக்கு வழி காட்டும். உங்களுடைய அறிவுசார் சொத்துரிமை பாதுகாக்கப்படும் என்று கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி